1 அரசர்கள் புத்தகம் வேத பாடம் 2
உங்கள் சிந்தனைக்கு:
1 அரசர்கள் புத்தகம்
வேத பாடம் 2
அதோனியாவின் வீழ்ச்சிக்கு வழிகாட்டிய தாவீது.
அப்சலோம், அம்மோனுக்கு பிறகு உயிரோடு இருந்த தாவீதின் குழந்தைகளில் மூத்தவன். சட்டப்படி தாவீதுக்கு பிறகு அரசனாகக்கூடிய தகுதி பெற்றவன்.
ஆகீத்திற்குப் பிறந்த அதோனியா என்பவன்,"நான் ராஜா ஆவேன்" என்று சொல்லி, தன்னைத்தான் உயர்த்தி, தனக்கு இரதங்களையும் குதிரை வீரரையும், தனக்குமுன் ஓடும் ஐம்பது காலாட்களையும் சம்பாதித்தான். (I இராஜாக்கள் 1:5)
தனக்குப் பிறகு சாலமோன் தான் அரசனாக வேண்டியவன் என்று தாவீதுக்கு தேவன் சொல்லி இருந்தும்(1நாளா22:9,10)
அதோனியா தன்னைத்தானே அரசனாக அறிவித்துக் கொள்கிற அந்த முயற்சியைத் தாவீது கண்டிக்கவில்லை என்பதை 1:6 ன் மூலம் அறிந்து கொள்ளலாம்.
அவனுடைய முயற்சியை ஆரம்ப நிலையில் தாவீது தடுத்திருக்கலாம்.
70 வயது ஆனாலும் அதோனியா தன்னைத்தானே அரசனாக அறிவித்ததை தெரிந்த உடனே தன்னுடைய ஒரே கட்டளையினால் சாலமோனை அரசனாக்ககூடிய ஒரு மிகப்பெரிய அதிகாரத்தைத் தாவீது கொண்டிருந்தான்.(1:32-35)
அப்படிப்பட்ட தாவீது அதோனியா தேவனுடைய சித்தத்துக்கு விரோதமாகத் தன்னைத்தானே அரசனாக முயற்சி செய்கிற அந்த ஆரம்ப நிகழ்வுகளைக் கண்டனம் செய்யாமல், அசட்டையாகக் கண்டிக்காமல் விட்டு விட்டான்.
ஒருவேளை அவன் அந்தோனியாவை அழைத்து, எச்சரித்து இருந்தால் அதோனியா தான்தான் அரசனாகக்கூடிய அந்த முயற்சியைக் கைவிட்டு இருப்பான். தாவீது அதோனியாவை ஆரம்பித்தில் கண்டிக்காமல் விட்டதினால் பின்னால் அவனை இழக்கக்கூடிய ஒரு சோக நிகழ்வு அவனுடைய வாழ்க்கையில் ஏற்பட்டது. அம்மோன் , அப்சலோம் மரணத்திற்கு தாவீதை பொறுப்பாளியாக்க முடியாது.
ஆனால் இந்த நிகழ்வில் அதோனியாவின் மரணத்திறகு அதோனியாவை கண்டிக்காமல் விட்ட அந்த ஆரம்ப தயக்கம் மிகப்பெரிய காரணமாயிற்று.
இதன் மூலம் நாம் கற்றுக்கொள்ளும் பாடங்கள்
1. தேவசித்தம் இல்லாத காரியங்கள் நம்முடைய வாழ்க்கையில் நடைபெறுகின்ற அந்த ஆரம்ப நிலையிலேயே அவற்றை அகற்றி விட வேண்டும். தேவசித்தம் இல்லாத காரியங்களை நாம் நம்முடைய வாழ்க்கையில் வளரவிட்டால் அது நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடும்.
அந்த மாதிரி தேவ சித்தமில்லாத காரியங்களை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.
2. பிள்ளைகளைக் கண்டிப்பதில் கவனத்துடன் இருக்க வேண்டும்.
நம்முடைய
பிள்ளைகள் தேவனுடைய சித்தத்திற்கு விரோதமான காரியங்களில் செயல்பட ஆரம்பிக்கும் அந்த ஆரம்ப நிலையிலேயே நாம் அவற்றைக் கண்டிக்க தவறிவிட்டால் பின்னால் ஒருபோதும் அவற்றைக் கண்டிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு விடும்.
இதனால் பிள்ளைகளுடைய ஆவிக்குரிய வாழ்க்கை பாதிக்கப்படும்.
நம்முடைய சந்தோஷம் மறைந்துவிடும்.
தேவ சித்தத்தை நிறைவேற்றத் தவறிவிடுவோம்.
நம்முடைய பிள்ளைகள் விஷயத்தில் நாம் தேவ சித்தம் செய்யத் தவறும்பொழுது அதன் விளைவுகளை வாழ்நாள் முழுவதும் அனுபவித்தே ஆக வேண்டும்.
பிள்ளைகள் விஷயத்தில் நாம் எப்பாடுபட்டாவது தேவ சித்தத்தை நிறைவேற்ற முயற்சிக்க வேண்டும். அப்படி தவறும்பொழுது நம்முடைய இறுதி நாட்களில் கண்ணீரோடு ஓட்டத்தை முடிக்க வேண்டியிருக்கும்.
தாவீதின் வாழ்க்கையில் அதோனியின் காரியத்தில் தாவீதின் அலட்சியம் நமக்கு ஒரு மிகப்பெரிய பாடம்.