Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

தமிழக தேர்தல் களமும் ஊழியக்காரர் களின் தீர்க்க தரிசனமும்.*
*உங்கள் சிந்தனைக்கு.*

தமிழக தேர்தல் களமும் ஊழியக்காரர் களின் தீர்க்க தரிசனமும்.*

2026 - ல் தமிழகத்தில் நடைபெறப் போகின்ற தேர்தலை அடிப்படையாகக் கொண்டு இன்றைக்கு சபை ஊழியர்கள் மத்தியில் அனேக தீர்க்கதரிசனங்கள் உலாவி கொண்டிருக்கின்றன.

இந்தக் கட்சி ஆட்சியைப் பிடிக்கும். இந்தக் கட்சி ஆட்சியை இழக்கும்.
இந்தக் கட்சிக்குப் பெரும்பான்மை கிடைக்காது‌. ‌
இந்த தடவை கூட்டணி ஆட்சி தான் நடக்கும்.

இந்தக் கட்சி இந்தத் தேர்தலோடு முடிந்து போய்விடும்.
இந்தக் கட்சிதான் ஆட்சிக்கு வரும் என்று கர்த்தர் என்னோடு பேசி இருக்கிறார். இப்படி பல்வேறு கருத்துக்களை, தங்களுடைய விருப்பங்களைத் தீர்க்கதரிசனங்கள் என்கிற போர்வையில் இன்று பேசப்பட்டும், பரப்பப்பட்டும் வருகின்றது.

புதிய ஏற்பாட்டு சபை‌ வரலாற்றில் ஆளுகின்ற அரசாங்கத்தைக் குறித்தோ அரசாட்சியை பற்றியோ எந்தத் தீர்க்கத் தரிசனமும் கர்த்தருடைய வார்த்தைகள் தொகுக்கப்பட்ட எழுதப்பட்ட 70 ஆண்டு காலத்தில் சொல்லப்படவில்லை‌.

கிறிஸ்தவர்கள் மிகவும் கொடுமையாக நடத்தப்பட்ட காலக்கட்டங்களில் கூட அவர்கள் அந்தந்த அரசர்களைக் குறித்து, ஆட்சியைக் குறித்து எந்தத் தீர்க்கதரிசனம் சொன்னதாகச் சபை குறிப்புகளில் காணப்படவில்லை.

ஒரு தேசத்தின் எதிர்காலத்தைப் பற்றி முன்னறிவிப்பதோ தீர்க்கதரிசனம் சொல்வதோ புதிய ஏற்பாட்டு சபை தலைவருக்கு உட்பட்டதல்ல. அது அவர்களுடைய ஊழிய வரம்பிற்கு அப்பாற்பட்டது.
அது முழுக்க முழுக்க இறைவனுடைய கட்டுப்பாட்டுக்குள் அவருடைய இறையாண்மைக்குள் அவருடைய ஆதீனத்திற்குள் அடங்கி இருக்கிற காரியம். அதில் நாம், இது இப்படி நடக்கும் அது அப்படி நடக்கும் என்று சொல்வது நாம் பின்பற்றுகிற கிறிஸ்தவத்தை சரியாக புரிந்து கொள்ளவில்லை என்பதைத்தான் காட்டுகிறது.

பழைய ஏற்பாட்டில் இதைப் பற்றித் தெளிவாக விளக்குகின்ற ஒரு பகுதி தானியேல் தீர்க்கதரிசன புத்தகம் 4வது அதிகாரம்‌.

அதைப்பற்றி இப்பொழுது சுருக்கமாக விளக்க விரும்புகிறேன்.

*மனிதர்களுடைய* *அரசாங்கத்தில்* *ஆளுகை செய்யும்* *கடவுள்.*

தானியேல் புத்தகம் 4 ஆம் அதிகாரத்தில் ஒரு குறிப்பிட்ட வார்த்தையை நீங்கள் கவனிக்க வேண்டும்.

