குடியினால் விழுந்த ஆரோனின் குமாரர்கள்.
உங்கள் சிந்தனைக்கு:
குடியினால் விழுந்த ஆரோனின் குமாரர்கள்.
"நீயும் உன்னோடேகூட உன் குமாரரும் சாகாதிருக்கவேண்டுமானால், ஆசரிப்புக் கூடாரத்துக்குள் பிரவேசிக்கிறபோது, திராட்சரசத்தையும் மதுவையும் குடிக்கவேண்டாம்"
லேவியராகமம் 10:9
லேவியராகம புத்தகத்தில் கர்த்தர் மோசேயிடம் மட்டும்தான் ஆசரிப்புக் கூடாரத்தினுடைய பணிகளைப் பற்றியும் உணவு முறைகளைப் பற்றியும் பலவித கட்டளைகளை சொல்லி இருக்கிறார்.
ஆனால் இந்த ஒரு இடத்தில் மட்டும் தான் ஆரோனோடு தேவன் பேசியிருக்கிறார்.
அதுவும் எப்போது என்றால் அவருடைய இரண்டு மகன்களும் தேவன் அங்கீகரிக்காத நெருப்பை பலிபீடத்தில் கொண்டு தூபம் காட்டின பொழுது, கர்த்தருடைய சன்னிதானத்தில் இருந்து புறப்பட்ட நெருப்பு அவர்களை சுட்டெரித்த போது இந்த வார்த்தைகளை சொன்னார்.
இதன் மூலம் நாம் யூகிக்கக்கூடிய காரியம் என்னவென்றால்
அன்றைய தினத்தில் அவர்கள் மது அருந்தின காரணத்தினால் தேவன் அங்கீகரிக்காத அந்த அக்கினியை தேவ சமூகத்திற்கு கொண்டு வந்தார்கள் என்று நாம் அறிந்து கொள்ளலாம்.
எனவே தான் இந்தக் கட்டளையை ஆரோனுக்கு அவனுக்கு பின்னால் தலைமை பொறுப்பை ஏற்கக்கூடிய பிள்ளைகளை குறித்து இந்த வார்த்தைகளை சொன்னார்.
காரணம் இந்த நாதாபும் அபியூவும் யார் என்றால் இவர்கள் தேவனை தரிசித்தவர்கள். சாதாரண ஆட்கள் அல்ல. யாத் 24:1-14
தேவனை தரிசித்தவர்களே மது போதையினால்( Under the influence of liquor)தேவனுக்குப் பிரியம் இல்லாத காரியத்தை செய்தார்கள் என்றால் எவ்வளவு தேவனை குறித்து பயமில்லாமல் அவர்கள் இருந்திருப்பார்கள்.
நாம் உணர்ந்து கொள்ளக்கூடிய எச்சரிப்பு என்னவென்றால் நிற்கிற எவனும் விழாதபடிக்கு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். 1 கொரி10:12.
எப்பொழுதும் எபே 5:18 ஐ பின்பற்ற வேண்டும்
துன்மார்க்கத்திற்கு ஏதுவான மதுபான வெறிகொள்ளாமல், ஆவியினால் நிறைந்து காணப்பட வேண்டும்.
மிகப்பெரிய ஆவிக்குரிய உயர்ந்த அனுபவங்கள், தரிசனங்களை நாம் பெற்றிருந்தாலும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் பரிசுத்தத்தைக் காத்துக் கொள்ள நம்மால் முயன்றதை செய்ய வேண்டும்.
இதுவே தேவன் நம்மிடம் எதிர்பார்க்கும் காரியம்.
நாம் பெற்ற அனுபவங்கள் நம்மை பரலோகத்திற்கு கொண்டு செல்லாது .
நாம் வாழ்ந்த வாழ்க்கை தான் நம்மை விண்ணகத்திற்கு அழைத்து செல்லும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.