Expository commentary on the book of Esther. எஸ்தர் புத்தகம் – வேதபாடம் 12
உங்கள் சிந்தனைக்கு.
Expository commentary on the book of Esther.
எஸ்தர் புத்தகம் – வேதபாடம் 12
காணப்படாத தேவன், காணப்படும் செயல்கள்"
எஸ்தர் புத்தகத்தில் தேவனுடைய பரிபாலன செயல்பாடு (Providence)
எஸ்தர் புத்தகத்தின் தனிச்சிறப்பு என்னவென்றால், அதில் "தேவன்" என்ற பெயர் ஒரு முறைகூட நேரடியாகக் குறிப்பிடப்படவில்லை.
ஆனால் புத்தகத்தின் ஒவ்வொரு அதிகாரத்திலும் தேவனுடைய கரம் மறைவாகச் செயல்படுவதைக் காண முடிகிறது. இதுவே Providence அல்லது தேவனுடைய பரிபாலன செயல்பாடு என்று அழைக்கப்படுகிறது.
Providence என்பது, தேவன் வெளிப்படையான அற்புதங்களைச் செய்யாமல், மனிதர்களின் செயல்கள், சூழ்நிலைகள் மற்றும் நிகழ்வுகளைத் தமது நோக்கத்திற்கேற்ப வழிநடத்துவதாகும். எஸ்தர் புத்தகத்தில் தேவன் எவ்வாறு மறைமுகமாகச் செயல்பட்டார் என்பதைப் பல நிகழ்வுகள் வெளிப்படுத்துகின்றன.
1. வஸ்தி பட்டத்தரசியின் பதவி நீக்கம்
பெர்சிய கலாச்சாரத்தில் பட்டத்தரசியை பொதுமக்கள் முன் அழகைக் காட்டுவதற்காக அழைப்பது வழக்கமல்ல. ஆனால் வஸ்திக்கு அத்தகைய அழைப்பு வந்தது. அதை அவள் நிராகரித்ததால், தனது அரசி பதவியை இழந்தாள் (எஸ்தர் 1). இது எஸ்தர் பின்னர் அந்த இடத்திற்கு வருவதற்காக தேவன் ஏற்படுத்திய சூழ்நிலையாகக் காணப்படுகிறது.
2. எஸ்தரின் தேர்வு
எஸ்தர் அரசியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது ஒரு சாதாரண அழகுப் போட்டியின் விளைவு மட்டுமல்ல. யூத மக்களைப் பாதுகாக்க தேவன் முன்கூட்டியே அவளை அந்த இடத்தில் வைத்திருந்தார் (எஸ்தர் 2:17).
3. மொர்தெகாயின் விசுவாசமான செயல் பதிவு செய்யப்பட்டல்
மொர்தெகாய் அரசனை எதிர்த்துச் செய்யப்பட்ட சதியை அறிந்து எஸ்தரிடம் தெரிவித்தான். அதன் மூலம் அரசன் காப்பாற்றப்பட்டான் (எஸ்தர் 2:21-23). அந்த நேரத்தில் மொர்தெகாய்க்கு எந்த வெகுமதியும் வழங்கப்படவில்லை. ஆனால் தேவன் சரியான நேரத்திற்காக அந்தச் செயலின் பதிவை பாதுகாத்து வைத்திருந்தார்.
4. ஆமானின் சீட்டு பதினொரு மாதங்கள் கழித்து விழுந்தது
ஆமான் போட்ட "பூர்" (சீட்டு) யூதர்களை அழிப்பதற்கான நாளை உடனடியாக அல்லாமல் பல மாதங்கள் கழித்து நிர்ணயித்தது (எஸ்தர் 3:7). இந்த தாமதம் யூதர்களின் இரட்சிப்பிற்கான வழியைத் திறந்தது.
5. அரசனுக்கு தூக்கம் வராத இரவு
எஸ்தர் புத்தகத்தின் மிகப்பெரிய திருப்புமுனை இதுவே (எஸ்தர் 6:1-3).
ஒரு இரவில்:
அரசனுக்கு தூக்கம் வரவில்லை.
நாளாகமப் புத்தகம் வாசிக்கப்பட்டது.
மொர்தெகாய் அரசனைக் காப்பாற்றிய சம்பவம் நினைவுகூரப்பட்டது.
அவனுக்கு இன்னும் கௌரவம் செய்யப்படவில்லை என்பது தெரியவந்தது.
