Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

எஸ்தர் புத்தகம் வேதபாடம் 10 *Expository commentary on the book of Esther.*
*உங்கள் சிந்தனைக்கு.*

எஸ்தர் புத்தகம்
வேதபாடம் 10

*Expository commentary on the book of Esther.*
இன்றைக்கு நாம் தியானிக்க போகும் தலைப்பு
*"மொர்தெகாய் ஆமானுக்கு மரியாதை செய்யாமல் இருந்தது சரியா* தவறா"



எஸ்தர் புத்தகத்தின் மையப்புள்ளி யார் என்றால், எஸ்தரை விட மொர்தெகாய்தான் என்று நான் கருதுகிறேன்.
மொர்தெகாய் மட்டும் ஆமானைப் பகைக்காமல் இருந்திருந்தால், *அவனுக்கு உரிய மரியாதையைச் செலுத்தியிருந்தால், அவனை அவமரியாதையாக* *நடத்தாமல் இருந்திருந்தால், இந்தப் புத்தகமே அவசியமில்லாமல்* *போயிருக்கும்‌* இன்று கருதுகிறேன்.
இதன் வரலாற்றுப் பின்னணியை சற்று திரும்பிப் பார்க்கலாம்.
கோரேசு மன்னனுடைய காலத்தில் அடிமைகளாக இருந்த யூதர்களுக்கு, பாபிலோனிலிருந்து தங்கள் சொந்த நாட்டிற்குத் திரும்பவும், எருசலேமில் இடிந்துபோன ஆலயத்தைக் கட்டவும் அனுமதி வழங்கப்பட்டது.
அதன்படி ஏறக்குறைய 50000 பேர்கள் தங்கள் சொந்த நாட்டிற்கு திரும்பினார்கள்

ஆனால் அந்த அழைப்பிற்கு பாபிலோனில் வாழ்ந்த பல யூதர்கள் கீழ்ப்படியவில்லை. அங்கிருந்த வசதிகளை இழந்து, எருசலேமில் சென்று பாடுபட அவர்கள் விரும்பவில்லை.
அதனால்தான்
எரேமியா மற்றும் எசேக்கியா போன்ற தீர்க்கதரிசிகள் மீதி இருந்தவர்களை சொந்த நாட்டிற்குத் திரும்பும்படி அறிவுறுத்தினார்கள்.
இதைப் பற்றி ஏசாயா 48:20‌ மற்றும் எரேமியா 51:6 போன்ற வசனங்களில் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.

அப்படி எருசலேமுக்குத் திரும்பாமல், தங்கியவர்களில் ஒருவன்தான் மொர்தெகாய்.

எஸ்தர் புத்தகத்தில் நடந்த சம்பவங்கள், எஸ்ரா புத்தகத்தின் ஆறாம் அதிகாரத்திற்கும் ஏழாம் அதிகாரத்திற்கும் இடையில் நடந்தவை என்று வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.

முதலில் யார்
இந்த மொர்தெகாய் என்று பார்க்கலாம்.

எஸ்தர் 2:5 இவ்வாறு கூறுகிறது:

"சூசான் அரண்மனையில் கீசின் குமாரனாகிய சீமேயின் மகனும் பென்யமீன் கோத்திரத்தானுமான யாயீரின் மகன் மொர்தெகாய் என்ற ஒரு யூதன் இருந்தான்."

இதிலிருந்து நாம் அறிந்துகொள்வது:
அவர் பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்தவர்.

அவரது தாத்தா சீமேய்.

அவரது கொள்ளுத் தாத்தா கீஸ்.

