பொறாமையினால் விழுந்து போன மிரியாமும் ஆரோனும்.
உங்கள் சிந்தனைக்கு: பொறாமையினால் விழுந்து போன மிரியாமும் ஆரோனும்.
இஸ்ரவேல் ஜனங்களை எகிப்திலிருந்து மீட்டுக் கொண்டு வர தேவன் பயன்படுத்திய நபர்கள் மூன்று பேர்.
ஆரோன், மிரியாம் மற்றும் மோசே.
இவர்கள் யூத ஜனங்களை எகிப்திலிருந்து விடுதலையாக்குவதற்கு தேவனால் பயன்படுத்தப்பட்டவர்கள்.
இந்த மிரியாம்,மோசே பார்வோனுடைய அரண்மனைக்கு அழைத்துச் செல்லப்படுவதற்கு காரணமாக இருந்தவள்.
இவள் தீர்க்கதரிசியாக காணப்பட்டாள்.
பார்வோனோடு பேசுகின்ற எல்லா சூழ்நிலைகளிலும் மோசேயின் வாயாக திகழ்ந்தவன் ஆரோன்.
இப்படி தேவனால் பயன்படுத்தப்பட்ட குடும்பத்தில் பொறாமை என்கிற காரியம் புகுந்து தேவனை மிகுந்த கோபத்திற்கு உள்ளாக்கியது.
இதைப் பற்றிய சம்பவம் எண்ணாகமம் புத்தகம் 12 வது அதிகாரத்தில் காணப்படுகிறது.
இவர்கள் மோசே மீது சுமத்திய குற்றச்சாட்டை மேலோட்டமாக பார்த்தால் சரியாக இருந்தாலும் அது தவறுதான் என்று வசனத்தின் படி தெரிந்து கொள்ளலாம்.
ஆனால் பிரச்சனை அதுவல்ல
ஆரோனும் மிரியாமும் பொறாமையின் அடிப்படையிலேயே மோசேக்கு விரோதமாக எழும்பினார்கள் என்பதுதான் நாம் தெரிந்து கொள்ளக்கூடிய காரியம்.
அவர்கள் சொன்ன வார்த்தையை பாருங்கள்
"கர்த்தர் மோசேயைக் கொண்டுமாத்திரம் பேசினாரோ, எங்களைக்கொண்டும் அவர் பேசினதில்லையோ என்றார்கள். கர்த்தர் அதைக் கேட்டார்."
எண்ணாகமம் 12:2
மோசேயோடு தங்களை ஒப்பிட்டு பேசியதுதான் மிகப்பெரிய குற்றம். கலகத்திற்கு முக்கிய காரணம்.
ஆரோன் என்னதான் பிரதான ஆசாரியனாக இருந்தாலும் மிரியாம் தீர்க்கதரிசியாக இருந்தாலும் அவர்கள் மோசேயினுடைய ஆவிக்குரிய வளர்ச்சிக்கும், உயரத்திற்கும் நிகரானவர்கள் அல்ல.
மோசேயின் அர்ப்பணிப்பு, தியாகம், தன் ஜனங்களை குறித்த வைராக்கியம், போன்றவைகள் மிகவும் அரிதான ஆவிக்குரிய குணங்கள்.
மோசே தன் ஜனங்களுக்காக எகிப்தின் செல்வத்தை உதறித் தள்ளியவன்.
தன் ஜனங்களுக்காக தேவனுடைய சந்நிதானத்தில் 40 நாட்கள் இரண்டு தடவை குடிக்காமல் புசியாமல் காத்திருந்தவன்.
இஸ்ரவேல் ஜனங்களை ஒதுக்கிவிட்டு தன்னை பெரிய ஜாதியாக்க தேவன் முன்வந்த அழைப்பை மூன்று முறை நிராகரித்தவன்.
தன் ஜனங்களுக்கு பதிலாக தேவனுடைய புத்தகத்தில் இருந்து தன் பெயரை கிறுக்கி போட ஒப்பு கொடுத்தவன்.
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
எனவே இப்படிப்பட்ட மோசேயோடு தங்களை ஒப்பிட நினைத்தது, தங்களுடைய தம்பி என்றும் பாராமல் அவனுக்கு எதிராக கலகம் செய்த நினைத்தது தேவனுக்கு மிகப்பெரிய கோபத்தை உண்டாக்கியது.
இதன் மூலம் தேவன் நமக்கு உணர்த்தும் காரியங்கள்.
1. பிறருடைய ஆவிக்குரிய வளர்ச்சியை, அவர்களுக்கும் தேவனுக்கும் உள்ள உறவின் நெருக்கத்தை, அவர்கள் ஆண்டவருக்காக செய்த தியாகத்தை, உழைப்பை, தெரிந்து கொள்ளாமல், ஒரே நிலையில் அழைக்கப்பட்டு இருக்கிறோம் என்ற ஒரே காரணத்திற்காக அப்படிப்பட்டவர்களை தனிப்பட்ட முறையில் குற்றம் சாட்டுவது வேதத்தின்படி சரியல்ல.
அது தேவனுக்கு மிகப்பெரிய கோபத்தை ஏற்படுத்தும்.
2. தங்கள் குடும்பத்தில் உள்ள நபர்கள் தேவனால் பயன்படுத்தப்படும் பொழுது அவர்களால் நாம் ஆவிக்குரிய நன்மைகளை பெற்றிருக்கும் பொழுது அந்த நன்றியை மறந்து அவர்களுக்கு விரோதமாக பேசுவது, தனிப்பட்ட தாக்குதல் நடத்துவது என்பது நன்றி இல்லாத சிந்தனையை நம்மில் வெளிப்படுத்துவதாக இருக்கிறது.
எப்பொழுதுமே நம்முடைய ஆவிக்குரிய அளவு,உயர்வு எவ்வளவு என்பதை உணர்ந்து அதற்கு தகுந்தபடி நம் வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் அது மகிழ்ச்சிகரமாக இருக்கும்.