Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

2 நாளாகமம் / குறிப்பேடுகள் புத்தகம் . ? வேதபாடம் – 20 : * *யூதா கோத்திரத்தின்_ அரசாட்சியின் வீழ்ச்சி *
உங்கள் சிந்தனைக்கு

2 நாளாகமம் / குறிப்பேடுகள் புத்தகம் .

? வேதபாடம் – 20 :

* *யூதா கோத்திரத்தின்_ அரசாட்சியின் வீழ்ச்சி *

சாலொமோன் ஆட்சிக்குப் பிறகு ஒருமைப்பட்ட இஸ்ரவேல் தேசம் வடக்கு மற்றும் தெற்கு என்று இரண்டாகப் டாகபிரிந்தது.

வடக்கு ராஜ்யமான இஸ்ரவேல் கிமு 933-ல் தொடங்கி கிமு 722-ல் முடிவடைந்தது. இதன் ஆட்சி காலம் மொத்தம் 211 ஆண்டுகள்.

தெற்கு ராஜ்யமான யூதா கிமு 933-ல் தொடங்கி கிமு 586 வரை தொடர்ந்தது. இதன் ஆட்சி காலம் 347 ஆண்டுகள்.

யூதா ராஜ்யத்தில் தாவீது வம்சத்தைச் சேர்ந்த 19 அரசர்களும், ஒரு புறஜாதி பெண்மணியான அத்தாலியாளும் ஆட்சி செய்தனர்.

இவர்களில் ஏழு பேர் தாவீதைப் போல கர்த்தருக்கு பிரியமான வழிகளில் நடந்தனர்.

பத்து அரசர்கள் இஸ்ரவேல் அரசர்களைப் போல கர்த்தரை விட்டு விலகி விக்கிரக வழிபாட்டில் ஈடுபட்டனர்.

இரண்டு அரசர்கள் சாலொமோனைப் போல ஆரம்பத்தில் நன்றாகத் தொடங்கி, இறுதியில் ஆவிக்குரிய ஓட்டத்தில் தோல்வியடைந்தனர்.

யூதா ராஜ்யத்தை ஆண்ட ஒரே பெண் அரசி அத்தாலியாள்.

தேவன் தாவீதைத் தெரிந்துகொண்ட காரணத்தினால் யூதா ராஜ்யம், இஸ்ரவேலைவிட அதிக ஆண்டுகள் நீடித்தது.

ஆயினும், கர்த்தரை முழுமையாகப் பின்பற்றாத, பின்னர் வந்த அரசர்களின் காரணமாக, யூதா ராஜ்யம் இறுதியில் பாபிலோனிய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் சென்றது.

இஸ்ரவேல் ராஜ்யம் அசீரியர்களின் (சமாரியா) கட்டுப்பாட்டுக்குள் சென்றது.

இஸ்ரவேல் வீழ்ந்தப் பிறகு சுமார் 136 ஆண்டுகளுக்குப் பின் யூதா ராஜ்யமும் பாபிலோனியர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

இந்த இரண்டு ராஜ்யங்களின் வீழ்ச்சிக்கான காரணங்களை ஆராய்ந்து பார்க்கும்போது, ஒரு முக்கியமான ஆவிக்குரிய சத்தியம் வெளிப்படுகிறது.

இஸ்ரவேல் ராஜ்யத்தின் வீழ்ச்சிக்கான காரணங்கள்:

இஸ்ரவேல் தேசத்தை ஆண்ட அனைத்து அரசர்களும் தேவனுடைய வழிகளில் நடக்காமல் விக்கிரகங்களை வழிபட்டார்கள். இதற்கான முக்கிய காரணம்:

ஆலயம் இல்லாத அரசாங்கம். ஒருமைப்பட்ட இஸ்ரவேல் தேசம் வடக்கு – தெற்கு என்று பிரிந்த பிறகு, இஸ்ரவேல் அரசனான யெரொபெயாம், மக்கள் எருசலேமுக்குச் சென்று பலி செலுத்தினால் அவர்கள் மறுபடியும் தாவீது வம்சத்திற்குத் திரும்பிவிடுவார்கள் என்று பயந்தான் (1 இராஜா 12:26–27).
அதனால் அவர் மக்களை எருசலேமுக்குச் செல்ல அனுமதிக்கவில்லை.

