Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

வேத பாடம் ஆறு 2 நாளாகமம் அல்லது குறிப்பேடுகள் புத்தகம்‌
உங்கள் சிந்தனைக்கு.
வேத பாடம் ஆறு
2 நாளாகமம் அல்லது குறிப்பேடுகள் புத்தகம்‌.
தியானிக்க வேண்டிய வேத பகுதி 19:5-11
ஏறக்குறைய 2900
ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு நீதி விசாரணை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இந்த வசனங்கள் மிகப்பெரிய ஒரு ஆதாரமாக இருக்கிறது.
யோசபாத் அரசன் யூதாவை ஆண்ட ‌சிறந்த அரசர்களுள் ஒருவன். அவன் தன் மக்களை நியாயம் தீர்ப்பதற்கும், விசாரிப்பதற்கும் நியாயாதிபதிகளை பட்டணங்கள் தோறும் ஏற்படுத்தினான்.
அவர்களை நியமனம் செய்யும்பொழுது நியாயாதிபதிகள் எப்படி நியாயம் விசாரிக்க வேண்டும், எப்படி நேர்மையாக இருக்க வேண்டும், எப்படி பரிகாரம் வாங்காமல் இருக்க வேண்டும், எப்படி உத்தம இருதயத்தோடு அந்தப் பணியைச் செய்ய வேண்டும்,
விசாரணைக்காக நியாயம் தேடி வருகிற மக்களை எப்படி கவனத்தோடு கையாள வேண்டும் என்கிற பல காரியங்களை அவர்களுக்கு விளக்கிக் கூறி இருக்கிறான்..
அவற்றில் சிலவற்றை இங்குக் குறிப்பிட விரும்புகிறேன்.
விசாரணை செய்யும் பணி என்பது கடவுளுடைய பணி. அந்தப் பணியைச் செய்கிற நபர்களோடு கடவுள் இருக்கிறார். .
அந்தப் பணியைச் செய்கிறவர்கள் தேவ பயத்தோடு செயல்பட வேண்டும்‌.
பரிதானம் அதாவது கையூட்டு வாங்க கூடாது.
உத்தம இருதயத்தோடு செயல்பட வேண்டும்.
நியாயத்தைத் தேடி வருகிறவர்களை கோபப்படுத்த கூடாது.
விசாரிப்பு பணியில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் .
இரத்தம் சிந்துதல், சட்டம், கட்டளைகள், விதிமுறைகள், ஒழுங்கு விதிகள் ஆகிய வழக்குகளை உங்களிடம் கொண்டுவரும்போது, யெகோவாவுக்கு விரோதமாகப் பாவம் செய்யவேண்டாமென, அவர்களை எச்சரிக்க வேண்டும்.
இந்தக் கோட்பாடுகளில், இன்றைய உலகில் நாம் எப்படியெனப் பொருத்திப் பார்க்க வேண்டும்.
1.இதன் கோட்பாடுகளை‌ அரசு பணியில் இருக்கும் விசுவாசிகள் கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும்.
அரசு ஊழியர்கள் அரசாங்கக் கட்டளைகளுக்காக மட்டுமல்லாமல் அந்தக் கட்டளைகளைச் செயல்படுத்தும் படியான வாய்ப்பு கொடுத்த தேவனுக்காகவும் கவனத்துடன் செயல்பட வேண்டும்.
2.அதே வேளையில் தலைமைப் பொறுப்பில் இருக்கும் நபர்கள் இந்தக் கட்டளைகளை, கோட்பாடுகளை அணு அளவு பிசகாமல் தங்கள் வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டும்.
சபைகளில், இயக்கங்களில் குறைகளை நிவர்த்தி செய்வதற்காக நியாயங்களைத் தேடி வருகிறவர்களை, தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை நிவர்த்தி செய்வதற்காக வருகிறவர்களை ஜாதி, மொழி, பணம், சமுதாய பின்புலம், ரத்த சம்பந்தமான உறவுகள் இவைகளை உதறித் தள்ளிவிட்டு ஒதுக்கிவிட்டு பாரபட்சம் பார்க்காமல் நியாயம் செய்யச் சபை தலைவர்கள் போதகர்கள் அழைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
வெறுமனே போதனை செய்வது மட்டும் அவர்களது வேலை அல்ல. இப்படிப்பட்ட குறைகளோடு வருபவர்களுக்கு நியாயம் செய்வதும் அவர்களுடைய பிரதான கடமை. அதிலும் குறிப்பாக ஏழை எளிய விசுவாசிகளுக்குப் புறக்கணிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை உறுதி செய்வது தலைவர்களுடைய கடமை. இதைத் தலைவர்கள் தவிர்க்கக் கூடாது.
அல்லது அனுபவம் இல்லாத முதிர்ச்சி இல்லாதவர்களிடம் ஒப்படைத்துவிட்டு ஒதுங்கி விடுவது தலைவருக்குரிய பண்பல்ல.
நம்முடைய அரசியல் சட்டத்திற்க்கு முன்பாக நாம் எல்லோரும் சமம் என்று அறிந்திருக்கிறோம்.
அதைவிட தேவனுடைய மேலான சட்ட திட்டங்களுக்கு முன்பாக நாம் எல்லோரும் சமம். ‌
தலைவர்கள் என்றாலும் சரி போதகர்கள் என்றாலும் சரி விசுவாசிகள் என்றாலும் சரி எல்லோரும் தேவனுடைய கட்டளைகளுக்கும் பிரமாணங்களுக்கும் முன்பாகச் சமமாக நிற்கிறோம்‌.
அப்படி இருக்க நியாய பரிபாலனத்தில் பாரபட்சம் காட்டுவது அநீதியிலும் கொடிய அநீதியாகும்.
தேவனுடைய நீதி என்பது பிரசங்கத்தில் அல்ல செயல்பாட்டில் இருக்கிறது. கிறிஸ்தவ உலகத்தில் அநீதிகள் இழைக்கப்படுவதை பார்க்கும்பொழுது எந்த அளவுக்குக் கிறிஸ்தவ உலகம் கர்த்தருடைய வார்த்தையை விட்டு விலகிப் போய்க் கொண்டிருக்கிறது என்பதை அறிய முடிகிறது.
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக யோசபாத் கூறிய கோட்பாடுகளைத் தலைவர்கள் நிறைவேற்ற அழைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
தேவனுடைய ராஜ்ஜியம் பிரசங்கத்தில் அல்ல செயல்பாட்டில் இருக்கிறது.