நெகேமியாவின் புத்தகம் – வேதபாடம் 7
✍️ *உங்கள் சிந்தனைக்கு.*
*நெகேமியாவின் புத்தகம் – வேதபாடம் 7*
*
*Expository Commentary on the Book of Nehemiah.*
“Your life is the loudest sermon you will ever preach.”
“உங்கள் வாழ்க்கையே நீங்கள் போதிக்கும் மிகச் சக்திவாய்ந்த செய்தி.”
நெகேமியா ஏற்றுக்கொண்ட பொறுப்பிலும் தலைமைத்துவத்திலும் *சிறந்த முன்மாதிரியாக வாழ்ந்து காட்டினார். பெர்சிய சாம்ராஜ்யத்தின்* அரசனுக்கு நெருங்கியவராக இருந்த அவர், தன் சுகவாழ்க்கையை விட்டுவிட்டு, தன் ஜனங்களுக்காக எருசலேமுக்கு வந்தார். தேவனுடைய மகிமை வெளிப்பட்ட நகரமாகவும், இஸ்ரவேல் ஜனங்களின் பெருமையாகவும் கருதப்பட்ட எருசலேம் நகரத்தின் மதில்கள் இடிந்திருந்ததை அறிந்து, அதை மீண்டும் கட்டுவதற்காக அவர் அர்ப்பணிப்புடன் செயல்பட்டார்.
அந்த காலத்தில், தேவனுடைய ஆலயப் பணிகளுக்காக பாபிலோனிலிருந்து திரும்பி வந்த யூதர்களிடையே சமூக அநீதி அதிகமாக காணப்பட்டது. பணக்காரர்கள் ஏழைகளுக்கு கடன் கொடுத்து வட்டி வாங்கினர்; நிலங்கள், திராட்சைத்தோட்டங்கள், வீடுகள் பறிக்கப்பட்டன; சிலர் தங்கள் பிள்ளைகளையே அடிமைகளாக ஒப்படைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
அவர்கள் எழுப்பிய கூக்குரல் இதுவாகும்:
“நாங்களும் எங்கள் சகோதரர்களைப் போலவே ஒரே சதையும் இரத்தமும் உடையவர்கள்; அவர்களுடைய மகன்களைப் போலவே எங்கள் மகன்களும் இருக்கிறார்கள். இருந்தும் எங்கள் மகன்களையும் மகள்களையும் அடிமைகளாக்க வேண்டியிருக்கிறது; எங்கள் மகள்களில் சிலர் ஏற்கனவே அடிமைகளாக்கப்பட்டுள்ளனர்.” (நெகேமியா 5:4–5)
இந்த நிலைமை நெகேமியாவின் கவனத்திற்கு வந்தபோது, அவர் ஜனங்களையும் தலைவர்களையும் கூடி அழைத்து, அவர்கள் செய்த அநீதியைத் தெளிவாகக் கண்டித்தார். அதற்கு அவர்கள்:
“நாங்கள் அவற்றைத் திருப்பிக் கொடுப்போம்; அவர்களிடமிருந்து எதையும் வற்புறுத்தி வாங்கமாட்டோம்; நீர் சொல்வதுபோலவே செய்வோம்” (நெகேமியா 5:12) என்று ஒப்புக்கொண்டார்கள்.
நெகேமியா ஆசாரியர்களை அழைத்து, அவர்கள் தங்கள் வாக்குறுதியை நிறைவேற்றும்படி ஆணையிட்டார்.
அந்த காலத்தில் பெர்சிய அரசின் கீழ் இருந்த ஆளுநர்கள், மக்களிடமிருந்து வரி வசூலித்து, உணவு மற்றும் பண சலுகைகளைப் பெற்றுக் கொண்டு, மக்களுக்கு பாரமாக இருந்தனர். இது சாதாரண நடைமுறையாக இருந்தது.
ஆனால், ஆளுநராக நியமிக்கப்பட்ட நெகேமியா, *தமக்குக் கிடைத்த அனைத்து அரசாங்க சலுகைகளையும்* *பயன்படுத்த மறுத்தார்* . அர்தக்சஷ்டா அரசனின் பிரதிநிதியாக பன்னிரண்டு ஆண்டுகள் பணியாற்றிய அவர், தமக்குரிய ஆளுநரின் உணவைத் தாம் அல்லது தம் சகோதரர்கள் எவரும் எடுத்துக்கொள்ளவில்லை.
அவருக்கு முன் இருந்த ஆளுநர்கள் மக்கள்மீது பாரமான சுமைகளைச் சுமத்தி, அவர்களிடமிருந்து வெள்ளியும் உணவும் பெற்றனர்; அவர்களுடைய உதவியாளர்களும் மக்கள்மீது அதிகாரம் செலுத்தினர். ஆனால் நெகேமியா, தேவபயத்தினால் அவ்வாறு நடக்கவில்லை (நெகேமியா 5:14–15).
மக்கள் ஏற்கனவே கஷ்டத்தில் இருந்ததால், அவர்களிடமிருந்து எதையும் வற்புறுத்திக் கேட்காமல், *ஆளுநருக்குரிய உணவையும் அவர் ஏற்கவில்லை (நெகேமியா 5:18* ). இவ்வாறு அவர் ஒரு உண்மையான முன்மாதிரித் தலைவராக விளங்கினார்.
நெகேமியாவின் வாழ்க்கையைப் பார்க்கும் போது, புதிய ஏற்பாட்டில் பவுல் அவர்களின் வாழ்க்கை நம் நினைவுக்கு வருகிறது. பவுலும் பிறருக்கு சுமையாக இருக்கவில்லை; தன் தொழிலான கூடாரம் செய்வதன் மூலம் வாழ்ந்தார். அவர் சொன்ன ஒரு ஆழமான வாக்கியம்:
“நான் உங்களுடையதை அல்ல, உங்களையே தேடுகிறேன்.”
இன்றைய சபைக்கு தேவையானவர்கள் *நெகேமியா போன்ற தலைவர்கள். உரிமையும் அனுமதியும் இருந்தும், அதைத் துறந்து,* *தேவனுடைய ஜனங்களுக்காக தியாகமாக வாழ்ந்த* *தலைவர்கள் இன்றைக்கு அரிதாகக் காணப்படுகின்றனர்.*
கண்ணுக்கட்டிய தூரம் வரை இத்தகைய தலைவர்களை நாம் பார்க்க முடியவில்லை.
(ஒரு சில நல்ல தலைவர்கள் விதிவிலக்காக இருக்கலாம்)
பல இடங்களில், பக்தி லாபத்திற்காக பயன்படுத்தப்படும் நிலையும் காணப்படுகிறது.
ஆகையால், விசுவாசிகளாகிய நாம், நெகேமியா போன்ற சாட்சியான வாழ்க்கையை முன்மாதிரியாகக் கொண்டு, நம் ஆவிக்குரிய வாழ்க்கையை கட்டிக்கொள்ள வேண்டும். தவறான முன்னுதாரணங்களை ஒதுக்கி வைத்து, நாமே கிறிஸ்துவுக்கான நல்ல சாட்சிகளாக வாழ முனைவோம்.
கர்த்தர் நம்முடைய இந்த விருப்பத்தை நம் வாழ்க்கையில் நிறைவேற்றுவாராக.
நாம் வாழும் சாட்சியான வாழ்க்கையே உலகுக்குச் சொல்வதற்கான மிகப் பெரிய செய்தி. ✨