அதற்குப் பதிலாக பெத்தேல் மற்றும் தானில் தங்கக் கன்றுகளை உருவாக்கி அவைகளை வழிபட மக்களை ஊக்குவித்தான்.

லேவியர் அல்லாதவர்களை ஆசாரியர்களாக நியமித்தான். தேவன் நிர்ணயிக்காத பண்டிகைகளை அனுசரிக்க மக்களைத் தூண்டினான்.

தேவனால் கட்டளையிடப்படாத புதிய வழிபாட்டு முறைகளை, யெரொபெயாமுக்குப் பின் வந்த அரசர்கள் தொடர்ந்து பின்பற்றி, மக்களை முழுமையாக தேவனை விட்டு விலகச் செய்தார்கள்.

இதன் விளைவாக அந்த ராஜ்யம் அசீரியர்களின் கட்டுப்பாட்டுக்குள் விழுந்தது.

சுருக்கமாகச் சொன்னால், இஸ்ரவேல் மக்கள் ஆலயத்தை புறக்கணித்தார்கள்;

ஆலயத்தின் முக்கியத்துவத்தை உணராமல் போனார்கள்.

யூதா ராஜ்யத்தின் *நிலை :

யூதா ராஜ்யத்தில் ஏழு அரசர்கள் தேவனுக்கு பிரியமான வழிகளில் நடந்தார்கள்.

மற்றவர்கள் கர்த்தருடைய கட்டளைகளின்படி நடக்கவில்லை. இருந்தாலும், யூதா ராஜ்யத்தில் தேவாலயம் இருந்தது; பண்டிகைகள் அனுசரிக்கப்பட்டன; ஆசாரியர்களும் லேவியர்களும் ஆலயத்தில் பணிபுரிந்தார்கள்.

அவ்வப்போது ஆவிக்குரிய சீர்திருத்தங்களும் நடைபெற்றன.

யூதா ராஜ்யத்தில் சீர்திருத்தங்கள் பெரும்பாலும் ஆலயத்தில் தொடங்கின:

ஆசா பலிபீடத்தை மீட்டெடுத்தான்.

யோசபாத் தேசமெங்கும் போதகர்களை அனுப்பி மக்களுக்கு தேவனுடைய வார்த்தையை கற்றுக்கொடுத்தான்.

யோவாஸ் ஆலயத்தைப் புதுப்பித்தான்.

எசேக்கியா ஆலயத்தை மீண்டும் திறந்து வழிபாட்டை உயிர்ப்பித்தான்.

யோசியா ஆலயத்தைப் பழுதுபார்த்து, நியாயப்பிரமாண புத்தகத்தை மீண்டும் மக்களுக்குத் திருப்பிக் கொடுத்தான்.

ஆயினும், அத்தாலியாள், மனாசே, ரெகொபெயாம், அபியா, யோராம், அகசியா, ஆமோன், யோயாக்கீம் போன்ற அரசர்கள் தேசத்தில் விக்கிரக வழிபாட்டை தீவிரமாகப் புகுத்தினார்கள்.

ஆலயம் இருந்தது, ஆசாரியர்கள் இருந்தார்கள். ஆனால் சில காலங்களில் சாலொமோன் கட்டிய ஆலயம் பூட்டப்பட்டு இருந்தது;

வேத புத்தகம் மறைக்கப்பட்டு இருந்தது; பலிகள் செலுத்தப்படவில்லை

இதற்கான அடிப்படையான காரணம், மக்கள் சடங்குகளை முக்கியப்படுத்தி, தேவனுடனான உயிருள்ள உறவை இழந்ததே ஆகும்.

