Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

*யோபு புத்தகம் –*Expository Commentary on the Book of*Job *வேதபாடம் – 5
*உங்கள் சிந்தனைக்கு*

*யோபு புத்தகம் –* *Expository Commentary on the Book of* *Job*
*வேதபாடம் – 5*

*Unhappy Birthday*

*யோபு சபித்த இரண்டு இரவுகள் – ஏனென்று கேட்ட நான்கு கேள்விகள்*

வேதாகமப் பகுதி: யோபு 3ஆம் அதிகாரம்

யோபு மிகுந்த செல்வந்தராகவும், சமூகத்தில் மதிப்புமிக்க தலைவராகவும் இருந்த ஒரு மனிதன். சோதனைகளுக்குப் பிறகு யோபு மேலும் 140 ஆண்டுகள் வாழ்ந்தார் (யோபு 42:16). சில வேதாகம அறிஞர்கள், யோபு சோதனைகளை அனுபவித்தபோது அவனுக்கு சுமார் 70 வயது இருந்திருக்கலாம் என்று கருதுகின்றனர்.

அதுவரை தேவனுடைய ஆசீர்வாதங்களோடும் செழிப்போடும் வாழ்ந்து வந்த யோபு, சடுதியில் தனது பிள்ளைகளையும், செல்வத்தையும், சுகத்தையும், உடல் ஆரோக்கியத்தையும் இழந்தான். தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டு நகரத்தின் ஒதுக்குப் பகுதியில் உள்ள குப்பைகளை கொட்டுகிற இடத்தில் ஒதுங்கி வாழ்ந்தான். அப்பொழுது அவனைத் தேடி நண்பர்கள் வந்தார்கள்.

இந்த புத்தகத்தின் 3ஆம் அதிகாரத்திலிருந்து 31ஆம் அதிகாரம் வரை அவனும் அவனது நண்பர்களும் உரையாடிய காரியங்களே காணப்படுகின்றன.

இந்த மூன்றாம் அதிகாரத்தில் யோபு கடவுளைத் தூஷிக்கவில்லை, மறுதலிக்கவில்லை, நிராகரிக்கவில்லை. ஆனால் யோபு புத்தகத்தின் 3ஆம் அதிகாரம் வேதாகமத்தில் மனித வேதனையின் ஆழத்தை வெளிப்படுத்தும் ஒரு உணர்ச்சிமிக்க அதிகாரமாகும். தன் செல்வத்தையும், பிள்ளைகளையும், உடல் நலத்தையும் இழந்து கடுமையான துன்பத்தில் இருந்த யோபு, பாவம் செய்யாமல் தனது துயரத்தை வெளிப்படுத்துகிறான்.

யோபு சபித்த இரண்டு இரவுகள்

1. தன் பிறந்த நாள் இரவு

“நான் பிறந்த நாள் அழிந்துபோகக்கடவது” (யோபு 3:3)

யோபு தன் பிறந்த நாளையே சபித்தான். துன்பம் இல்லாதிருந்தால் தான் பிறக்காமல் இருந்திருக்கலாமேங என்ற மனவேதனையில் இவ்வாறு கூறினான்.

2. தன் கருவுறுதல் அறிவிக்கப்பட்ட இரவு

“ஒரு ஆண் பிள்ளை உண்டானான் என்று சொல்லப்பட்ட இரவும் அழிந்துபோகக்கடவது” (யோபு 3:3)

தன் தாயின் கர்ப்பத்தில் தான் உருவான செய்தி அறிவிக்கப்பட்ட அந்த இரவையும் யோபு சபித்தான். தன் வாழ்க்கை இவ்வளவு துயரத்தைச் சந்திக்க வேண்டுமென்றால் அந்த இரவே இல்லாமல் போயிருக்கலாமே என்று எண்ணினான்.

இவ்வாறு யோபு பிறந்த நாள் இரவையும், கருவுறுதல் அறிவிக்கப்பட்ட இரவையும் சபித்தான். ஆனால் தேவனைச் சபிக்கவில்லை; தனது துயரத்தையே வெளிப்படுத்தினான்.

யோபு கேட்ட நான்கு “ஏன்?” கேள்விகள்

தன் வேதனையின் நடுவில் யோபு நான்கு முக்கியமான “ஏன்?” கேள்விகளை எழுப்புகிறான்.

1. நான் பிறக்கும்போதே ஏன் இறக்கவில்லை?

“நான் கர்ப்பத்திலிருந்து புறப்படும்போது ஏன் சாகாமற்போனேன்?” (யோபு 3:11)

துன்பத்தை அனுபவிப்பதைவிட பிறப்பிலேயே மரித்திருக்கலாமே என்று யோபு கேட்கிறான்.

2. நான் பிறந்தபின் ஏன் உயிரோடு காக்கப்பட்டேன்?

“என்னை ஏன் முழங்கால்களில் ஏந்தினார்கள்? நான் பாலுண்டதற்கு ஏன் முலைகள் இருந்தன?” (யோபு 3:12)

தன்னை வளர்த்து உயிருடன் வைத்ததற்கான காரணத்தை யோபு கேள்வி கேட்கிறான்.

