Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

யோசேப்பு தன் சகோதரர்களை எதிர்கொண்ட விதம் சரியா?
உங்கள் சிந்தனைக்கு:

யோசேப்பு தன் சகோதரர்களை எதிர்கொண்ட விதம் சரியா?
யோசேப்பு பார்வோனுக்குப் பிறகு உயர்ந்த பதவியை அடைந்தபோது, பல ஆண்டுகள் கழித்து தன் சகோதரர்களை முதன்முதலில் சந்தித்தான். அந்தச் சந்திப்பில் அவர் நடந்துகொண்ட விதம் சில கேள்விகளை எழுப்புகிறது.
அவர் செய்த செயல்களைப் பார்ப்போம்:
1.முதலில் அவர்களை ஒற்றர்களாக குற்றம் சாட்டினார்.
2.பின்னர் அவர்களை மூன்று நாட்கள் சிறையில் அடைத்தார்.
அதற்குப் பிறகு அனைவரையும் விடுதலை செய்யாமல், சிமியோனை மட்டும் வைத்துக் கொண்டு மற்றவர்களை கானானுக்கு அனுப்பி, பென்யமீனை எகிப்திற்கு கொண்டு வரும்படி கூறினார்.
3.பின்னர் வெள்ளிக் கிண்ணத்தை பென்யமீனின் மூட்டையில் வைத்து, அதன் மூலம் அவர்கள்மேல் குற்றம் சுமத்தியார்.
4.
இறுதியாக, பென்யமீனை மட்டும் தங்க வைத்து, மற்ற சகோதரர்களை அனுப்ப முயன்றார்.
இந்த நிகழ்வுகளைப் பார்க்கும்போது, யோசேப்பின் செயல்கள் கடுமையாகத் தோன்றலாம். ஆனால், அவரது நோக்கம் என்ன என்பதைக் கவனிப்பதே முக்கியம்.
20 ஆண்டுகள் கழித்து தன் சகோதரர்களைக் கண்டபோது, உடனே தன்னை வெளிப்படுத்தி அன்புடன் அணைத்துக் கொள்ளாமல், ஏன் இவ்வளவு சோதனைகள் மூலம் அவர்களை நடத்தினார்?
இதற்கான முக்கிய காரணங்கள்:
ஆரம்பத்திலேயே தன்னை அறிமுகப்படுத்தியிருந்தால், அவர்களின் உள்ளத்தில் உண்மையான மனந்திரும்புதல் ஏற்படாமல் போயிருக்கும்.
அவர்கள் தாங்கள் செய்த அநீதியையும் கொடுமையையும் ஆழமாக உணர வாய்ப்பு கிடைக்காமல் போயிருக்கும்.
ஆகையால், யோசேப்பு எடுத்த இந்த நடைமுறைகள் அவர்களை அவமானப்படுத்துவதற்கோ, துன்பப்படுத்துவதற்கோ அல்ல. மாறாக, அவர்கள் தங்கள் பிழைகளை உணர்ந்து மனந்திரும்புவதற்கான ஒரு ஆவிக்குரிய செயல்முறை ( Spiritual process) ஆகும் .
அவரது நோக்கம்:
அவர்களை சிந்திக்கச் செய்வது
குற்ற உணர்வை எழுப்புவது
உண்மையான மனந்திரும்புதலுக்கு வழிநடத்துவது
என்பதாகும்.
எனவே, நாம் பார்க்க வேண்டியது யோசேப்பின் செயல்களை மட்டும் அல்ல; அவன் செயல்களின் பின்னால் இருந்த நோக்கத்தை தான்.
அதேபோல, தேவனும் பல நேரங்களில் நம் வாழ்க்கையில் சோதனைகள், கஷ்டங்கள், துன்பங்கள் ஆகியவற்றை அனுமதிக்கிறார். அவை நம்மை தண்டிப்பதற்காக அல்ல; நம்மை சுத்திகரித்து, நம்முடைய தவறுகளை உணரச் செய்து, அவருடைய வழியில் நடத்துவதற்காகத்தான்.
சிலருக்கு மனந்திரும்புதல் உடனடியாக நிகழலாம். ஆனால் அனைவருக்கும் அப்படி அல்ல. பலருடைய வாழ்க்கையில்,
“ மனந்திரும்புதல் என்பது ஒரு செயல்முறை” (Repentance is a process)
என்பது உண்மையாகிறது.
இந்நிலையில், யோசேப்பின் செயல்களை
“ Ends justify the means” என்ற கோணத்தில் பார்க்கலாம் என்று சிலர் கூறலாம். ஆனால் வேதபார்வையில், ஒரு செயலை மதிப்பிடும்போது அதன் வெளிப்புறத்தை விட அதன் நோக்கம் மிகவும் முக்கியமானது.
நோக்கம் நியாயமானதும், பரிசுத்தமானதும், உண்மையானதும் ஆக இருந்தால், அது தேவனுடைய பார்வையில் ஏற்றுக்கொள்ளப்படும்.