ஆசாரியர்கள், பண்டிகைகள், ஆலயக் கட்டிடம் ஆகியவற்றை பெருமைப்படுத்தினார்கள்;

ஆனால் ஆலயம் ஆவிக்குரிய வலிமையற்றதாக இருந்தது.

In 1 Chronicles, the emphasis is the importance of the temple in national life. However, in 2 Chronicles, the emphasis is the impotence of the temple in national life.

வழிபாடு சடங்காச்சாரமாக மாறியபோது, ஆலயம் வலிமையை இழந்தது.

இஸ்ரவேல் தேசம் ஆலயம் இல்லாமல் அழிந்தது. யூதா தேசம் ஆலயம் இருந்தும், வழிபாடுகள் இருந்தும், இறுதியில் எதிரிகளின் கட்டுப்பாட்டுக்குள் விழுந்தது.

இன்றைக்கு தேவன் நமக்குக் கற்பிக்கும் பாடங்கள்:

நம்முடைய சபைகள் வெறும் கட்டடங்களாக மட்டுமே இருக்கக்கூடாது.

சாலொமோன் கட்டிய ஆலயத்தில் தேவ மகிமை இறங்கியது போல, நாம் ஆராதிக்கும் இடங்களில் தேவனுடைய மகிமை வெளிப்பட வேண்டும்.

யூதா தேசத்தில் தேவாலயத்தில் வேத புத்தகம் காணாமல் போனது போல, இன்றைக்கு சபைகளில் வேதத்தின் முக்கியத்துவம் மறைக்கப்படக்கூடாது.

கர்த்தருடைய வார்த்தையும் வேத தியானமும் தேவன் கொடுத்த இடத்தை இழக்கக்கூடாது.

யூதா தேசத்தில் பண்டிகைகள் மற்றும் சடங்குகள் வெறும் சடங்காச்சாரமாக மாறினது போல,

இன்றைக்கு சபைகளிலும் பாரம்பரியங்கள், சடங்குகள், வேதத்தில் சொல்லப்படாத பண்டிகைகள், வேதத்தை ஒதுக்கி ஆட்சி செய்யத் தொடங்கியுள்ளன.

இன்றைக்கு பல சபைகளில் Formalism மேலோங்கியுள்ளது.

Form இருக்கிறது; Fire இல்லை.சடங்கு இருக்கிறது; சத்தியம் இல்லை.

ஆலயம் செல்லுதல், பலி செலுத்துதல், ஜெபம், உபவாசம், பண்டிகைகள் எல்லாம் இருக்கின்றன;

ஆனால் மனந்திரும்புதல் இல்லை, நீதியும் இரக்கமும் இல்லை, தேவனுடன் உண்மையான உறவும் இல்லை.

“இந்த ஜனங்கள் வாயினால் என்னை மதிக்கிறார்கள்; அவர்களுடைய இருதயம் என்னிடமிருந்து தூரமாக இருக்கிறது.” – ஏசாயா 29:13

2 நாளாகமம் புத்தகத்தை ஆழமாகத் தியானித்தால், இந்த சத்தியங்கள் தெளிவாக வெளிப்படுகின்றன.

அன்றைக்கு தேவனால் முன்குறிக்கப்பட்ட யூதா ராஜ்யம் பாபிலோனியர்களின் கட்டுப்பாட்டுக்குள் வர அனுமதிக்கப்பட்டது போல, இன்றைக்கும் நாம் அதே பாதையில் நடந்தால், தேவன் நம்மையும் மெதுவாக எதிரிகளின் அதிகாரத்துக்குள் ஒப்படைக்க அனுமதிப்பார்.

இதை உணர்ந்து சபைகள் மனந்திரும்பினால் நலம். இல்லையெனில், போலியான தீர்க்கதரிசிகளின் கவர்ச்சிகரமான வாக்குத்தத்தங்களால் ஏமாந்து, சபைகள் எதிரிகளின் கட்டுப்பாட்டுக்குள் விழும் காலம் மிகத் தொலைவில் இல்லை.