அவர் யூத வம்சத்தைச் சேர்ந்தவர்.
சுருக்கமாகச் சொன்னால், அவன் பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு யூதன் என்று அறிந்து கொள்ளலாம்.
அடுத்தபடியாக இந்த சூழ்நிலை எப்படி ஏற்பட்டது என்று பார்க்கலாம்.
ஆமானுக்கு மற்ற பிரபுக்களை விட உயர்ந்த பதவியை ஆகாஸ்வேரு மன்னன் வழங்கினான்.
அந்தப் பதவி உயர்வின் காரணமாக, அரண்மனையில் இருந்த அனைவரும் முழங்காற்படியிட்டு அவனுக்கு மரியாதை செலுத்தினர்கள். (இங்கே "வணங்கினார்கள்" என்ற மொழிபெயர்ப்பு சரியானதல்ல.)
ஒரு அரசு அதிகாரிக்கு முழங்காற்படியிட்டு மரியாதை செலுத்துவது, அவனுக்குக் கீழே பணிபுரியும் ஊழியர்களின் கடமையாக இருந்தது

அரசனின் கட்டளையின்படி மற்ற ஊழியர்கள் ஆமானுக்கு மரியாதை செலுத்தினர். அந்த அரண்மனை நடைமுறையைப் பின்பற்ற மறுத்த ஒரே நபர் மொர்தெகாய்தான்.
ஆனால் அதே வேளையில்
யூதர்கள் பிற இன மன்னர்களுக்கும் அதிகாரிகளுக்கும் மற்றவர்களுக்கும் மரியாதை செலுத்திய நிகழ்வுகள் வேதத்தில் காணப்படுகின்றன
என்பதையும் நாம் மறுக்க முடியாது.
படிக்க
ஆதியாகமம் 23:7
ஆதியாகமம் 33:3


இப்பொழுது நாம் ஆமான் யார் என்பதைப் பார்க்கலாம்.

ஆமான் யார் என்பதைப் பற்றி வேத அறிஞர்களிடையே இரண்டு விதமான கருத்துக்கள் காணப்படுகின்றன.
எஸ்தர் 3:1-ல் ஆமான் "ஆகாகியன்" (Agagite) என்று அழைக்கப்படுகிறான்.
"ஆகாக்" என்பது அமேலேக்கியர்களின் அரசனின் பெயர் (1 சாமுவேல் 15).
எனவே, ஆமான் அமேலேக்கிய வம்சத்தைச் சேர்ந்தவன் என்று சிலர் கருதுகின்றனர்.
அதேவேளையில், சில வேறு வேத அறிஞர்களின் கருத்து என்னவென்றால்:
“Agag was the name of an area in Media that had become part of the Persian Empire.”
அதாவது, அவன் பாரசீக பேரரசில் இருந்த "ஆகாக்" என்ற பகுதியைச் சேர்ந்தவனாகவும் இருக்கலாம்.
பிரபலமான வேத போதகர்
Thomas Constable‌ என்பவர்
ஆமான் உண்மையில் அமேலேக்கியன் என்பதற்கு உறுதியான ஆதாரம் இல்லை.
"ஆகாகியன்" என்பது ஒரு புவியியல் அல்லது வேறு அடையாளமாகவும் இருக்கலாம்‌ என்று கூறுகிறார்.

*எது சரி, எது தவறு என்று வேதம் தெளிவாகக் கூறவில்லை.*
ஆனால் சில வசனங்களை அடிப்படையாகக் கொண்டு, இது பழமையான இனப் பகையாக இருக்கலாம் என்று கருதலாம்.
மொர்தெகாய், "தான் ஒரு யூதன்" என்பதை அரசனின் ஊழியக்காரர்களுக்குத் தெரிவித்தான் ‌என்று
எஸ்தர் 3:4 ல் பார்க்கலாம்
அவன் ஏன் அவ்வாறு கூறினான் என்பதற்கான முழு விவரம் நமக்குக் கொடுக்கப்படவில்லை.
மொர்தெகாய், ஆமான் அமாலேக்கியன் என்ற காரணத்தினால் பழைய இனப் பகையை மனதில் வைத்திருந்திருக்கலாம்.
ஏனெனில் அமேலேக்கியர்கள்தான் இஸ்ரவேலர் எகிப்திலிருந்து வந்தபோது முதன்முதலில் தாக்கிய எதிரிகள் (யாத்திராகமம் 17:8–16).
அதன்பிறகு தேவன்:
"அமேலேக்கின் நினைவை வானத்தின் கீழிருந்து அழித்துப்போடுவேன்"
என்று அறிவித்தார்.
எனவே, யூதர்களின் பார்வையில் அமேலேக்கியர்கள் என்பவர்கள் தேவனுடைய ஜனங்களுக்கு எதிரான பகைவர்கள் அறியப்பட்டது.
இந்த மத அல்லது இனப் பகைமையின் அடிப்படையில், மொர்தெகாய் ஆமானுக்கு மரியாதை செலுத்தாமல் இருந்திருக்கலாம்.
*அதேவேளையில், ஆமானும் மொர்தெகாயை மட்டும் பழிவாங்கியிருக்கலாம்‌.*
*ஆனால் அதைத் தவிர்த்து அவனுடைய யூத இனம் முழுவதையும் அழிக்க‌ தீர்மானித்தான்.*
*இதிலிருந்து, அவனுக்கும் யூதர்கள்மேல் இன மற்றும் மதப் பகைமை* *இருந்ததாகக் கருதலாம்.*

