ஆவிக்குரிய வாழ்க்கையில் தேவையில்லாத உறவுகள்
உங்கள் சிந்தனைக்கு:
ஆவிக்குரிய வாழ்க்கையில் தேவையில்லாத உறவுகள்
இஸ்ரவேலர் எகிப்தை விட்டு புறப்பட்டபோது ஏறக்குறைய 20 லட்சம் பேர் சென்றனர்.
இவர்களோடு இஸ்ரவேலர் அல்லாத ஒரு கூட்டமும் சென்றது(A mixed multitude).
இவர்கள் எதற்காக இஸ்ரவேலரோடு புறப்பட்டு வந்தார்கள் என்று நமக்கு தெரியாது.
ஆனால் அவர்கள் இஸ்ரவேலருக்கு மிகப்பெரிய இடறலாக காணப்பட்டார்கள்.
எப்படி என்றால் ஆண்டவர் அவர்களுக்கு அளித்த மன்னாவின் மீது ஒரு வெறுப்பை உண்டாக்கியவர்கள் இவர்கள்தான்.
இவர்கள் எகிப்தில் தாங்கள் உண்ட உணவை குறித்து இச்சை கொண்டார்கள். இதையே இஸ்ரவேலரும் பின் பாட்டு பாடி எகிப்தில் சாப்பிட்ட மீன், வெள்ளரிக்காய் வெள்ளைப் பூண்டு இவற்றை நினைத்து ஏங்கினார்கள். தேவன் வானத்திலிருந்து அளித்த மன்னாவை அலட்சியம் பண்ணி உணவுக்காக கூடார வாசலில் நின்று கதறினார்கள்.
இதைப் பார்த்து மோசே ஆண்டவரிடம் "நான் இவர்களைப் பெற்றேனா? என்னை கொன்றுவிடும் இந்த பாரத்தை என்னால் சுமக்க முடியாது "என்று விரக்தியில் ஆண்டவரிடம் புலம்பியதை பார்க்கலாம்.
விரக்தியின் உச்ச கட்டத்திற்கே மோசே சென்று விட்டான்.
இதைப் பார்த்து ஆண்டவர் ஒரு காற்றை அனுப்பி கடலில் இருந்த காடை பறவைகளை அடித்து முகாம் முழுவதும் நிரப்பினார்.
அந்த காடைகளை இஸ்ரவேலர் விழுங்குவதற்கு முன்பாக கர்த்தருடைய கோபம் மூண்டு கொடிய கொள்ளை நோயினால் பாதிப்பை ஏற்படுத்தினார். இவ்வளவு பெரிய பாதிப்புக்கு அடித்தளமிட்டவர்கள் இஸ்ரவேலரோடு இணைந்து வந்த இஸ்ரவேலர் அல்லாத மக்கள்தான்.
. எப்பொழுதுமே நம்முடைய ஆவிக்குரிய பயணத்தில் கர்த்தருக்கு சித்தம் இல்லாதவர்கள், தேவையில்லாதவர்கள் நம்மோடு பயணிக்கும் போது அவர்கள் பல நேரங்களில் நமக்கு இடறலாக மாறிவிடுவார்கள்.
நம்மை தேவனுடைய சித்தத்தை விட்டு வழி விலக செய்து விடுவார்கள்.
நம்மை கொண்டு கர்த்தர் கொண்டிருக்கும் சித்தத்தை செயல்படுத்த விடாமல் தடுத்து விடுவார்கள் .
சில நேரங்களில் பாவங்களுக்கு நேராக வழி நடத்துவார்கள்.
எனவே நம்மோடு ஆவிக்குரிய பயணத்தில் நம்மோடு பயணம் செய்பவர்களை குறித்து நாம் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் .
எல்லா மனிதர்களும் நமக்கு ஆவிக்குரிய உதவி செய்பவர்கள் என்று எண்ணிவிட முடியாது .
அதில் களைகளும் இருக்கும் இதே போல் தான் ஆபிரகாம் கர்த்தருக்கு சித்தம் இல்லாமல் எகிப்துக்கு சென்ற போது பார்வோன் அளித்த வெகுமதியில் வந்த வேலைக்கார பெண் ஆகார் மூலமாக தேவை இல்லாத சந்ததி உருவாயிற்று. எனவே நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் "ஆண்டவரே என் வாழ்க்கையில் தேவையில்லாத நட்புகளை, உறவுகளை, ஐக்கியங்களை அகற்றி விடும் "என்று ஜெபிப்பது அவசியமான ஒன்று.
படிக்க யாத்12:38, எண்ணாகமம் 11வது அதிகாரம்,
ஆதி12:15,16