Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

எஸ்தர் புத்தகம் – வேதபாடம் 11*
*உங்கள்* *சிந்தனைக்கு*

*எஸ்தர் புத்தகம் – வேதபாடம் 11*
*Expository commentary on the book of Esther.*
யார் இந்த ஆமான்?
ஆமான் யார் என்பதைப் பற்றி வேத அறிஞர்களிடையே இரண்டு விதமான கருத்துக்கள் காணப்படுகின்றன. எஸ்தர் 3:1-ல் ஆமான் “ஆகாகியன்” (Agagite) என்று அழைக்கப்படுகிறான். “ஆகாக்” என்பது அமாலேக்கியர்களின் அரசனின் பெயர் (1 சாமுவேல் 15). எனவே, ஆமான் அமேலேக்கிய வம்சத்தைச் சேர்ந்தவன் என்று சிலர் கருதுகின்றனர்.
அதேவேளையில், சில வேறு வேத அறிஞர்கள், “Agag” என்பது மேதியா பகுதியில் இருந்த ஒரு இடத்தின் பெயராக இருக்கலாம் என்றும், அந்த பகுதி பின்னர் பாரசீக பேரரசின் ஒரு பகுதியாக இருந்ததாகவும் கருதுகின்றனர். பிரபல வேதப் போதகரான Thomas Constable, ஆமான் உண்மையில் அமேலேக்கியன் என்பதற்கு உறுதியான ஆதாரம் இல்லை என்றும், “ஆகாகியன்” என்பது ஒரு புவியியல் அல்லது வேறு அடையாளமாகவும் இருக்கலாம் என்றும் குறிப்பிடுகிறார்.
ஆமான் ஒரு மிகப்பெரிய செல்வந்தனாக இருந்தான். இதை எவ்வாறு அறிந்துகொள்ளலாம்?
யூதர்களை முற்றிலும் அழிப்பதற்காக அகாஸ்வேரு அரசனிடம் 10,000 தாலந்து வெள்ளியை அரச கருவூலத்திற்குக் கொடுப்பதாக வாக்குறுதி அளித்தான் (எஸ்தர் 3:9). அதன் அடிப்படையிலேயே அரசன் அவனுடைய திட்டத்திற்கு அனுமதி வழங்கினான்.
கிரேக்க வரலாற்றாசிரியரான Herodotus குறிப்பிடுவதன்படி, அக்காலத்தில் பாரசீக பேரரசின் ஆண்டு வருமானம் சுமார் 15,000 தாலந்து வெள்ளியாக இருந்தது. அப்படியானால், ஒரு வருட அரச வருமானத்தின் பெரும்பகுதிக்கு இணையான தொகையை வழங்க முன்வந்த ஆமான் எவ்வளவு பெரிய செல்வந்தன் என்பதை நாம் புரிந்துகொள்ளலாம்.
அப்படிப்பட்ட செல்வமும் செல்வாக்கும் கொண்டவன், பாரசீக அரசாங்கத்தில் மிக உயர்ந்த பதவியை வகித்தவன். ஆனால் சாதாரண அரச அலுவலரான மொர்தெகாய் தனக்குக் கொடுக்கப்பட வேண்டிய மரியாதையை அளிக்காமல் இருந்ததை அவனால் சகித்துக்கொள்ள முடியவில்லை. இதனால் அவன் மொர்தெகாய்மீது கடும் பகை கொண்டான்.
மொர்தெகாய் ஆமானுக்கு மரியாதை செலுத்தாதது சரியா, தவறா என்பது இங்கு விவாதப் பொருள் அல்ல. அது மொர்தெகாயின் மனச்சாட்சியிலும் விசுவாசத்திலும் சரியாக இருந்திருக்கலாம். ஆனால் ஆமான் அதை தனிப்பட்ட அவமானமாக மட்டுமல்லாமல், இன மற்றும் மத பகையாகவும் எடுத்துக்கொண்டான்.
*மொர்தெகாய்மீது தனிப்பட்ட கோபம் கொண்டிருந்தாலும்* , *அதை முழு யூத இனத்தையும் அழிக்கும் அளவுக்கு விரிவுபடுத்தியதுஞ அவனுடைய கொடூரமான மனநிலையை வெளிப்படுத்துகிறது. ஒரு மனிதனின் செயலுக்காக ஒரு முழு இனத்தையே வேரோடு அழிக்கத்* *திட்டமிட்டான்* . அதற்காக தனது செல்வத்தையும் அரசியல் அதிகாரத்தையும் பயன்படுத்தி அரசனைத் தனது திட்டத்திற்கு உடன்பட வைத்தான்.
