Slavery and cast differences
சபைகளில் ஜாதி வித்தியாசங்களை அரசியலாக்கலாமா?
அன்றைய அடிமைத்தனமும் இன்றைய ஜாதி பிரிவுகளும்.
Slavery and cast differences
ஜாதிப் பிரிவினைகளை அதிகமாக சபையில் முக்கியப்படுத்த வேண்டுமா?
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இந்த உலகத்திற்கு அனுப்பப்பட்ட நோக்கம், ஆன்மீக விடுதலையை கொடுப்பதற்காகவே.
பாவத்தில் வீழ்ந்த மனிதனுக்கு அதிலிருந்து விடுதலை கொடுப்பதற்காக மீட்கும் பொருளாக தன்னையே அர்ப்பணித்தார்.
அவர் ஒரு சமுதாய புரட்சியை உருவாக்குவதற்காக வரவில்லை.
அவருடைய செய்திகளில் சமத்துவம் காணப்பட்டது என்பது உண்மைதான். பெண் அடிமைத்தனத்தை ஆதரிக்கவில்லை என்பதும் உண்மைதான். இவைகள் எல்லாம் அவருடைய போதகத்தின் ஒரு பகுதி. பிரதான நோக்கம் ஆன்மீக விடுதலையே. இதற்கு ஒரு நல்ல உதாரணம், இயேசு கிறிஸ்து உயிரோடு இருந்த நாட்களில் ஏறக்குறைய 60 மில்லியன் பேர் அடிமைகளாக ரோம சாம்ராஜ்ஜியத்தில் இருந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.
ஆனால் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவோ, பவுலோ இதைப்பற்றி புதிய ஏற்பாட்டில் எங்கும் கடிந்து கொண்டதாக காணப்படவில்லை.
அப்படியென்றால் இயேசு கிறிஸ்துவை விட பவுலடியாரை விட அடிமைத்ததனத்தை ஒழிக்க போராடிய William Wilberforce மேன்மையானவரா ?
இதைப் பற்றி சற்று விவரமாக விவாதிக்கலாம்.
அந்தக்காலங்களில் அடிமைத்தனம் என்பது சமுதாயத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு அமைப்பாக இருந்தது.
அடிமைத்தனம் என்பது அரசாங்க சட்டப்படி அங்கீகரிக்கப்பட்டது.
பெரும்பான்மை மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
ஒரு பொருளை வாங்குவது போல அடிமைகளை வாங்கிக் கொள்ளலாம் என்கிற பழக்கம் பரவலாக எல்லா நாடுகளிலும் காணப்பட்டது. பழைய ஏற்பாட்டில் யூதர்கள் பிற இனத்தில் உள்ள யூதர்களை வேலைக்கு அமர்த்திக் கொள்ளலாம் என்று லேவியராகமம் 25:44-46 ல் சொல்லப்பட்டிருக்கிறது.
ஆனால் இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தில் அடிமைகளாக இருந்த காரணத்தால் யூதர்கள் மற்ற யூதர்களை அடிமைகளாக நடத்தக்கூடாது.லேவி25:42
இதே நடைமுறை புதிய ஏற்பாட்டில் ஆரம்ப காலங்களில் தொடர்ந்தது. அந்த நடைமுறையை எதிர்த்து குரல் கொடுத்திருந்தால் பவுல் ஒரு கலகக்காரராக மாறி
இருப்பார்.
அவருடைய ஆன்மீக விடுதலைப் போராட்டம் தோல்வியில் முடிந்திருக்கும்.
அதே வேளையில் அடிமைகளின் விடுதலையை அவர் எதிர்க்கவில்லை.
1கொரி 7:21,22.
வேலைக்காரர்களை அன்புடன் நடத்த வேண்டுமென்று அவர் வலியுறுத்துகிறார்.கொலோ4:1.
ஒரு காலத்தில் பிலேமோனிடம் அடிமையாய் இருந்த ஒநேசிமுக்காக அவரிடம் போய் மன்றாடுகிறார்.
