Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

2 நாளாகமம் / குறிப்பேடுகள் புத்தகம் வேதபாடம் – 18 | ஆய்வு கட்டுரை

உங்கள் சிந்தனைக்கு.

2 நாளாகமம் / குறிப்பேடுகள் புத்தகம்
வேதபாடம் – 18 |
ஆய்வு கட்டுரை
எபிரேய வேதாகமத்தின் வரிசைப்படி 1 மற்றும் 2 நாளாகமம் (Chronicles) புத்தகங்களே கடைசி புத்தகங்களாக அமைந்துள்ளன. இது கவனிக்கத்தக்க ஒரு முக்கியமான உண்மை. யூத சாம்ராஜ்யம் பாபிலோனியர்களால் கைப்பற்றப்பட்டு, யூதர்கள் பாபிலோனில் சிறைவாசம் அனுபவித்த காலகட்டத்தில்தான் இந்த புத்தகங்கள் தொகுக்கப்பட்டு எழுதப்பட்டன என்பதே வேதாகம ஆய்வாளர்களின் பொதுவான கருத்தாகும்.

1 நாளாகமம் 1 முதல் 9 அதிகாரங்களில் காணப்படும் விரிவான வம்ச வரலாறுகளைத் தவிர, இந்த இரண்டு புத்தகங்களில் குறிப்பிடப்படும் பெரும்பாலான சம்பவங்கள் 1 & 2 சாமுவேல் மற்றும் 1 & 2 அரசர்கள் புத்தகங்களில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள நிகழ்வுகளே. அதாவது, 1 மற்றும் 2 சாமுவேல் புத்தகங்களில் கூறப்பட்ட நிகழ்வுகள் பெரும்பாலும் 1 நாளாகமம் புத்தகத்திலும், 1 மற்றும் 2 அரசர்கள் புத்தகங்களில் கூறப்பட்ட நிகழ்வுகள் பெரும்பாலும் 2 நாளாகமம் புத்தகத்திலும் மீண்டும் குறிப்பிடப்பட்டுள்ளன.
ஆனால் இங்கு ஒரு மிக முக்கியமான வித்தியாசம் காணப்படுகிறது. சாமுவேல் மற்றும் அரசர்கள் புத்தகங்களில் சொல்லப்படும் நிகழ்வுகள் பெரும்பாலும் அரசியல் மற்றும் வரலாற்று நோக்கில் (Political / Historical side) எழுதப்பட்டவை.

அரசர்கள், யுத்தங்கள், அரசியல் முடிவுகள், தேசிய எழுச்சி மற்றும் வீழ்ச்சி ஆகியவை அதில் முக்கிய இடம் பெறுகின்றன.

இதற்கு மாறாக, குறிப்பேடுகள் (Chronicles) புத்தகங்கள் யூதர்களின் மத மற்றும் ஆன்மீக வாழ்க்கையை (Religious / Spiritual side) மையமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளன. குறிப்பாக:
எருசலேமில் தேவாலயம் கட்டப்பட்ட விதம்
ஆசாரியர்களின் பணிகள் மற்றும் அவர்களின் ஒழுங்குகள்
ஆராதனை முறைகள் மற்றும் பாடல்கள்
உடன்படிக்கைப் பெட்டியை எருசலேமுக்கு கொண்டு வந்த நிகழ்வுகள்
மோசேயின் நியாயப்பிரமாணப்படி ஆராதனையை மீண்டும் நிறுவ வேண்டிய அவசியம்
தாவீதின் வம்சத்தின் சிறப்பு
இவை அனைத்தும் இந்த இரண்டு புத்தகங்களில் அதிகமாக வலியுறுத்தப்பட்டுள்ளன.

யூதா ராஜ்யம், எருசலேம், தேவாலயம் மற்றும் தாவீதின் வம்சம் ஆகியவற்றைப் பற்றியே அதிகமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
பழைய ஏற்பாட்டிலுள்ள மற்ற எந்த புத்தகத்தையும் விட நாளாகமம் புத்தகம் மிக நீண்ட வரலாற்றுக் காலத்தை உள்ளடக்கியதாக உள்ளது.

இந்த இரண்டு குறிப்பேடுகள் புத்தகங்கள், சிறைவாசத்திலிருந்து திரும்பிய யூதர்களுக்கு ஒரு ஆன்மீக அடையாளத்தையும் நம்பிக்கையையும் வழங்கும் நோக்கில் எழுதப்பட்டதாகத் தோன்றுகிறது. அவர்கள் மீண்டும் தேவனுடைய ஆலயத்தை மையமாகக் கொண்டு, நியாயப்பிரமாணத்தின்படி வாழ வேண்டும் என்பதே இதன் அடிப்படை நோக்கம்.
இந்த பின்னணியில், வேதாகம அறிஞர் Dr. Constable கூறும், “வேதாகமத்தில் ஆன்மீக செல்வம் நிறைந்த புத்தகங்களில் நாளாகமமும் ஒன்று” என்ற கருத்து முழுமையாக உண்மையானதாக விளங்குகிறது.

