நாம் பிறரை ஏமாற்றிய உணர்வுகள் எப்பொழுதும் உள்ளத்தில்* *இருந்து மறையாது
*உங்கள் சிந்தனைக்கு:*
*நாம் பிறரை ஏமாற்றிய உணர்வுகள் எப்பொழுதும் உள்ளத்தில்* *இருந்து மறையாது*
20 ஆண்டுகளுக்குப் பிறகு யாக்கோபு தேவனுடைய கட்டளைக்குக் கீழ்ப்படிந்து பெத்தேலை நோக்கிச் செல்கிறான். ஆனால் அந்தப் பயணத்தில் அவன் ஏமாற்றிய தனது அண்ணன் ஏசாவைச் சந்திக்க வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. தேவனுடைய கட்டளையின்படி சென்றாலும், கடந்த காலத்தின் நினைவுகள் அவனை விட்டு நீங்கவில்லை.
ஏனெனில், தானும் லாபனால் 20 ஆண்டுகள் பல்வேறு விதங்களில் ஏமாற்றப்பட்ட அனுபவத்தை மறக்கவில்லை. ஏமாற்றப்படுவதின் வலி என்ன என்பதை அவன் நன்கு அறிந்திருந்தான்.
இதனால், ஏசாவின் மனதை சமாதானப்படுத்தும்படியாக பல வெகுமதிகளைத் தனது வேலைக்காரர்கள் மூலமாக அனுப்புகிறான். அவனைக் கண்டு பயப்படுகிறான்.
ஒருவேளை ஏசா தன்னைத் தாக்கினால் அதிலிருந்து தப்பித்துக்கொள்ளவும் திட்டமிடுகிறான். தன் சகோதரனை "ஆண்டவன்" என்று அழைக்கிறான். மேலும், தேவனை நோக்கி தன்னைப் பாதுகாக்கும்படி ஜெபிக்கிறான்.
தேவன் யாக்கோபை மன்னித்து பாதுகாத்திருந்தாலும், தனது சகோதரனுக்கு எதிராக நடந்துகொண்ட விதத்தை நினைத்து அவன் மனத்தாழ்மையுடன் ஏசாவிடம் சமாதானத்தைத் தேடினான் என்று தோன்றுகிறது. தேவனை அறிந்த மனிதனின் வாழ்க்கையில் இப்படிப்பட்ட மனந்திரும்புதலும், பிறருக்கு நாம் செய்த தீங்கை உணர்ந்து உறவுகளைச் சரிசெய்யும் விருப்பமும் காணப்பட வேண்டும்.
தேவன் நம்மை மன்னித்து இருக்கலாம் .ஆனாலும் ஏமாற்றிய நமக்கு ஏமாற்றப்பட்டவனை குறித்துள்ள ஒரு மன வருத்தம் நிச்சயமாக கடைசி மட்டும் இருக்க வேண்டும். நாம் செய்த தவறுகளை மறந்து அலட்சியமாக வாழவும் கூடாது. பிறருக்கு நாம் இழைத்த அநீதியை உணர்ந்து, இயன்றவரை சமாதானத்தைத் தேடுகிற மனப்பான்மை நம்மிடத்தில் இருக்க வேண்டும். அத்தகைய மனத்தாழ்மையும், பொறுப்புணர்வும் இல்லாவிட்டால், நம்முடைய கிறிஸ்தவ வாழ்க்கை உணர்வற்றதாக மாறிவிடும் அபாயம் உண்டு.
இந்த வகையில் யாக்கோபின் வாழ்க்கை மனத்தாழ்மை, சமாதான முயற்சி, மற்றும் தேவனைச் சார்ந்திருத்தல் ஆகியவற்றின் ஒரு நல்ல எடுத்துக்காட்டாகக் காணப்படுகிறது.
— எசேக்கியேல் சண்முகவேல்