கடவுளுக்கு ஆபிரகாமும் வேண்டும்; ஈசாக்கும் வேண்டும்
*உங்கள் சிந்தனைக்கு...*
*கடவுளுக்கு ஆபிரகாமும் வேண்டும்; ஈசாக்கும் வேண்டும்*
நம்முடைய தேவன் ஆபிரகாமின் தேவன் மட்டுமல்ல; ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனும் ஆவார்.
யூத வம்சத்தின் வரலாறு ஆபிரகாமிடமிருந்து தொடங்கி, ஈசாக்கு, யாக்கோபு, யோசேப்பு என்று தொடர்கிறது.
இந்த நான்கு பேரின் வாழ்க்கையையும் கவனித்துப் பார்த்தால், தேவன் தம்முடைய நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு ஒரே மாதிரியான மனிதர்களை மட்டுமல்ல, பல்வேறு தன்மைகளும் பல்வேறு ஆவிக்குரிய நிலைகளும் கொண்டவர்களையும் பயன்படுத்துகிறார் என்பதை அறியலாம்.
ஆபிரகாமைப் பார்த்தால், அவர் விசுவாசத்தின் தகப்பன். ஆனாலும் அவருடைய வாழ்க்கையில் பலவீனங்களும் தோல்விகளும் இருந்தன. கர்த்தருடைய சித்தமின்றி எகிப்துக்குச் சென்றது, அதன் விளைவாக ஆகாரை மனைவியாக ஏற்றுக்கொண்டது, தன் மனைவியைத் தன் சகோதரி என்று கூறியதுபோன்ற தவறுகள் அவருடைய வாழ்க்கையில் காணப்படுகின்றன. இருந்தபோதிலும், தனது வாழ்க்கையின் இறுதியில், தன் மகன் ஈசாக்குக்கு ரெபெக்காளைத் திருமணம் செய்து வைத்து, தேவனுடைய திட்டத்தில் தன் பங்கை நிறைவேற்றி, தன் ஓட்டத்தை நிறைவு செய்தார்.
ஈசாக்கின் வாழ்க்கையை எடுத்துக்கொண்டால், அவரது ஆரம்ப வாழ்க்கை மிகவும் பிரகாசமாக இருந்தது. ரெபெக்காளைத் திருமணம் செய்து கொண்டார்; பிள்ளைப்பேறுக்காக தேவனை நோக்கி ஜெபித்தார். ஆனால் வாழ்க்கையின் இறுதியில், தேவனுடைய சித்தத்தை உணராமல், ஒரு உணவிற்காக ஏசாவை ஆசீர்வதிக்க நினைத்தது அவரது வாழ்க்கையில் ஒரு பெரிய ஆவிக்குரிய பலவீனமாக அமைந்தது. அவர் நீண்ட நாட்கள் வாழ்ந்திருந்தாலும், வேதாகமத்தில் அவரைப் பற்றிய குறிப்புகள் மிகவும் குறைவாகவே உள்ளன. இருந்தாலும், அவரும் தேவனுடைய திட்டத்தில் தன் பங்கை நிறைவேற்றினார்.
யாக்கோபைப் பார்த்தால், தகப்பனையும் சகோதரனையும் ஏமாற்றியவன். தன் தந்திரங்களாலும் வெகுமதிகளாலும் அனைத்தையும் சாதிக்கலாம் என்று எண்ணியவன். ஆனால் பெனியேலில் தேவனைச் சந்தித்த பிறகு, அவரது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டது. அதன்பிறகு அவர் தேவனோடு நடந்தார்; தன் ஓட்டத்தை வெற்றிகரமாக முடித்தார்.
யோசேப்பைப் பொறுத்தவரை, அவரது வாழ்க்கை மிகவும் வெற்றிகரமான ஆவிக்குரிய வாழ்க்கையாகத் திகழ்கிறது. வெளிப்படையான பாவங்கள் எதுவும் வேதாகமத்தில் பதிவு செய்யப்படவில்லை. பல சோதனைகளையும் துன்பங்களையும் கடந்து, தேவனுக்கு உண்மையாய் இருந்து, தன் ஓட்டத்தை ஜெயத்தோடு நிறைவு செய்தார்.
இவ்வாறு ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, யோசேப்பு ஆகிய நான்கு பேரும் வெவ்வேறு வாழ்க்கைப் பின்னணிகளிலும், வெவ்வேறு ஆவிக்குரிய நிலைகளிலும் இருந்தபோதிலும், தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றியவர்களே.
எல்லோரும் யோசேப்பைப் போலவே பிரகாசமான ஆவிக்குரிய ஓட்டத்தை ஓடி முடிப்பார்கள் என்று சொல்ல முடியாது. ஆனால் அதனால் அவர்கள் தேவனுக்குப் பயனற்றவர்கள் என்று அர்த்தமல்ல. ஆண்டவர் தம்மை ஆபிரகாமின் தேவன் என்று மட்டும் அறிமுகப்படுத்தவில்லை; ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனும் என்றும் தம்மை அடையாளப்படுத்துகிறார்.
அதேபோல, நம்முடைய சபைகளிலும் ஆபிரகாம்கள் இருக்கிறார்கள்; ஈசாக்குகளும் இருக்கிறார்கள்; யாக்கோபுகளும் இருக்கிறார்கள்; யோசேப்புகளும் இருக்கிறார்கள். எல்லா விசுவாசிகளும் ஒரே ஆவிக்குரிய முதிர்ச்சியிலும், ஒரே நிலைப்பாட்டிலும் இருப்பதில்லை. இயேசு கிறிஸ்துவின் பன்னிரண்டு சீடர்களும் பல்வேறு குணாதிசயங்களும் பின்னணிகளும் கொண்டவர்களாக இருந்தனர். அவர்களைக் கொண்டுதான் தேவன் உலகத்தை மாற்றினார்.
