2 நாளாகமம் அல்லது குறிப்பேடுகள் புத்தகம், * வேத பாடம் 14.* *யார் இந்த எசேக்கியா*அரசன்
*உங்கள் சிந்தனைக்கு
2 நாளாகமம் அல்லது குறிப்பேடுகள் புத்தகம்,
*
வேத பாடம் 14.*
*யார் இந்த எசேக்கியா*அரசன்
( பாகம்1 )
யூத தேசத்தை ஆண்ட அரசர்களில் மிக முக்கியமான, வரலாறு தவிர்க்க முடியாத அரசன் எசேக்கியா.
வேதத்தில் இவனைக் குறித்து பல அதிகாரங்கள் காணப்படுகின்றன.
இரண்டு அரசர்கள் புத்தகத்தில் மூன்று அதிகாரங்களும் ஏசாயா தீர்க்கதரிசன புத்தகத்தில் நான்கு அதிகாரங்களும்,
2 நாளாகமம் புத்தகத்தில் நான்கு அதிகாரங்களும் இந்த அரசனைக் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.
இரண்டு அரசர்கள் புத்தகத்தில் இவனுடைய அரசியல் நடவடிக்கைகளை பற்றியும் இரண்டு நாளாகமம் புத்தகத்தில் இவன் ஆலயத்தை புதுப்பித்த காரியத்தை பற்றியும், சீர்திருத்தங்களை பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவனுடைய செயல்பாடுகளை சுருக்கமாக குறிப்பிட வேண்டுமென்றால் இவன் தாவீது சாலொமோன் இவர்களது குணங்களை உள்ளடக்கிய நபராக காணப்படுகிறார்.
இவன் ஆலயங்களுக்கு அடுத்த சீர்திருத்தங்களின் முக்கியத்துவத்தை அறியவேண்டுமென்றால் இவன் தகப்பன் ஆகாஷ் ஆசரிப்பு கூடாரத்திற்கும் அதன் வழிபாட்டிற்கும் செய்த சீர்கேட்டை புரிந்து கொள்ள வேண்டும்.
இவன் அரசாட்சி புரிந்த அதே காலகட்டத்தில் தான் இஸ்ரவேலை ஓசெயா அரசாட்சி செய்தான். இவன்தான் இஸ்ரவேலை ஆண்ட கடைசி அரசன்.
அசீரிய அரசன் சல்மனாசார்
சமாரியாவைக் கைப்பற்றி இஸ்ரயேலரை அசீரியாவுக்கு நாடுகடத்தினான்.
நாடு கடத்தப்பட்ட இஸ்ரவேல் ஜனங்கள் அதற்குப் பிறகு தங்கள் நாட்டுக்கு திரும்பியதாக குறிப்புகள் இல்லை.
2 இராஜாக்கள் 17:3, 6
வடக்கு தெற்கு என்று இரண்டாகப் பிரிந்த ஒருமைப்பட்ட இஸ்ரவேல் தேசத்தின் வடக்கு பகுதி அசரீய நாட்டின் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டது.
அந்த காலகட்டத்தில் யூதாவை ஆட்சி செய்தவன்தான் எசேக்கியா ராஜா. இவன் அரியணை ஏறிய காலகட்டம் மிக முக்கியமான ஒரு காலகட்டம்.
இந்தக் காலக்கட்டங்களை புரிந்து கொண்டால் தான் எசேக்கியா ராஜா எவ்வளவு தவிர்க்க முடியாதவன் என்பதை புரிந்து கொள்ள முடியும்.
இவனுடைய தகப்பன் ஆகாஷ், நாட்டை முழுக்க முழுக்க சிலைகளின் வழிபாட்டுக்குள் கொண்டு வந்து விட்டான்.
அவன் வாழ்ந்த காலத்தில் ஆலயத்தை இழுத்து பூட்டி விட்டான்.
ஆலயத்தின் முன் மண்டப கதவுகளையும் பூட்டி, விளக்குகளை அணைத்துப் போட்டான்.
ஆலயத்தில் தூபங்காட்டவோ, தகன காணிக்கைகளைச் செலுத்தவோ இல்லை.
ஆலயத்தை அசுத்தத்தால் நிரப்பினான்.
இதனால் ஆலயம் முழுவதுமாக தீட்டுப்பட்டு காணப்பட்டது.
தகன பலிபீடம், அதன் பாத்திரங்கள், இறை சமுக அப்பங்களை ஒழுங்குபடுத்தும் மேஜை, அதன் பொருட்கள் ஆகியவைகள் அசுத்தமாக்கப்பட்டது.
2 நாளாகமம் 29:1.
லேவியர்கள் ஆசாரியர்களுக்கு ஆலயத்தில் வேலையில்லை. பண்டிகைகள் கொண்டாடப்படவில்லை.
சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் நாடு முழுக்க ஒரு ஆவிக்குரிய வீழ்ச்சியை சந்தித்த நேரம்.
அதே நேரத்தில் இஸ்ரவேல் தேசத்தை கைப்பற்றிய அசீரியப்படைகள் யூத தேசத்தை கைப்பற்ற பெரும் படையோடு முற்றுகையிட்ட நேரம்.
இப்படிப்பட்ட அரசியல் மற்றும் ஆன்மீக போராட்டங்கள் மத்தியில் தான் எசேக்கியா ராஜா தேசத்தை கர்த்தருக்கு நேராக திருப்பினான்.
யூத ஜனங்கள் தேவனுக்கு நேராக திரும்பிய போது அசரீயருடைய படையெடுப்பிலிருந்து தேசத்தை கடவுள் காப்பாற்றினார்.
அதன் விளைவாக அடுத்த நூறு ஆண்டுகளுக்கு மேலாக அந்த யூத தேசம் நிலைத்திருந்தது.
அது மட்டுமல்ல தாவீதின் வம்சம் நிலைத்திருக்க கடவுள் எசேக்கியா அரசனை ஒரு கருவியாக பயன்படுத்தினார்.
இவன் செய்த ஆவிக்குரிய சீர்திருத்தங்கள் நாட்டைக் காப்பாற்றிய காரியங்களைப் பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்.