இவை அனைத்தும் சாதாரண நிகழ்வுகள் அல்ல; தேவனுடைய மறைவான செயல்பாட்டின் வெளிப்பாடுகள்.
6. மொர்தெகாயின் கௌரவிப்பு
மொர்தெகாயைத் தூக்கிலிட அனுமதி பெற ஆமான் அரண்மனைக்கு வந்திருந்த நேரத்திலேயே, அரசன் அவனிடம்:
"ராஜா கௌரவிக்க விரும்புகிற மனிதனுக்கு என்ன செய்ய வேண்டும்?" (எஸ்தர் 6:6)
என்று கேட்டான். ஆமான் தன்னைத்தான் நினைத்துக்கொண்டு பதில் கூறினான். ஆனால் அந்த கௌரவம் மொர்தெகாய்க்கே வழங்கப்பட்டது (எஸ்தர் 6:4-10).
7. எஸ்தருக்குக் கிடைத்த அரசனின் தயவு
எஸ்தர் அரசனுடைய சந்நிதியில் பிரவேசித்தபோது, அரசன் அவளுக்கு கிருபை காட்டினான் (எஸ்தர் 5:2). அதன் மூலம் அவள் தன் ஜனங்களுக்காக மன்றாடி அவர்களுடைய விடுதலையைப் பெற்றாள். அரசர்களின் இருதயங்களைக்கூட தேவன் தமது சித்தத்தின்படி திருப்புகிறார் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்.
8. ஆமானின் வீழ்ச்சி
மொர்தெகாய்க்காக ஐம்பது முழ உயரமுள்ள தூக்குமரத்தை ஆமான் அமைத்திருந்தான் (எஸ்தர் 5:14). ஆனால் இறுதியில்:
"ஆமானை மொர்தெகாய்க்காக ஆயத்தம்பண்ணிய தூக்குமரத்தில் தூக்கிப்போட்டார்கள்." (எஸ்தர் 7:10)
தான் பிறருக்காகத் தோண்டிய குழியில் அவனே விழுந்தான்.
9. யூதர்களின் விடுதலை
யூதர்களை அழிக்க திட்டமிடப்பட்ட நாளிலேயே சூழ்நிலை முற்றிலும் தலைகீழாக மாறியது.
"எதிரிகள் அவர்களை மேற்கொள்ள நினைத்த நாளில், அதற்கு மாறாக யூதர்களே தங்கள் பகைவர்களை மேற்கொண்டார்கள்." (எஸ்தர் 9:1)
தேவன் சூழ்நிலைகளை முழுமையாக மாற்றி தமது ஜனங்களைப் பாதுகாத்தார்.
நமக்கான பயன்பாடு
எஸ்தர் புத்தகம் முழுவதும் தேவனுடைய மறைவான செயல்பாட்டை வெளிப்படுத்துகிறது.
அதைப் போலவே நம்முடைய வாழ்க்கையிலும் தேவனுடைய பரிபாலன கரம் செயல்பட்டு வருகிறது.
நாம் கடந்த கால வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும்போது, சில சந்திப்புகள், உறவுகள், நட்புகள், வாய்ப்புகள், மற்றும் அனுபவங்கள் தற்செயலாக நிகழ்ந்தவை அல்ல என்பதை உணர முடிகிறது. அநேக நேரங்களில் அவை தேவனால் முன்கூட்டியே ஏற்படுத்தப்பட்ட நிகழ்வுகளாக இருக்கின்றன.
தேவனுடைய பரிபாலன செயல்பாட்டை சரியாகப் புரிந்துகொள்ளும் விசுவாசி, தாம் கர்த்தருடைய பாதுகாப்பிலும் வழிநடத்துதலிலும் இருக்கிறோம் என்ற உறுதியோடு வாழ முடியும்.
கர்த்தருக்குப் பயந்து நடக்கிறவர்களின் வாழ்க்கையில் எதுவும் தற்செயலாக நிகழ்வதில்லை.
தேவன் தமது நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக எல்லாவற்றையும் ஒன்றுசேர்ந்து செயல்படச் செய்கிறார். இதை உணர்ந்து வாழ்கிற மனிதன் ஆவிக்குரிய வாழ்க்கையில் உறுதியும் பாதுகாப்பும் உடையவராக தன்னை நிலை நிறுத்திக் கொள்வான்.