தேவனால் தெரிந்துகொள்ளப்சபட்ட ஒரு இனத்தையே ஒரே நாளில் அழிக்கத் திட்டமிட்ட இந்த ஆமான், சாத்தானுடைய செயல்முறைக்கு ஒரு அடையாளமாக இருக்கிறான். உலகத்தின் இரட்சகர் யூதா கோத்திரத்திலிருந்து வருவார் என்பது சாத்தானுக்குத் தெரியும். ஆகையால், தேவனுடைய மீட்புத் திட்டத்திற்கு எதிராக அவன் தொடர்ந்து செயல்பட்டு வந்தான். அந்த நோக்கத்திற்காக ஆமான் ஒரு கருவியாகப் பயன்படுத்தப்பட்டான் என்று பல வேத அறிஞர்கள் கருதுகின்றனர்.
யூதர்களை அழிக்க முயன்றவர்கள்
பழைய ஏற்பாட்டிலும் உலக வரலாற்றிலும் யூதர்களை முற்றிலும் அழிப்பதற்காக பலர் எழுந்துள்ளனர். அவர்களைப் பற்றி சுருக்கமாகப் பார்ப்போம்.
1. *பார்வோன் (* யாத்திராகமம் 1)
எபிரேய ஆண் குழந்தைகள் அனைத்தையும் கொல்லும்படி கட்டளையிட்டான். நோக்கம் இஸ்ரவேல் இனத்தின் வளர்ச்சியைத் தடுத்து, அவர்களை அழித்துவிடுவதாகும்.
2. *அமேலேக்கியர்கள்*
இஸ்ரவேலர் எகிப்திலிருந்து வெளியே வந்த உடனேயே அவர்களைத் தாக்கிய முதல் பகைவர்கள் அமேலேக்கியர்கள் (யாத்திராகமம் 17:8-16). அவர்கள் பலவீனமானவர்களையும் பின்தங்கியவர்களையும் தாக்கினர் (உபாகமம் 25:17-19). இதனால் தேவன், “அமேலேக்கின் நினைவை வானத்தின் கீழிருந்து அழித்துப்போடுவேன்” என்று அறிவித்தார்.
பின்னர், அமேலேக்கியர்களை முற்றிலும் அழிக்கும்படி தேவன் சவுலுக்குக் கட்டளையிட்டார் (1 சாமுவேல் 15). ஆனால் சவுல் முழுமையாகக் கீழ்ப்படியவில்லை. சில வேத அறிஞர்கள், அந்தக் கீழ்ப்படியாமையின் விளைவாக அமேலேக்கிய செல்வாக்கு முற்றிலும் ஒழியாமல், பல தலைமுறைகளுக்குப் பிறகு ஆமானின் மூலம் மீண்டும் வெளிப்பட்டதாகக் கருதுகின்றனர்.
3. *பாலாக் மற்றும் பிலேயாம் (* எண்ணாகமம் 22–25)
மோவாபின் ராஜாவான பாலாக், இஸ்ரவேலை நேரடியாக வெல்ல முடியாது என்பதை அறிந்து, பிலேயாமின் மூலம் அவர்களைச் சபிக்க முயன்றான். தேவனுடைய ஜனங்களை பலவீனப்படுத்தி அழிப்பதே அவனுடைய நோக்கமாக இருந்தது.
4. *அத்தலியா (2 இராஜாக்கள் 11)*
யூதாவின் அரச குடும்பத்தில் தாவீதின் சந்ததியாரை அழிக்க முயன்றாள். இது வெறும் அரசியல் நடவடிக்கை மட்டுமல்ல; மேசியா வரவிற்கான வம்சத்தையும் அச்சுறுத்திய செயலாகும்.
இடைவேதாகம காலத்தில்
5. *Antiochus IV Epiphanes (கி.மு* . 175–164)
யூதர்களின் மத அடையாளத்தையே அழிக்க முயன்றான். எருசலேம் ஆலயத்தை அவமதித்தான். தோரா வைத்திருந்தவர்களுக்கு மரண தண்டனை விதித்தான். இதன் விளைவாக மக்கபேயர் புரட்சி உருவானது.
6. *டைட்டஸ் தலைமையில்ரோமர்கள் (கி.பி. 70)*
எருசலேமை முற்றுகையிட்டு ஆலயத்தைத் தகர்த்தனர். ஏராளமான யூதர்கள் கொல்லப்பட்டனர். பலர் நாடுகடத்தப்பட்டனர்.
