எது தேவனுடைய கையில் உள்ள பலமுள்ள ஆயுதம்
✍️ உங்கள் சிந்தனைக்கு:
எது தேவனுடைய கையில் உள்ள பலமுள்ள ஆயுதம்?
ஆனாத்தின் குமாரன் சம்கார் எழும்பினான். அவன் பெலிஸ்தரின் அறுநூறு பேரை ஒரு தாற்றுக்கோலால் (மாட்டை அடிக்கும் கம்பினால்) முறியடித்தான். அவனும் இஸ்ரவேலை இரட்சித்தான். (நியாயாதிபதிகள் 3:31)
ஏகூத் இடதுகை பழக்கம் உடையவன்; அவன் மோவாப் அரசன் எக்லோனைத் தனது வாளால் வெட்டிச் சாய்த்தான்.
இந்த தேவனுடைய வார்த்தைகள், “எங்களுக்கு வரங்கள் இல்லை” என்று தவறாக எண்ணிக்கொள்ளும் விசுவாசிகளுக்கு மிகவும் உற்சாகமானவை.
கத்தி, வாள், ஈட்டி, குதிரைகள் போன்ற பலவிதமான கருவிகளை தங்களது வலது கையால் யுத்தத்தில் பயன்படுத்தியவர்கள்தான் பெரிய வீரர்களாகக் கணிக்கப்பட்ட காலம் அது. ஆனால் இந்த சம்கார், சாதாரண விவசாயி பயன்படுத்தும் மாட்டை அடிக்கும் கம்பினால் எதிரிகள் 600 பேரை கொன்றான் என்று வேதாகமம் சொல்லுகிறது.
விசுவாசிகளுக்கும் தேவன் ஏதாவது ஒரு வரத்தை அளித்திருக்கிறார். அந்த வரம் சிறியதாக இருந்தாலும் பெரியதாக இருந்தாலும், அதை பயன்படுத்தும் போது தேவன் நம்மில் பிரியப்படுகிறார்.
“நமக்கு ஒன்றும் இல்லை” என்று நினைத்து விசுவாசிகள் முடங்கி கிடக்கக் கூடாது. அவர்களுக்கு எதில் ஆர்வம் இருக்கிறதோ, அந்த காரியத்தில் ஏதாவது ஒன்றை ஆண்டவருக்காக செய்ய வேண்டும்.
மோசேயும் பவுலும் நன்கு கற்றறிந்திருந்தாலும், அவர்கள் தங்களை நாவன்மை உடையவர்கள் அல்ல என்று எண்ணினர். ஆனாலும் அவர்கள் தேவ சித்தத்திற்கு தங்களை ஒப்புக்கொடுத்தபோது, தேவன் அவர்களை வல்லமையாகப் பயன்படுத்தினார்.
நம்முடைய கைக்கு எது வாய்க்கிறதோ, அதை முதலில் செய்ய பழக வேண்டும். தலைவர்கள் அல்லது ஊழியர்கள் நம்மை உயர்த்துவார்கள் என்று எதிர்பார்க்க வேண்டாம். நாம் எதையும் எதிர்பாராமல் கர்த்தரை நம்பி செய்கிற ஊழியம் சிறியதாக இருந்தாலும், நம்முடைய நோக்கங்கள் சரியாக இருந்தால், தேவன் அதை நிச்சயமாக பெருக்குவார்.
உலகத்தின் பார்வையில் பலவீனமான பாத்திரங்களாக அல்லது கருவிகளாக கருதப்படுபவை, பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டவர்களின் கரங்களில் கூர்மையான பலமான ஆயுதங்களாக மாறும் என்பதை இந்த நிகழ்வின் மூலம் நாம் கற்றுக்கொள்ளலாம்.
“நம்மிடம் ஒன்றும் இல்லை” என்று சொல்லி ஒன்றும் செய்யாமல் இருப்பதை விட, நம்மிடம் உள்ளதை தேவன் கொடுத்ததாக நினைத்து ஆண்டவருக்காக செயல்படும்போது, அந்த காரியத்திற்கும் அந்த ஊழியத்திற்கும் தேவன் நமக்கு வாய்ப்பளிப்பார்.
சம்காரைப் பற்றி வேதாகமத்தில் ஒரே ஒரு வசனம் மட்டுமே உள்ளது (நியாயாதிபதிகள் 3:31). ஆனால் அது நமக்கு பல பாடங்களை போதிக்கிறது.
“Give whatever tools you have to the Lord, stand your ground courageously, and trust God to use what’s in your hand to accomplish great things for His glory.” – Charles Spurgeon
“The world is looking for better methods, but God is looking for better men and women who understand the basics: the power of the Holy Spirit, wise strategy, and steadfast courage.” – E. M. Bounds
ஒவ்வொரு விசுவாசியும் சம்காராகவும் ஏகூதாகவும் மாற எந்தத் தடையும் இல்லை.
—