*எஸ்தர் புத்தகம் — வேதபாடம் 9* *Expository Commentary on the Book of Esther*
*உங்கள் சிந்தனைக்கு*
*எஸ்தர் புத்தகம் — வேதபாடம் 9*
*Expository Commentary on the Book of Esther*
*ஆமானின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் என்ன?*
ஆமானின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் அவனுடைய அகங்காரமும், தனிப்பட்ட பகையை இனப்பகையாக மாற்றியதும் ஆகும்.
யார் இந்த ஆமான்?
ஆமான் யார் என்பதைப் பற்றி வேத அறிஞர்களிடையே இரண்டு விதமான கருத்துக்கள் காணப்படுகின்றன. எஸ்தர் 3:1-ல் ஆமான் "ஆகாகியன்" (Agagite) என்று அழைக்கப்படுகிறான். "ஆகாக்" என்பது அமேலேக்கியர்களின் அரசனின் பெயராக 1 சாமுவேல் 15-ல் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, சில வேத அறிஞர்கள் ஆமான் அமேலேக்கிய வம்சத்தைச் சேர்ந்தவன் என்று கருதுகின்றனர்.
அதேவேளையில், சில வேறு அறிஞர்கள் "ஆகாகியன்" என்பது ஒரு புவியியல் அடையாளமாகவும் இருக்கலாம் என்று கருதுகின்றனர். பிரபலமான வேத போதகர் Thomas Constable அவர்கள், ஆமான் உண்மையில் அமேலேக்கியன் என்பதற்கு உறுதியான ஆதாரம் இல்லை; "ஆகாகியன்" என்பது வேறு ஒரு அடையாளமாகவும் இருக்கலாம் என்று குறிப்பிடுகிறார். எனவே, ஆமான் அமேலேக்கியன் என்று உறுதியாகக் கூற முடியாவிட்டாலும், அந்த வாய்ப்பை முற்றிலும் நிராகரிக்கவும் முடியாது.
ஆமானின் செல்வாக்கும் செல்வமும்
ஆமான் பெரும் செல்வாக்கும் செல்வமும் உடையவனாக இருந்தான். யூதர்களை அழிப்பதற்காக 10,000 தாலந்து வெள்ளியை அரச கருவூலத்தில் செலுத்துவதாக அகாஸ்வேரு அரசனிடம் உறுதியளித்தான் (எஸ்தர் 3:9).
கிரேக்க வரலாற்றாசிரியரான Herodotus-ன் குறிப்புகளின்படி, பாரசீக சாம்ராஜ்யத்தின் வருடாந்திர வருமானம் சுமார்யும் 15,000 தாலந்து வெள்ளியாக இருந்ததாகக் கூறப்படுகிறது. அந்த அளவிலான ஒரு தொகையை வழங்கத் தயாராக இருந்த ஆமான் மிகப்பெரிய செல்வந்தன் என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.
அவமானம் எவ்வாறு அழிவாக மாறியது?
பெர்சிய அரசாங்கத்தின் உயர்ந்த பதவியில் இருந்த ஆமானுக்கு, அரண்மனை வாசலில் இருந்த மொர்தெகாய் தனக்கு வணங்க மறுத்தது மிகப்பெரிய அவமானமாகத் தோன்றியது. மொர்தெகாய் அவ்வாறு நடந்துகொண்டது சரியா தவறா என்பது இங்கு விவாதப் பொருள் அல்ல. அது மொர்தெகாயின் மனசாட்சியின்படி சரியாக இருந்திருக்கலாம்.
ஆனால் ஆமான் செய்த தவறு என்னவென்றால், *அந்த அவமானத்தை தனிப்பட்ட பிரச்சினையாக பார்க்காமல், மொர்தெகாயின்* *முழு இனத்திற்கும் எதிரான பகையாக மாற்றியதே ஆகும்.*
*மொர்தெகாயை பழிவாங்க நினைத்திருந்தாலும் அது வேதாகமத்தின் பார்வையில் தவறே.* *ஆனால் ஆமான் அதைவிட மோசமாக, எந்தக் குற்றமும் செய்யாத* *முழு யூத இனத்தையும் அழிக்கத் திட்டமிட்டான். மேலும்* தனது அதிகாரத்தையும் செல்வத்தையும் பயன்படுத்தி அரசனின் ஒப்புதலைப் பெற்றான்.
அகாஸ்வேரு அரசன் இந்த உத்தரவை வழங்கியதற்கு வெறும் பணம் மட்டுமே காரணம் என்று கூற முடியாது. ஆமான் யூதர்களைப் பற்றி தவறான குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தான் (எஸ்தர் 3:8). இருப்பினும், ஆமானின் செல்வாக்கும் வாக்குறுதியும் அந்த முடிவில் முக்கிய பங்கு வகித்திருக்கலாம்.
ஆமானின் வீழ்ச்சி
ஆமான் வெறும் அகங்காரமுள்ள மனிதன் மட்டுமல்ல; அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்தியவன், அப்பாவிகளை அழிக்க முயன்றவன், பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்தவன்.
இதன் விளைவாக தேவன் சூழ்நிலைகளை மாற்றி அமைத்தார். மொர்தெகாய்க்காக தயார் செய்யப்பட்ட தூக்குமரத்தில் இறுதியில் ஆமானே தூக்கிலிடப்பட்டான்.
வரலாற்றிலிருந்து ஒரு பாடம்
வரலாற்றில் பலர் இனவெறி மற்றும் மதவெறியின் காரணமாக பேரழிவுகளை ஏற்படுத்தியுள்ளனர். அதற்கு மிகப் பிரபலமான *உதாரணமாக Adolf Hitler-ஐ குறிப்பிடலாம். ஹிட்லர் யூதர்களை எதிர்த்து இனவெறி* *கொள்கையை வளர்த்து, கோடிக்கணக்கான* *மக்களின் மரணத்திற்கு காரணமானான். இறுதியில்* *அவனுடைய வாழ்க்கை தற்கொலையில் முடிந்தது.*
ஆமானும் ஹிட்லரும் வாழ்ந்த காலமும் சூழ்நிலைகளும் வேறுபட்டவை என்றாலும், ஒரு குறிப்பிட்ட மக்களை அழிக்க முயன்றவர்களாக இருவரும் நினைவுகூரப்படுகின்றனர்.
நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்
*தனிப்பட்ட விரோதத்தை இனப்பகையாகவோ, மதப்பகையாகவோ மாற்றுவது மிகவும் ஆபத்தானது. அத்தகைய சிந்தனை* தேவனுடைய சித்தத்திற்கு எதிரானது.
மேலும், பழிவாங்குதல் மனிதனுக்குரியது அல்ல.
"பழிவாங்குதல் எனக்குரியது; நானே பதிலளிப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்" (ரோமர் 12:19).
ஆமான் தன் கையில் நீதியை எடுக்க முயன்றான்; ஆனால் இறுதியில் தேவனுடைய நீதியின் முன் நிற்க வேண்டியவனானான். ஆகவே, அகங்காரமும் பழிவாங்கும் மனப்பான்மையும் அழிவிற்கு வழிவகுக்கும்; தேவனுடைய நீதியே இறுதியில் நிலைத்திருக்கும்.