3. துன்பப்படுகிறவர்களுக்கு ஏன் வாழ்க்கை கொடுக்கப்படுகிறது?

“துக்கப்படுகிறவனுக்கு ஏன் வெளிச்சம் கொடுக்கப்படுகிறது?” (யோபு 3:20)

தொடர்ந்து வேதனை மட்டுமே அனுபவிக்கும் மனிதனுக்கு வாழ்க்கையின் அர்த்தம் என்ன என்று கேட்கிறான்.

4. மனக்கசப்புள்ளவர்களுக்கு ஏன் உயிர் கொடுக்கப்படுகிறது?

“மனக்கசப்புள்ளவர்களுக்கு ஏன் ஜீவன் கொடுக்கப்படுகிறது?” (யோபு 3:20)

மரணத்தை விரும்பினாலும் அது வராமல், வேதனையில் வாழும் மனிதர்களைப் பற்றி யோபு இந்தக் கேள்வியை எழுப்புகிறான்.

யோபுவின் இந்தக் கேள்விகளுக்கு உடனடி பதில் கிடைக்கவில்லை. ஆனால் புத்தகத்தின் இறுதியில் யோபு தனது கேள்விகளுக்கான முழு விளக்கத்தை அல்ல, கேள்விகளுக்கு மேலான தேவனை அறியும் அனுபவத்தைப் பெற்றான்.

“இதற்கு முன் உம்மைக் குறித்து என் செவியினால் கேள்விப்பட்டேன்; இப்பொழுதோ என் கண் உம்மைக் காண்கிறது.” (யோபு 42:5)

யோபு 3ஆம் அதிகாரம் நமக்குக் கற்றுக்கொடுப்பது: துன்பத்தின் நேரத்தில் “ஏன்?” என்று கேட்பது பாவமல்ல; ஆனால் அந்தக் கேள்விகளின் நடுவிலும் தேவனை விட்டு விலகாமல் இருப்பதே விசுவாசத்தின் வெற்றியாகும்.

தன் பிறந்த நாளை சபித்த இன்னொரு தீர்க்கதரிசி எரேமியா (எரேமியா 20:14-18).

நமது ஆண்டவர் இயேசு கிறிஸ்து கூட கல்வாரி சிலுவையில்:

“என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்?” என்று பிதாவை நோக்கிக் கூப்பிட்டார்.

இயேசு கிறிஸ்து எல்லாவற்றையும் அறிந்தவராயிருந்தாலும், மனிதனுக்காக பாடுகளை அனுபவித்தவராக அந்த வேதனையின் ஆழத்தை வெளிப்படுத்தினார்.

இது போலத்தான் மனிதர்கள் எவ்வளவு ஆன்மீக காரியங்களில் பலமுள்ளவர்களாக இருந்தாலும், அதிலும் அளவிட முடியாத சோதனைகளைச் சந்திக்கும் பொழுது மனித உணர்வின் காரணமாக இப்படிப்பட்ட வார்த்தைகள் வெளிப்படுவது தவிர்க்க முடியாததாக இருக்கிறது.

“நான் பயந்தது எனக்கு நேரிட்டது” (யோபு 3:25)

என்று யோபு சொல்கிறான்.

பல ஆண்டுகளாக வசதியாகவும், துன்பத்தின் வாசனையே படாமலும் வாழ்ந்த யோபுவுக்கு இந்த திடீர் இழப்புகள் அவனை நிலைகுலையச் செய்துவிட்டன.

கிறிஸ்தவ வாழ்க்கையில் நாம் கற்றுக்கொள்ளக்கூடிய ஒரு பாடம் என்னவென்றால், எப்பொழுது வேண்டுமானாலும், எது வேண்டுமானாலும், எங்கேயும் நமக்கு நடக்கலாம்.

யாருமே பாடுகளை விரும்ப மாட்டார்கள். ஆனால் பாடுகள் இல்லாத வாழ்க்கையை கடவுள் நமக்கு அனுமதிக்கவில்லை.

“விசுவாசிகளுக்கு பாடுகளே வராது, கஷ்டங்களே வராது” என்ற போதனை மிகவும் ஆபத்தானது. அப்படிப்பட்டவர்கள் பாடுகளைச் சந்திக்கும் பொழுது அதற்கு ஈடுகொடுக்க முடியாமல் பின்மாற்றத்திற்கே சென்று விடுவார்கள்.

எனவே, நாம் எவ்வளவு விசுவாசமாக இருந்தாலும், எதையும் எதிர்நோக்கி வாழ கற்றுக்கொள்ள வேண்டும்.

“மனுஷருக்கு நேரிடுகிற சோதனைகளே உங்களுக்கும் நேரிட்டிருக்கிறது; தேவன் உண்மையுள்ளவர். நீங்கள் சகிக்கக்கூடியதற்கு மிஞ்சிச் சோதிக்கப்படும்படி அவர் விடமாட்டார்.” (1 கொரிந்தியர் 10:13)

நமது திராணிக்கு மேலாக ஆண்டவர் எதையும் சோதிக்க மாட்டார்.