நெகேமியா – வேதபாடம் 18 Expository Commentary on the Book of Nehemiah
உங்கள் சிந்தனைக்கு .
நெகேமியா – வேதபாடம் 18
Expository Commentary on the Book of Nehemiah
நெகேமியா புத்தகம் என்பது இரண்டு வகைகளில் Magna Carta என்று கருதப்படுகிறது.
Magna carta என்பது 1215 ல் இங்கிலாந்தை ஆண்ட அரசனுக்கும், அரசனின் கொடுங்கோல் ஆட்சியை எதிர்த்து போராடிய மக்களுக்கும் ஏற்பட்ட ஒப்பந்தம். இந்த ஒப்பந்தமே பின் நாட்களில் இங்கிலாந்து எல்லாவித ஜனநாயக உரிமைகளையும் பெறுவதற்கு அடிப்படையாக மாறியது.
இந்த ஒப்பந்தம் தான்.
Magna Carta அழைக்கப்படுகிறது.
அதைப்போல நெகேமியா எழுதிய புத்தகம்
சபைகளுக்கும், விசுவாசிகளுக்கும் ஒரு தவிர்க்க முடியாத ஒரு ஆவணம்.
சபையினுடைய மறுமலர்ச்சிக்கும், சீர்திருத்தங்களுக்கும் இந்த புத்தகம் ஒரு அடிப்படை ஆவணம்.
அதுபோல முழு நேர பணியாளர்கள் அல்லாத, layman என்று சொல்லப்படுகிறவர்களும் கர்த்தரால் பயன்படுத்தப்பட முடியும், தேவனுக்காக பெரிய காரியங்களை செய்ய முடியும், தேவனுடைய திட்டத்தில் அவர்களுக்கும் மிகப்பெரிய பங்கு உண்டு என்பதை வலியுறுத்துகிற ஒரு ஆவணமாக இந்த நெகேமியா புத்தகம் காணப்படுகின்றது.
பழைய ஏற்பாட்டு புத்தகமாக இருந்தாலும் இந்தப் புத்தகம் எடுத்துரைக்கின்ற ஆவிக்குரிய சத்தியங்கள் சபையினுடைய வளர்ச்சிக்கும், மறுமலர்ச்சிக்கும் மிகச்சிறந்த ஆவணமாக கருதப்படுகிறது.
இதை சபைத் தலைவர்கள் படிக்கும் பொழுது ஒரு மறுமலர்ச்சியை சபையில் எப்படி கொண்டுவர முடியும் என்பதற்கான அடிப்படை கூறுகள் இந்த நூலில் காணப்படுகின்றது.
நெகேமியா 140 ஆண்டுகளுக்கு மேலாக கட்டப்படாத எருசலேம் நகரின் மதில்களை கட்டி முடித்தான் என்பது மட்டுமல்ல, யூதர்கள் மத்தியில் எப்படி மிகப்பெரிய ஆவிக்குரிய மறுமலர்ச்சியை, சீர்திருத்தங்களை ஏற்படுத்தினான் என்பதையும் இந்த புத்தகம் குறிப்பிடுகிறது .
நெகேமியா ஒரு தீர்க்கதரிசியோ, ஒரு அரசனோ ஒரு ஆசாரியனோ கிடையாது. பழைய ஏற்பாட்டில் இவர்கள்தான் ஆண்டவருக்கான மிகப்பெரிய பணியை செய்ததாக பல இடங்களில் பார்க்கிறோம்.
பழைய ஏற்பாட்டில் இவர்களைத் தவிர சாதாரண மனிதர்கள் தேவனைத் திட்டத்தில் பங்கு பெற்றதாக ஒரு சில நபர்களை நாம் பார்க்க முடியும்.
குறிப்பாக தானியேலுக்கு பிறகு இப்படிப்பட்ட பெரிய காரியங்களை செய்த சாதாரண மனிதன் யார் என்றால் நெகேமியாதான்.
இவனுக்கு எந்த வித முன் அனுபவம் கிடையாது.
தலைமைப் பொறுப்பை வகித்த அனுபவம் கிடையாது.
அரசர்களைப் போல போர் யுக்திகளும் தெரியாது.
எதிரிகளின் தந்திரமும் தெரியாது. மற்றவர்களை பணிகளில் ஈடுபடுத்தி அவர்களை வேலை வாங்கின அனுபவம் கிடையாது.
இவன் வெறுமனே அரசனின் பக்கத்திலிருந்து அவர்களுக்கு நம்பிக்கைக்குரிய நபராக மட்டுமே காணப்பட்டான்.
இப்படிப்பட்ட சாதாரண நபரை கடவுள் தெரிந்துகொண்டு மிகப் பெரிய நோக்கத்தை அவனிடத்தில் நிறைவேற்றினார்.
அவனுக்குத் தேவையான வரங்களையும் கிருபைகளையும் வழங்கி அவனிடத்தில் தேவ மகிமை வெளிப்படும்படியாக செய்தார்.
