*தேவன் எகிப்தின் முதற்பேறானவர்களை அழித்த காரணம் என்ன?*
*உங்கள் சிந்தனைக்கு.
*
*தேவன் எகிப்தின் முதற்பேறானவர்களை அழித்த காரணம் என்ன?*
தேவன் இஸ்ரவேலைத் தம்முடைய "முதற்பேறான மகன்" என்று அழைக்கிறார் (யாத்திராகமம் 4:22).
ஆனால் பார்வோன், இஸ்ரவேல் மக்களிடையே பிறந்த ஆண் குழந்தைகள் அனைத்தையும் கொன்று, நைல் நதியில் எறியும்படி கட்டளையிட்டான். தம்முடைய முதற்பேறான மகனாகிய இஸ்ரவேலைத் தம்மை ஆராதிக்க அனுமதிக்காவிட்டால், பார்வோனுடைய முதற்பேறான மகனைக் கொல்வேன் என்று தேவன் ஆரம்பத்திலேயே அவனை எச்சரித்தார் (யாத்திராகமம் 4:23).
இருப்பினும், ஒன்பது வாதைகளை அனுபவித்த பிறகும் பார்வோன் தனது இருதயத்தைக் கடினப்படுத்தி, இஸ்ரவேல் ஜனங்களை விடுவிக்க மறுத்தான். அதன் விளைவாக, பார்வோனின் முதற்பேறான மகன் முதல் ஏந்திரம் அரைக்கும் அடிமைப்பெண்ணின் முதற்பேறான மகன் வரையும், எகிப்திலிருந்த எல்லா முதற்பேறானவர்களும், மிருகங்களின் தலைஈற்றும் மரித்தன (யாத்திராகமம் 11:5).
இது தேவனுடைய நீதித்தீர்ப்பின் வெளிப்பாடாகும். வேதாகமம் தெளிவாகக் கூறுகிறது:
"தேவன் தம்மைப் பரியாசம்பண்ணவொட்டார்; மனுஷன் எதை விதைக்கிறானோ, அதையே அறுப்பான்."
— கலாத்தியர் 6:7
பார்வோன் தேவனுடைய ஜனங்களுக்கு எதைச் செய்தானோ, அதற்கேற்ப தேவன் அவனுக்குத் தம்முடைய நீதியைச் செலுத்தினார்.
W. *W. Wiersbe* கூறுவது போல:
" *The Lord simply paid Pharaoh back with his own currency."*
("பார்வோன் பயன்படுத்திய அதே நாணயத்திலேயே தேவன் அவனுக்குப் பதிலளித்தார்.")
வேதாகமத்தில் இதுபோன்ற பல உதாரணங்கள் உள்ளன. யாக்கோபு, தாவீது, ஆமான் போன்றோர் தாங்கள் விதைத்ததையே ஒருவகையில் அறுவடை செய்தார்கள்.
நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்
இரட்சிப்பின் அனுபவத்தைப் பெற்றுள்ள நாம், மற்றவர்களுக்குச் செய்த அநீதிக்காக மனந்திரும்பி மன்னிப்பு கேட்டால், தேவன் பாவத்தை மன்னிப்பார். ஆனால் பல நேரங்களில், நாம் செய்த செயல்களின் விளைவுகளை இந்த உலகிலேயே அனுபவிக்க வேண்டியிருக்கும். விதைத்ததின் அறுவடை என்ற தேவனுடைய நியதி மாறுவதில்லை.
எனவே, பிறருக்குத் தீங்கு செய்யும் காரியத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நாம் எதை விதைக்கிறோமோ, அதையே அறுப்போம்.
விசுவாசிகள் எல்லா நேரங்களிலும் பெரிய நன்மைகளைச் செய்ய முடியாவிட்டாலும், ஒருவருக்கும் அநீதி செய்யாமல் இருப்பதில் பயபக்தியோடு வாழ வேண்டும்.
அதேவேளையில், தேவனுடைய பிள்ளைகளுக்கு விரோதமாக எந்த ஆயுதத்தைக் கொண்டு எதிரிகள் கொடுமைப்படுத்துகிறார்களோ, பல சந்தர்ப்பங்களில் அதே ஆயுதத்தையே தேவன் அவர்களுக்கு விரோதமாகத் திருப்புகிறார். ஏனெனில், தேவன் தமது மக்களுக்காக நியாயம் விசாரிக்கும் நீதியுள்ள தேவனாக இருக்கிறார்.