அது என்னவென்றால்
"மனிதர்களுடைய அரசாங்கத்தில் ஆளுகை
செய்யும் கடவுள்"
இந்த வார்த்தையின் பொருளைத் தாங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் ‌.
அந்த ஆளுகையை முடிவு செய்பவர் கடவுள்  மட்டுமே‌. அந்த ஆளுகையை அவர் யாருக்கும் விட்டுத் தரமாட்டார் .
அதைத் தீர்மானிக்கும் உரிமையும் யாருக்கும் அளிக்கவும் மாட்டார்.

அவரது ஆதினத்தில் உள்ள காரியங்களை நாம் ஆராய்ச்சி செய்வது நமக்கு ஏற்றதல்ல.

அவரது கைகளைத் தடுத்து இவனுக்குத் தான் ஆட்சி என்று முடிவு செய்யும் உரிமை மனிதப் பிறவிகளான நமக்குக் கிடையாது. இதுவே என்னுடைய இறையியல் புரிதல்.

(தானியேல் 4 ஆம் அதிகாரத்தின் இறையியல் சத்தியம்)
தானியேல் புத்தகம் 4 ஆம் அதிகாரம், மனித வரலாற்றில் அரசியல் அதிகாரமும் அரசாட்சியும் எவரின் கையில் உள்ளது என்பதைக் குறித்து மிகத் தெளிவான இறையியல் வெளிப்பாட்டை அளிக்கிறது.

“மனிதர்களுடைய அரசாங்கத்தில் உயர்ந்தவர் தேவன்; அவர் அதைத் தமக்கு இஷ்டமானவருக்கு அளிக்கிறார்” (தானி. 4:17, 25, 32) என்ற வார்த்தை, இந்த அதிகாரத்தின் மையக் கருத்தாக விளங்குகிறது.

இந்த வசனம், உலக அரசாட்சியின் இறுதி அதிகாரம் மனிதரிடத்தில் அல்ல, தேவனிடத்திலேயே இருக்கிறது என்பதை உறுதியாக அறிவிக்கிறது.

அரசர்கள், பேரரசர்கள், ஆட்சியாளர்கள் அனைவரும் தங்கள் அதிகாரத்தைத் தாமாகப் பெற்றவர்கள் அல்ல; அது தேவனின் அனுமதியினாலும், தீர்மானத்தினாலும் மட்டுமே வழங்கப்படுகிறது.

ஆகையால், யார் ஆட்சி செய்ய வேண்டும், எவ்வளவு காலம் ஆட்சி செய்ய வேண்டும், எப்போது அந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்பதனை முடிவு செய்பவர் தேவன் ஒருவரே.

நேபுகாத்நேச்சார் ராஜாவின் வாழ்க்கை இதற்கு ஒரு தெளிவான எடுத்துக்காட்டாக இருக்கிறது.

தன் மகிமையையும், அதிகாரத்தையும், வெற்றியையும் தன்னிடமிருந்தே வந்ததாக எண்ணிய அவனுடைய அகந்தையை தேவன் உடைத்தார். “இது என் வல்லமையால் கட்டிய மகா பாபிலோனா?”
(தானி. 4:30) என்ற அவனுடைய சொற்கள், மனித ஆட்சி தேவனை மறந்தால் எவ்வளவு ஆபத்தானதாக மாறும் என்பதை வெளிப்படுத்துகின்றன. உடனே தேவனின் தீர்ப்பு அவன் மேல் வந்தது.

இதன் மூலம், மனித ஆட்சியின் எல்லை எங்கு முடிகிறது, தேவனின் ஆட்சி எங்கு தொடங்குகிறது என்பதைக் கடவுள் உலகிற்கு கற்றுக் கொடுத்தார்.

இந்த அதிகாரம் இன்னொரு முக்கியமான இறையியல் உண்மையையும் நமக்கு நினைவூட்டுகிறது:

தேவனுடைய ஆளுகையை தீர்மானிக்கும் உரிமை எந்த மனிதனுக்கும் வழங்கப்படவில்லை.


தேவனுடைய செயல்களில் தலையிடவும், “இந்த மனிதனே ஆட்சி செய்ய வேண்டும்” என்று தீர்மானிக்கவும் மனிதப் பிறவிகளுக்கு அதிகாரமில்லை.

தேவன் தம் சித்தத்தின் படியே ஆள்கிறார்; அந்த ஆளுகையை அவர் யாருக்கும் விட்டுத் தருவதில்லை.