கடவுளுடைய வார்த்தையின் அங்கீகாரமா? அல்லது உலகத்தின் அங்கீகாரமா
உங்கள் சிந்தனைக்கு:
கடவுளுடைய வார்த்தையின் அங்கீகாரமா? அல்லது உலகத்தின் அங்கீகாரமா?
Approval of the Word of God or approval of the world?
நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும், ஊழியத்தின் பாதையிலும், தேவனுடைய அங்கீகாரம் வேண்டுமென்றால் வசனத்தை நாம் தியானிக்க வேண்டும். நான் வசனத்தைத் தியானிக்கும்போதே நாம் செய்கிற செயல்கள் தேவனுக்கு சித்தமானதா இல்லையா என்பதை வசனத்தின் அங்கீகாரம் மூலம் அறிய முடியும்.
ஒரு விசுவாசி வசனத்தையே தியானிக்காமல் தேவனுடைய சித்தத்தை ஒருபோதும் அறிந்து கொள்ள முடியாது. வேத வசனத்தைப் புரிந்து கொள்ளாமல் ஒருவன் தேவனுடைய சித்தத்தையும் நிறைவேற்ற முடியாது.
நம்முடைய செயல்களை நம்மைச் சுற்றியுள்ளவர்கள், இந்த உலகம், ஏன் சபைகள் கூட அங்கீகரிக்கலாம். ஆனால் அவைகள் தேவனால், தேவனுடைய வார்த்தையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதா என்பதை பார்க்க வேண்டும்.
உலகம் நம்மை அங்கீகரிப்பதாலேயே நாம் தேவனால், தேவனுடைய வார்த்தையால் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறோம் என்று உறுதியாகச் சொல்ல முடியாது.
நான் எவ்வளவு ஆவியில் நிரம்பி ஜெபித்தாலும், நான் வேதத்தைத் தியானிக்காவிட்டால், தேவசித்தத்தை ஒருபோதும் அறிய முடியாது.
நம்முடைய அடிப்படை ஆவிக்குரிய வாழ்க்கைக்கு நம் கையில் உள்ள வேத புத்தகமே சட்டப் புத்தகம். அதைக்கொண்டுதான் தேவன் நம்மை நியாயம் தீர்ப்பார். வேத தியானமே வேதத்தின் அங்கீகாரத்தை நமக்கு உருவாக்கிக் கொடுக்கும். வேத தியானமில்லாத நம்முடைய முயற்சிகள் மனிதரின் அங்கீகாரத்தையும், உலகத்தின் அங்கீகாரத்தையும் உருவாக்கிக் கொடுக்கலாம்; ஆனால் தேவனுடைய அங்கீகாரமாக இருக்காது.
நம்முடைய ஊழியங்கள், கீழ்படிதல்கள், கர்த்தரோடு உள்ள உறவுகள் எப்படிப்பட்டது என்பதை நித்தியத்தில் தீர்மானிப்பது—இன்று நமக்குக் கொடுக்கப்பட்ட வேதத்தின் அடிப்படையில்தான் என்பதை மறந்து விடக் கூடாது.
எனவே, வேதத்தை மறந்து நாம் ஒருபோதும் தேவசித்தத்தை அறிந்து கொள்ள முடியாது. வேத தியானம் நமது மனமகிழ்ச்சியாகவும், ஆன்மீக நாளாந்த உணவாகவும், வாழ்க்கையின் வழிகாட்டும் தீபமாகவும் இருக்க வேண்டும். வேத வசனம் சாத்தானை எதிர்க்கும் ஆயுதமாக நம் கைகளில் காணப்பட வேண்டும்.
நம்முடைய சகல ஆவிக்குரிய வாழ்க்கையின் அடிப்படை வேதவசனமே. இதைப் புரிந்து கொண்டவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
கடவுளின் வார்த்தைகள்மூலம் நாம் பெறும் அங்கீகாரமே நித்திய பலனைக் கொடுக்கும். மனிதர்கள், சபைத்தலைவர்கள், உலகம் கொடுக்கும் அங்கீகாரங்கள் தற்காலிகமானவை. அவைகள் வேதவாக்கியங்களுக்கு ஏற்பில்லாவிட்டால், பரலோகத்தில் வெறும் கையோடு நிற்க வேண்டிய நிலை வரும்.