நான் பெற்ற என் மகனாகிய ஒநேசிமுக்காக உம்மை மன்றாடுகிறேன். என்று கதறுகிறார்.
பிலேமோன் 1:10
அது மாத்திரமல்ல ஆதி திருச்சபைகளில் அடிமைகள் போதகர்களாகவும் இருந்திருக்கிறார்கள் என்று சபை குறிப்புகளில் உள்ளன. இதைத்தான் அவரவர்கள் என்ன நிலையில் அழைக்கப்பட்டிருக்கிறார்களோ அதே நிலையில் இருக்கலாம் என்று பவுல் சொல்லுகிறார்.
அன்றைய கால சூழ்நிலையில் அடிமைத்தனம் என்பது ஒரு அங்கீகரிக்கப்பட்ட பழக்கமாக இருந்த படியினாலே அதை எதிர்த்து குரல் கொடுத்தால் அது கலவரமாக மாறிவிடும்.
எனவே பவுல் ஆன்மீக விடுதலையை, பாவ மன்னிப்பின் விடுதலையை முக்கியப்படுத்தினார்.
எபேசி6:5-8, கொலோ 3:22, 1தீமோ6:2
காலப்போக்கில் பின் நாட்களில் தேவனுடைய பிள்ளைகளின் அடிமைத்தனத்தை அகற்றுவதில் பெரும்பங்கு வகித்தனர்.
அதே போல தான் இன்றைய சமுதாயத்தில் காணப்படுகின்ற சாதி சட்டமைப்பு.
இதை எதிர்த்து கலகம் செய்ய கிறிஸ்தவம் அழைக்கவில்லை.
ஆனால் அன்றைக்கு தேவன் இஸ்ரவேல் மக்களுக்கு கட்டளையிட்ட மாதிரி நம்முடைய சகோதரர்களை கர்த்தரால் மீட்டெடுக்கப்பட்டவர்களை அடிமைகளாக நடத்தக் கூடாது. சம நிலையில் நடத்த வேண்டும். யாராக இருந்தாலும் கிறிஸ்துவுக்குள் ஒரே சரீரமாக இணைக்கப்பட்டு இருக்கிறோம் என்கிற சிந்தை உள்ளவன் அதை செயலில் நடைமுறைப்படுத்துவான். தான் உண்மையாகவே மறுபடியும் பிறந்த கிறிஸ்தவனாக இருப்பானென்றால் அவன் பேச்சில் அல்ல செயலிலும். எண்ணத்திலும், எல்லா காரியங்களிலும் அதைப் பின்பற்றி உண்மையான கிறிஸ்தவனாக இருப்பான்.
இந்த மெய்யான இரட்சிப்பைப் பற்றி தான் அதிகமாக பேச வேண்டுமே தவிர வெறுமனே சபைகளில் காணப்படுகின்ற ஜாதிப் பிரிவுகளை அரசியல் ஆக்கக் கூடாது. இயேசு கிறிஸ்துவின் இரத்தம், அவருடைய வார்த்தை, பரிசுத்த ஆவியானவருடைய கிரியை, செய்ய முடியாததை நம்முடைய ஜாதி எதிர்ப்பு அரசியல் எந்த தாக்கத்தையும் நம்முடைய ஆன்மீக வாழ்க்கையில் ஏற்படுத்தாது.
சரியான மனந்திரும்புதலுக்கேற்ற செய்திகளே இந்த மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.
அதை விடுத்து ஜாதி எதிர்ப்பு ஒன்றையே வாழ்நாள் முழுவதும் பேசிக் கொண்டிருந்தால் எந்த பயனும் எந்த தாக்கத்தையும் கிறிஸ்தவத்தில் ஏற்படுத்த முடியாது .இது என்னுடைய ஜய உண்மையான நம்பிக்கை. இதைப் பதிவிடுகிற நான் சொல்லிலும் செயலிலும் ஜாதிக்கு அப்பாற்பட்டவன்.
எசேக்கியேல் சண்முகவேல்