யோபு புத்தகம்– *Expository Commentary on the* Book of Job வேத பாடம் –
*உங்கள் சிந்தனைக்கு.*
*யோபு புத்தகம்* –
*Expository Commentary on the* Book of Job
வேதபாடம் – 4
பரிசுத்த வேதாகமத்தில் *தேவனுடைய கட்டளையை முதலில் மீறியவர் ஏவாள். சாத்தானின்* வஞ்சகத்தினால் அவள் தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படியாமல் நடந்தாள். பின்னர் ஆதாமும் தேவனுடைய கட்டளையை மீறியதால் மனிதகுலம் பாவத்தில் விழுந்தது. வேதாகமம் பாவம் உலகத்திற்குள் ஒரே மனுஷனாகிய ஆதாமின் மூலம் பிரவேசித்தது என்றும் போதிக்கிறது (ரோமர் 5:12).
குடும்பத்திற்கு தலைவனாக கணவன் நியமிக்கப்பட்டிருக்கிறான். *அதேவேளையில், மனைவியின் ஆலோசனையைக் கேட்டு ஆசீர்வாதங்களைப்* *பெற்றவர்களையும் வேதாகமத்தில் காண்கிறோம்.*
சில சந்தர்ப்பங்களில் தேவனே மனைவியின் சொல்லைக் கேட்கும்படி கணவனுக்குக் கட்டளையிட்டிருக்கிறார்.
இஸ்மவேல் மற்றும் ஆகாரைப் பற்றிய விஷயத்தில் சாராள் கூறியதை ஆபிரகாம் முதலில் விரும்பவில்லை. ஆனால் தேவன் ஆபிரகாமிடம், “சாராள் உனக்குச் சொல்லுகிறதை எல்லாம் கேள்” (ஆதியாகமம் 21:12) என்று கூறினார்.
அதுபோல மனோவாவின் மனைவி தேவனுடைய செயல்களைப் பற்றிய தெளிவான புரிதலை வெளிப்படுத்தியபோது, மனோவா அவளுடைய வார்த்தையை ஏற்றுக்கொண்டான் (நியாயாதிபதிகள் 13:23).
*எஸ்தரின் வேண்டுகோளைக் கேட்ட அகாஸ்வேரு ராஜாவும், பின்னர் யூதர்களுக்கு எதிராக* *நிகழ்ந்திருக்கக்கூடிய பெரும் அழிவிலிருந்து தன்னைத் தானே காத்துக்கொண்டான்* .
*அதேவேளையில், தவறான ஆலோசனைகளுக்குச் செவிகொடுத்ததால்* *இழப்புகளைச் சந்தித்தவர்களும்* *இருக்கிறார்கள்* . அனனியாவும் சப்பீராளும் இணைந்து பரிசுத்த ஆவிக்கு விரோதமாக பொய் கூறினர்.
அதன் விளைவு மிகவும் கொடியதாக அமைந்தது.
யோபு புத்தகத்தில், தன்னுடைய பிள்ளைகள், செல்வம் மற்றும் உடல்நலனை இழந்து கடுமையான வேதனையில் இருந்தபோது, அவனுடைய மனைவி அவனிடம், “நீர் இன்னும் உமது உத்தமத்திலே உறுதியாக நிற்கிறீரோ? தேவனைத் தூஷித்து உயிரை விடும்” (யோபு 2:9) என்று கூறினாள்.
அவளுடைய *வார்த்தைகளுக்குப் பின்னால் என்ன எண்ணம் இருந்தது என்பதை வேதாகமம் வெளிப்படையாகக்* *கூறவில்லை* .
ஆனால் தன் கணவனின் துயரத்தைக் கண்டு மனமுடைந்து, அவனுடைய வேதனை முடிவுக்கு வர வேண்டும் என்ற எண்ணத்தில் அவள் இவ்வாறு
பேசியிருக்கலாம். அதே நேரத்தில், அவள் அந்நேரத்தில் தேவனுடைய செயல்களை சரியாகப் புரிந்துகொள்ள முடியாமல் போயிருந்தாள் என்பதும் தெளிவாகிறது.