இந்த ஆமானை, யூதர்களை அடியோடு அழிக்க முயன்ற எகிப்திய அதிபதி பார்வோன், ஹிட்லர் மற்றும் எகிப்து அதிபர் நாசர் போன்றவர்களோடு ஒப்பிடலாம்.
காரணம் எதுவாக இருந்தாலும், நாம் ஒரு முக்கியமான உண்மையைப் புரிந்துகொள்ள வேண்டும்.
யூதர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட வாய்ப்பைப் பயன்படுத்தி கோரேசு மன்னனின் காலத்தில் எருசலேமுக்குத் திரும்ப மனமில்லாமல் இருந்தபோதிலும், அந்த ஜனத்தைப் பாதுகாக்க தேவன் உண்மையுள்ளவராக இருந்தார்.
ஆபிரகாமுக்கு அவர் கொடுத்த வாக்குறுதியை உலகத்தின் இறுதிவரை காப்பாற்ற அவர் தீர்மானித்திருக்கிறார்.
அதை எந்த சக்தியாலும் மாற்ற முடியாது.
இன்றைக்கும் *எத்தனை ஆமான்கள் தோன்றினாலும், யூதர்களை உலகம் முழுமையாக அழிக்க முடியவில்லை.*
*அதுபோலவே, தேவனால் மீட்கப்பட்ட சபையை அழிப்பதற்கு* *பாதாளத்தின் சக்திகள் எவ்வளவு முயற்சித்தாலும், தம்முடைய சபையை உறுதியாகக் காக்க தேவன் போதுமானவராக இருக்கிறார்.*
ஆமானைப் போன்றவர்கள் அல்லது அரசுகள் இன்றைக்கும் திருச்சபைக்கு விரோதமாகச் செயல்பட்டாலும், இயேசு கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தால் மீட்கப்பட்ட சபையை அழிக்க யாருக்கும் வல்லமை இல்லை.
அன்றைக்கு ஆமானின் சூழ்ச்சியிலிருந்து காப்பாற்றிய தேவன், இன்றைக்கும் தமது சபையின் பாதுகாப்பிற்குப் போதுமானவராய் இருக்கிறார்.
எனவே, அதிகாரிகளையோ, மந்திரிகளையோ, அரசுகளையோ நாம் நம்பாமல், ராஜாக்களை‌ தள்ளியும் ராஜாக்களை எழுப்பியும் இறையாண்மை செய்கிற ராஜாதி ராஜாவை நம்புவோம்; பாதுகாக்கப்படுவோம்.
*மொர்தெகாய்–ஆமான் வெறுப்பும் பகைமையும் சரியோ* *தவறோ, ஆனால் அதனால் விளைந்த யூத அழிப்பை தேவன் தடுத்து* *நிறுத்தினார் என்பதுதான் எஸ்தர் புத்தகத்தின் மையக் கருத்து. கடவுள் எல்லா காரியங்களையும்* *தம்முடைய இறையாண்மைக்கு ஏற்றபடி நடத்துகிறார் என்பது இந்த நிகழ்வின் மூலம்* *நாம் அறிந்து கொள்ளலாம்.*