இன்றைக்கும் சபைகளில் புறக்கணிக்கப்பட்டு காணப்படுகின்ற விசுவாசிகள் தங்களுக்கும் ஒரு மிகப்பெரிய ஊழியம், தேவனுடைய திட்டம் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
அவர்களையும் தேவன் பயன்படுத்த முடியும், அவர்களும் போதகர்கள், தலைவர்களைப் போல உயர்ந்த நிலையை அடைய முடியும் என்பதற்கு நெகேமியா ஒரு சிறந்த உதாரணம்.
எனவே இந்த புத்தகம் விசுவாசிகளும் தேவனைத் திட்டத்தில் மிகப்பெரிய பங்கு வகிக்கிறார்கள் என்பதற்கான ஒரு ஆவணமாகவும், ஒரு Magna carta வாகவும் இருக்கிறது என்று கருதுவதில் எந்த தவறும் இல்லை.
அடுத்தது மதில்களை கட்டுவதோடு தன்னுடைய ஊழியத்தை நெகேமியா நிறுத்தி விடவில்லை.
யூத மக்கள் மத்தியில் மிகப்பெரிய ஆவிக்குரிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தினான்.
. 70 ஆண்டுகளுக்கு மேலாக அடிமைத்தனத்தில் வாழ்ந்து,தங்கள் தேவனை மறந்து, வேதத்தை மறந்து, உலக மக்களோடு கலந்த ஒரு இனத்தை தேவனுடைய வார்த்தைகளுக்கு நேராக திரும்ப வைத்து வேதத்தை போதித்து அவர்களை உணர்வடைய வைத்து தேவனோடு ஒப்புரவாக செய்தான். ஜனங்கள் அனைத்தையும் கூட்டி அவர்களுடைய பாவங்களை
உணரச் செய்தான்.
அவன் செய்த சீர்திருத்தங்கள் சிலவற்றை இப்பொழுது பார்க்கலாம்.
திரும்பி வந்த யூதர்களிடையே இருந்த வட்டி வாங்கும் பழக்கத்தை நெகேமியா நிறுத்தினான்.
ஆளுநராக இருந்தபோதும் தமக்குக் கிடைக்க வேண்டிய உணவுப் பங்கினை அவர் எடுத்துக்கொள்ளவில்ல.
மக்கள் மீண்டும் மோசேயின் நியாயப்பிரமாணத்துக்கு கீழ்ப்படிவதற்கு அவர் வழிநடத்தினான்.
தேவாலயத்திற்கான பொருளாதார தேவையை புதுப்பித்தான்.
திரும்பி வந்த மக்களை பல நகரங்களில் குடியேற்றினான்.
எருசலேம் மதிலைக் கட்டி முடித்தபின் அதை அர்ப்பணித்தான்.
அந்நியர்களை யூதர்களிடமிருந்து பிரித்தான்.
தோபியாவை தேவாலயத்திலிருந்து வெளியேற்றினான்.
தேவாலயத்திற்கான பொருளாதார ஆதரவை மீண்டும் நிலைநாட்டினான்.
ஓய்வு நாளை சரியாகக் கடைப்பிடிக்கச் செய்தான்.
வேறு ஜாதியினருடன் செய்த கலப்பு திருமணங்களை நிறுத்தச் செய்து மக்களைச் சீர்செய்தான்.
.
ஆசாரியர்களையும் லேவியர்களையும் பல வழிகளில் சுத்தமாக்கினான்.
இப்படியாக ஜனங்களை பாவ அறிக்கை செய்து ஜனங்கள் மத்தியில் ஒரு ஆவிக்குரிய மறுமலர்ச்சி ஏற்படுத்தினான்.
இன்றைய பல சபைகளில் பல ஆவிக்குரிய சீர்கேடுகளுக்கு நெகேமியாவின் இந்த வழிமுறைகளை பின்பற்றினால் சபை பரிசுத்தப்படும்.
ஆவிக்குரிய அழுக்குகள் களையப்படும்..
மிகப்பெரிய மன மாற்றம் ஏற்படும்.
உண்மையாகவே சபைகளில் ஆவிக்குரிய மறுமலர்ச்சி ஏற்படும்.
எனவே நெகேமியா புத்தகத்தை சபையின் மறுமலர்ச்சிக்கான அடிப்படை ஆவணம் அல்லது Magna carta என்று அழைப்பதிலும் எந்த தவறும் இல்லை.
எனவே ஒவ்வொரு விசுவாசியும் சபை தலைவர்களும் கண்டிப்பாக படிக்க வேண்டிய ஒரு வேத புத்தகம் நெகேமியாவின் புத்தகம்.
விசுவாசிகளே இது உங்களுக்கான ஆவணம். உங்களுக்கான புத்தகம். இந்த புத்தகத்தை உங்களுக்காகவே தேவன் எழுதி வைத்திருக்கிறார். தேவனுக்காக பெரிய காரியங்களை செய்ய விரும்புகிற எந்த விசுவாசியும் இதை படிக்க தவறக் கூடாது.
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்.
கடவுளுடைய பணியில் எசேக்கியல் சண்முகவேல்.
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கும் என்றால் உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.
.