*ஆனால் யோபு அந்த ஆலோசனையை ஏற்றுக்கொள்ளவில்லை* . அவன், “நீ அறிவில்லாத பெண்களில் ஒருத்தியைப்போலப் பேசுகிறாய்; தேவனிடத்தில் நன்மையைப் பெற்ற நாம், தீமையையும் ஏற்றுக்கொள்ள வேண்டாமோ?” (யோபு 2:10) என்று பதிலளித்தான்.
*யோபுவுக்கு தேவனைப் பற்றிய புரிதல் வேறாக இருந்தது. சூழ்நிலைகள்* *மாறினாலும் தேவன் மாறுவதில்லை என்பதை அவன் அறிந்திருந்தான்* . *அதனால்* தனது *துன்பத்தின் நடுவிலும் தேவன்மேல் வைத்திருந்த விசுவாசத்தையும்* *உத்தமத்தையும் காத்துக்கொண்டான்* .
சொத்துக்களையும் பிள்ளைகளையும் இழந்த துயரமே பெரிய சோதனையாக இருந்தது.
அதனுடன், மிகவும் நெருக்கமானவராகிய மனைவியிடமிருந்து வந்த இந்த ஆலோசனையும் அவனுக்கு கூடுதல் சோதனையாக இருந்திருக்கலாம். இருப்பினும், அவன் உணர்ச்சிகளின் அடிப்படையில் அல்ல, தேவனைப் பற்றிய தனது *விசுவாசத்தின் அடிப்படையில் தீர்மானம் எடுத்தான்.*
அதன் விளைவாக, அவன் சோதனையில் வெற்றி பெற்றான்* . பின்னர் தேவன் அவனை ஆசீர்வதித்து, இழந்தவற்றிற்கு இரட்டிப்பான ஈடுகளை அளித்தார். *யோபு மீண்டும் தனது குடும்ப வாழ்க்கையைத் தொடர்ந்தான்;* அவனுக்கு மறுபடியும் பிள்ளைகள் பிறந்தார்கள்.
யோபுவின் வாழ்க்கையில் இந்த நிகழ்வு ஒரு முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது என்று கூறலாம். *ஆவிக்குரிய வாழ்க்கையில் சரியான தீர்மானங்களை எடுப்பதற்கு தேவனைப் பற்றிய* *தெளிவான புரிதல், உறுதியான விசுவாசம் மற்றும்* *மனோதிடமான நிலைப்பாடு அவசியம்* என்பதை இது நமக்குக் கற்றுக்கொடுக்கிறது.
குடும்ப வாழ்க்கையில் கணவனும் மனைவியும் ஒருவரிடமிருந்து ஒருவர் ஆலோசனை பெறலாம்; அதில் தவறு இல்லை. ஆனால் இருவரும் தேவனுடைய சித்தத்தைத் தேடி, அவருடைய வார்த்தையின் வெளிச்சத்தில் முடிவுகளை எடுக்க வேண்டும். குறிப்பாக ஆவிக்குரிய காரியங்களில் கணவனும் மனைவியும் ஒரே நோக்கத்தோடும், ஒரே விசுவாசத்தோடும் பயணித்தால் பல ஆவிக்குரிய விபத்துகளைத் தவிர்க்க முடியும்.
யோபுவின் வாழ்க்கை நமக்குச் சொல்லும் பாடம் என்னவென்றால், சூழ்நிலைகள் எப்படியிருந்தாலும், மனிதர்களின் ஆலோசனை எப்படியிருந்தாலும், இறுதியில் தேவனுடைய சித்தத்திற்கும் அவருடைய வார்த்தைக்கும் கீழ்ப்படிவதே பாதுகாப்பான பாதையாகும்.
– எசேக்கியேல் சண்முகவேல்