இங்கே நாம் இன்னொரு முக்கியமான காரியத்தை கவனிக்க வேண்டும். இந்த இரண்டு புத்தகங்கள், எருசலேம் தேவாலயம் இடிக்கப்பட்டதற்கு ஏறக்குறைய 150 ஆண்டுகள் கழித்து எழுதப்பட்டவை. சாலமோன் கட்டிய முதல் தேவாலயம் கிமு 586-ஆம் ஆண்டில் பாபிலோன் அரசன் நெபுகாத்நேசரால் இடிக்கப்பட்டது. அதன் பின்னர் யூதர்கள் பாபிலோன் சிறைவாசத்திற்கு (Exile) எடுத்துச் செல்லப்பட்டார்கள்.
சிறைவாசத்திற்குப் பிறகு இரண்டாம் தேவாலயம் கட்டப்படும் காலகட்டத்தில், எஸ்ரா பழைய வரலாற்றுச் சம்பவங்களைத் தொகுத்து எழுதினார் என்று பொதுவாக நம்பப்படுகிறது.

இவ்வாறு அவர் பழைய நிகழ்வுகளை எழுதும் போது, ஒரு விசேஷமான சொல்லை சில இடங்களில் பயன்படுத்துகிறார். அது தான் “இந்நாள் வரைக்கும்” என்ற சொல்.
குறிப்பாக 2 நாளாகமம் 5:9 வசனம் பலருக்கு குழப்பத்தை ஏற்படுத்துகிறது:

“பெட்டியிலிருக்கிற தண்டுகளின் முனைகள் சந்நிதிஸ்தானத்திற்கு முன்னே காணப்படத்தக்கதாய் அந்தத் தண்டுகளை இழுத்தார்கள்; புறம்பே அவைகள் காணப்படவில்லை; அது இந்நாள்வரைக்கும் அங்கே இருக்கிறது.”

சாலமோன் காலத்தில் நடந்த இந்த நிகழ்வை, சுமார் 150 ஆண்டுகளுக்குப் பிறகு எழுதும் எஸ்ரா ஏன் “இந்நாள்வரைக்கும்” என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டும் என்ற கேள்வி இயல்பாக எழுகிறது.
அதற்கான பதிலை 1 நாளாகமம் 13:11 வசனம் தெளிவாக விளக்குகிறது:

“அப்பொழுது கர்த்தர் ஊசாவை அடித்ததினிமித்தம் தாவீது விசனப்பட்டு, அந்த ஸ்தலத்திற்கு இந்நாள்மட்டும் வழங்கிவருகிற பேரேஸ்-ஊசா என்னும் பேரிட்டார்.”


அதாவது, அந்த இடம் எஸ்ரா வாழ்ந்த காலம் வரைக்கும் பேரேஸ்-ஊசா என்ற பெயரால் அழைக்கப்பட்டு வந்தது என்பதையே அவர் உறுதிப்படுத்துகிறார். இதேபோல் 1 நாளாகமம் 5:26 வசனத்தையும் இதே விதத்தில் புரிந்து கொள்ள வேண்டும்.

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், 150 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவங்களைப் பற்றி எழுதினாலும், அந்த நிகழ்வுகளின் விளைவுகள் அல்லது அடையாளங்கள் எஸ்ரா எழுதுகிற காலம் வரைக்கும் தொடர்ந்திருந்தன என்பதையே “இந்நாள் வரைக்கும்” என்ற சொல்லின் மூலம் அவர் வலியுறுத்துகிறார்.

எனவே, வேதாகம எழுத்தாளர் தவறுதலாக அல்லது கவனக்குறைவாக எந்த வார்த்தையையும் பயன்படுத்தவில்லை. இதில் எந்தக் காலப் பிழையும் இல்லை. மாறாக, அந்த நிகழ்வு தொடர்ந்து நிலவிய ஒரு உண்மையாக இருந்ததைச் சுட்டிக்காட்டுவதே அவரது நோக்கம்.
இதுவும், வேதம் பிழையற்றது, உண்மையின் அடிப்படையில் எழுதப்பட்டது என்பதற்கான ஒரு வலுவான உதாரணமாக விளங்குகிறது.