7. Adolf Hitler
ஹிட்லர்
(1933–1945)*
ஹோலோகாஸ்ட் (Holocaust) வரலாற்றில் மிகவும் திட்டமிட்ட இனஅழிப்புகளில் ஒன்றாகும். சுமார் ஆறு மில்லியன் யூதர்கள் படுகொலை செய்யப்பட்டனர். ஆமானின் திட்டத்தைப் போலவே, ஒரு முழு இனத்தை அழிக்கும் நோக்கம் இதில் காணப்படுகிறது.
8. *Gamal Abdel Nasser*
நாசர்
(1952–1970)

இஸ்ரேல் நாடு உலக வரைபடத்தில் இருக்கக்கூடாது என்ற நிலைப்பாட்டை வெளிப்படையாக எடுத்த தலைவர்களில் ஒருவராக இருந்தார். இஸ்ரேலுக்கு எதிராக கடுமையான அரசியல் மற்றும் இராணுவ அணுகுமுறையைக் கடைப்பிடித்தார்.
தேவனுடைய பாதுகாப்பும் வாக்குறுதியும்
வரலாற்றில் பலர் யூதர்களுக்கு எதிராக எழுந்துள்ளனர். அவர்கள் பல துன்பங்களையும், நாடுகடத்தல்களையும், சிதறடிப்புகளையும் சந்தித்துள்ளனர். இருந்தபோதிலும், தேவன் அந்த இனத்தை முற்றிலும் அழிந்துபோக அனுமதிக்கவில்லை.
பல ஆயிரம்ப் ஆண்டுகளாக நாடுகடத்தல், சிதறடிப்பு, துன்புறுத்தல் ஆகியவற்றை அனுபவித்தும், தங்களுடைய தேசிய மற்றும் மத அடையாளத்தைப் பாதுகாத்துக்கொண்டுள்ள இனங்களில் யூதர்கள் தனித்துவமானவர்கள்.
தேவன் ஆபிரகாமுக்குக் கொடுத்த வாக்குறுதிகள் வீணாகவில்லை. தலைமுறைகள் கடந்தாலும், தேவன் தமது வார்த்தையை நிறைவேற்றுகிறார். உலக மீட்பின் திட்டத்தில் அவர் வைத்துள்ள நோக்கத்தை நிறைவேற்றத் தொடர்ந்து செயல்படுகிறார்.
அன்றைக்கு ஆமான் யூதர்கள்மீது பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி அவர்களை வேரோடு அழிக்க நினைத்தான். ஆனால் இறுதியில் அவனே வீழ்ந்துபோனான்.11 அதுபோல, யூதர்களை அழிக்க முயன்ற பலரும் வரலாற்றில் மறைந்துபோயினர். ஆனால் யூத இனம் தொடர்ந்து நிலைத்திருக்கிறது.
யூதர்களை அழிக்க நினைத்தவர்கள் பலர் இருந்தாலும், தேவனுடைய திட்டத்தை யாராலும் முறியடிக்க முடியவில்லை.
இந்தச் சூழ்நிலையில் ஆமானின் மனைவி சொன்ன வார்த்தைகள் கவனிக்கத்தக்கவை:
“ *மொர்தெகாய் யூதர்களின் சந்ததியாயிருந்தால்* , *அவனுக்கு விரோதமாக நீ தொடங்கிய இந்த முயற்சியில் வெற்றியடைய மாட்டாய்; நிச்சயமாக* *வீழ்ச்சியடைவாய்* ” (எஸ்தர் 6:13).
இந்த வார்த்தைகள் ஆமானின் வாழ்க்கையில் உண்மையானது.
அதேபோல், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தமது இரத்தத்தினால் சம்பாதித்த சபையைப் பற்றிக் கூறினார்:
“ *பாதாளத்தின் வாசல்கள் அதின்மேல் மேற்கொள்ளுவதில்லை* ” (மத்தேயு 16:18).
சபைக்கு எதிராக எத்தனை “ஆமான்கள்” எழுந்தாலும், தேவனுடைய சபையை முற்றிலும் அழிக்க யாராலும் முடியாது. உலகத்தின் முடிவுவரை கர்த்தர் தமது சபையைக் காத்துக்கொள்வார். அவரது நோக்கம் நிறைவேறும்; அவரது வாக்குறுதிகள் நிலைத்திருக்கும்.