1 நாளாகமம் அல்லது குறிப்பேடு புத்தகம். வேத பாடம் 6.
*உங்கள் சிந்தனைக்கு.*
1 *நாளாகமம் அல்லது குறிப்பேடு புத்தகம்.*
_*வேத பாடம் 6.*_
*தியானிக்க* *வேண்டிய பகுதி 13:6*
"இறைவனது பெட்டி ஓபேத் ஏதோமின் இல்லத்தில் மூன்று மாதங்கள் இருந்தது. யேகோவா, ஓபேத் ஏதோமின் குடும்பத்தையும், அவனுக்குள்ள எல்லாவற்றையும் ஆசீர்வதித்தார்."
தேவனுடைய பெட்டி 60 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டு இறுதியில் எருசலேம் நகருக்கு கொண்டு வருவதற்கு முன்பாக ஓபேத் ஏதோமின் வீட்டில் வைக்கப்பட்டது .
தேவன் பெட்டி இருந்த அந்த வீட்டை ஆசீர்வதித்தார்.
இந்த வசனம் உணர்த்தும் பாடங்கள் என்ன?
பொதுவாக உடன்படிக்கைப் பெட்டியில் 3 பொருள்கள் இருக்கும்.
1. மன்னா நிறைந்த பொற் கலசம் – வனாந்தரத்தில் தேவன் தந்த அப்பம்.
2. ஆரோனின் மலர்ந்த கோல்.
3. உடன்படிக்கை பலகைகள் – சீனாய் மலையில் மோசேக்கு கொடுக்கப்பட்ட பத்து கட்டளைகள்.
ஆனால் சாலொமோன் கட்டின தேவாலயத்தில் உள்ள உடன்படிக்கைப் பெட்டியில் மோசே ஓரேபிலே தேவன் தமது விரலால் எழுதப்பட்ட இரு கல் பலகைகள் (Ten Commandments) அல்லாமல் அதிலே வேறொன்றும் இருந்ததில்லை.
1 இராஜாக்கள் 8:9
அதற்கான காரணம் சொல்லப்படவில்லை.
உடன்படிக்கை பெட்டி பல காரியங்களுக்கு அடையாளமாக இருந்தாலும் குறிப்பாக
தேவனுடைய சந்நிதிக்கு (Presence of God)அடையாளமாக இருக்கிறது.
கடவுளுடைய பெட்டி “தேவனுடைய சிங்காசனம்” எனக் கருதப்பட்டது.
1 சாமுவேல் 4:4
தேவனுடைய பெட்டி இருந்த இடமே தேவனுடைய மகிமை வெளிப்பட்ட இடமாகும்.
புதிய ஏற்பாட்டில் நாமே தேவனுடைய ஆலயமாக இருக்கிறோம்.
இந்த சரீரமாகிய ஆலயத்தில் தேவனுடைய சந்நிதி(Presence of God) காணப்பட வேண்டும்.
தேவனுடைய சமூகம் ஒருவனிடத்தில் காணப்பட வேண்டு மென்றால் அவனது இருதயத்தில் தேவ வசனங்கள் உறவாட வேண்டும்.
ஒரு விசுவாசி வேத வசனத்தால் நிறைந்து அதற்கு கீழ்ப்படிந்து வாழும்பொழுது அவன் கடவுளுடைய சமூகம் நிறைந்த மனிதனாக காணப்படுவான்.
விசுவாசி உள்ளத்தில் கடவுளுடைய வசனம் நிறைந்து காணப்படும்பொழுது ஆராதனைகள், ஜெபங்கள், வசனங்களுக்கு கீழ்ப்படிதல் எல்லாம் தானாக அவனது வாழ்க்கையில் நடைபெறும்.
அப்படிப்பட்ட மனிதன் தேவனால் ஆசீர்வதிக்கப்பட்டவனாக காணப்படுவான்.
கிறிஸ்தவ வாழ்க்கைக்கு மிகவும் அடிப்படையான காரியம் வேத வசனமே. இந்த வேத வசனத்தின் அடிப்படையில்தான் உலகத்தின் இரட்சகர் இயேசு என்று நம்புகிறோம்,
மீட்பு அவரால் வருகிறது என்று நம்புகிறோம். அந்த வசனத்தால் பரிசுத்தமடைகிறோம்.
பரிசுத்த ஆவியினுடைய வரங்களை பெற்றுக் கொள்கிறோம். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். இவைகள் எல்லாவற்றிற்கும் அடிப்படை வேத வசனமே. இந்த வேத வசனத்தை புறந்தள்ளிவிட்டு நம்முடைய சரீரத்தை தேவனுடைய ஆலயம் என்று கருத முடியாது.
எனவே எந்த ஒரு விசுவாசி தன்னுடைய இருதயத்தில் தேவ வசனங்களை வைத்து நடக்கிறானோ அந்த விசுவாசியை நிச்சயமாக கர்த்தர் ஆசீர்வதிப்பார்.
வசனத்தையே தியானிக்காத ஒருவனை விசுவாசி என்று வேதத்தின்படி நாம் அழைக்க முடியாது. அனுதின வாழ்க்கையில் வேத தியானிப்பு என்பது ஒரு அங்கமாக மாறா விட்டால் தேவனுடைய சமூகம் என்னிடத்தில் இருக்கிறது, நான் கடவுளை ஆராதிக்கிறேன், ஊழியம் செய்கிறேன் என்று சொல்பவன் தன்னைத்தானே
ஏமாற்றிக் கொள்கிறான்.
வேத வசனமாகிய தேவனுடைய பெட்டி நம் உள்ளத்தில் இருக்கும்பொழுது நிச்சயமாக நம்முடைய வாழ்க்கை ஆசீர்வாதமான வாழ்க்கையாக பாதுகாக்கப்பட்ட வாழ்க்கையாக இருக்கும். இதில் எந்த சந்தேகமும் இல்லை.