இந்த ஆவிக்குரிய சத்தியத்தை நாம் புரிந்துகொண்டால், ஆவிக்குரிய வெற்றி பெற்றவர்களைக் குறித்து அளவுக்கு மீறி பெருமைப்படுத்தவும் மாட்டோம்; பலவீனமான விசுவாசிகளை அற்பமாகவும் எண்ண மாட்டோம்.
*ஒருவருடைய ஓட்டம் சிறந்ததா அல்லது சிறப்பில்லாததா என்பதை இறுதியாகத் தீர்மானிப்பவர் தேவன் மட்டுமே.* *உலகம் கொடுக்கும் மதிப்பெண்கள் பல நேரங்களில் தவறாக இருக்கலாம்* .
இந்த உலகத்தில் தம்முடைய பரந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்கு கடவுளுக்கு ஆபிரகாமும் வேண்டும்; ஈசாக்கும் வேண்டும். யாக்கோபும் வேண்டும்; யோசேப்பும் வேண்டும்.
அதுமட்டுமல்ல, எல்லா தரப்பட்ட மக்களும், எல்லா இனத்தவரும், எல்லா மொழியினரும், எல்லா சமூகப் பின்னணியினரும் தேவனுடைய திட்டத்தில் இடம் பெற்றிருக்கிறார்கள். தேவன் தம்முடைய நோக்கத்தை ஒரு சிலரைக் கொண்டு மட்டுமல்ல, எல்லோரையும் பயன்படுத்தி நிறைவேற்றுகிறார்.
நம்முடைய கடவுளுக்கு எல்லோரும் வேண்டும்.
"இவரைத்தான் பயன்படுத்துவார்; இவரை பயன்படுத்தமாட்டார்" என்ற கணக்கு தேவனிடத்தில் இல்லை.
*அவர் யாரைக் கொண்டும் தம்முடைய நோக்கத்தை நிறைவேற்றுவார்; எல்லோரைக் கொண்டும் தமது மகிமையை* *வெளிப்படுத்துவார்.*
முடிவுரை
இந்த உலகத்தில் யார் பெரியவர், யார் சிறியவர் என்று மனிதர்கள் தீர்மானிக்கலாம்; ஆனால் யார் பயனுள்ளவர் என்பதைத் தீர்மானிப்பது தேவன் மட்டுமே. மனிதர்கள் வெளிப்புற வெற்றியையும், திறமையையும், புகழையும் பார்த்து மதிப்பிடுகிறார்கள்; ஆனால் தேவன் இருதயத்தையும், தமது நோக்கத்தை நிறைவேற்றும் உண்மைத்தன்மையையும் பார்க்கிறார்.
ஆகவே, ஆவிக்குரிய வாழ்க்கையில் மற்றவர்களோடு நம்மை ஒப்பிட்டுப் பெருமைப்படவும் கூடாது; தாழ்வுணர்ச்சியிலும் வாழக்கூடாது. *தேவன் ஒவ்வொருவருக்கும் ஒரு தனிப்பட்ட அழைப்பையும், ஒரு தனிப்பட்ட பணியையும், ஒரு* *தனிப்பட்ட ஓட்டத்தையும் கொடுத்திருக்கிறார்* . *அந்த ஓட்டத்தை உண்மையோடும், விசுவாசத்தோடும் முடிப்பதே நமது* *பொறுப்பு* .
ஆபிரகாமின் வாழ்க்கை ஈசாக்கின் வாழ்க்கையைப் போல இல்லை; ஈசாக்கின் வாழ்க்கை யாக்கோபின் வாழ்க்கையைப் போல இல்லை; யாக்கோபின் வாழ்க்கை யோசேப்பின் வாழ்க்கையைப் போல இல்லை. ஆனால் இவர்கள் அனைவரும் தேவனுடைய மீட்பின் சரித்திரத்தில் இன்றியமையாத இடத்தைப் பெற்றவர்கள். அதுபோலவே, கிறிஸ்துவின் சரீரத்தில் ஒவ்வொரு விசுவாசியும் தேவனுக்குப் பொக்கிஷமானவரே.
எனவே, யாரையும் இகழாதிருப்போம்; யாரையும் அளவுக்கு மீறிப் போற்றாதிருப்போம். *தேவன் ஒவ்வொருவரையும் அவரவர் அளவிலும், அவரவர் சூழ்நிலையிலும்* , *அவரவர் அழைப்பின்படியும் பயன்படுத்துகிறார்* . *நம்முடைய பணி, மற்றவர்களை மதிப்பிடுவது அல்ல; தேவன் நமக்குக்* *கொடுத்த ஓட்டத்தை விசுவாசமாக முடிப்பதே* .
நம்முடைய கடவுளுக்கு ஆபிரகாமும் வேண்டும்; ஈசாக்கும் வேண்டும். யாக்கோபும் வேண்டும்; யோசேப்பும் வேண்டும். அதுபோல, அவருடைய இராஜ்யத்தில் உங்களுக்கும் இடம் உண்டு; எனக்கும் இடம் உண்டு. அவர் யாரையும் வீணாகப் படைக்கவில்லை. ஒவ்வொருவரையும் கொண்டு தம்முடைய மகிமையான நோக்கத்தை நிறைவேற்றுவார்
இந்தக் கட்டுரைக்கு உதவிய நூல்கள்:
W. W. Wiersbe – The Bible Exposition Commentary
William MacDonald – Believer's Bible Commentary