நெகேமியாவின் புத்தகம் — வேதபாடம் 21 Expository Commentary on the Book of Nehemiah
நெகேமியாவின் புத்தகம் — வேதபாடம் 21
*Expository Commentary on the Book of Nehemiah* .
*சிதறிய முத்துக்கள் — 5*
*அவிசுவாசிகளோடு திருமணம் செய்து கொள்வது தேவனுக்கு நாம்* *செய்யும் கொடுமை.*
நெகேமியா 13:27-ல் நெகேமியா மிகவும் கடுமையாக எதிர்த்தது, யூதர்கள் புறஜாதிப் பெண்களைத் திருமணம் செய்து கொண்ட நிகழ்வைக் குறித்துச் சொல்லப்பட்டிருக்கிறது.
இந்தத் திருமணங்கள் இரண்டு காலங்களில் நடந்திருக்க வாய்ப்பு உள்ளது.
முதல் வாய்ப்பு — பாபிலோன் சிறைவாச காலம்
வேதாகமத்தின் சூழ்நிலையைப் பார்த்தால், பெரும்பாலும் பாபிலோன் சிறைவாச காலத்திலும் நடந்திருக்கலாம். அதன் பின்னரும் ஆரம்பித்து, எருசலேமுக்குத் திரும்பி வந்த பிறகும் தொடர்ந்தது என்று அறிந்துகொள்ளலாம்.
முக்கிய பின்னணி
யூதர்கள் சுமார் 70 ஆண்டுகள் பாபிலோனில் வாழ்ந்தார்கள். அந்தக் காலத்தில்:
அவர்கள் பல புறஜாதி மக்களுடன் கலந்து வாழ்ந்தார்கள்.
சிலர் அந்நாட்டுக் கலாச்சாரம் மற்றும் குடும்ப உறவுகளால் பாதிக்கப்பட்டார்கள்.
இதனால் புறஜாதி மக்களோடு திருமண உறவுகள் ஏற்பட்டன.
பின்னர் எருசலேமுக்குத் திரும்பி வந்தபோதும்:
அந்தப் பழக்கம் முற்றிலும் நிற்கவில்லை.
குறிப்பாக யூதத் தலைவர்களும் ஆசாரியர்களும்கூட அந்நியப் பெண்களை மணந்தார்கள்.
இதனால் தேவனுடைய ஜனங்கள் ஆன்மீக ரீதியாகக் கலங்க ஆரம்பித்தார்கள்.
இதை உறுதிப்படுத்தும் வேதாகம பகுதிகள்
எஸ்றா 9–10 அதிகாரங்களில், எருசலேமுக்குத் திரும்பி வந்த பிறகும் யூதர்கள் கானானியர், அம்மோனியர், மோவாபியர் போன்றவர்களோடு திருமணம் செய்திருந்தார்கள் என்று கூறப்படுகிறது.
எஸ்றா 9:1-2 இதைத் தெளிவாகக் காட்டுகிறது.
நெகேமியா காலம்
நெகேமியா 13:23-27-ல் அஷ்தோத், அம்மோன், மோவாப் பெண்களை மணந்த யூதர்களைப் பற்றிக் கூறப்படுகிறது. அவர்களின் பிள்ளைகள் யூத மொழியே பேச முடியாத நிலைக்குச் சென்றிருந்தார்கள் (13:24). இது இந்தக் கலப்புத் திருமணங்கள் நீண்டகாலமாக நடந்துகொண்டிருந்தன என்பதைக் காட்டுகிறது.
முக்கியமான கருத்து
நெகேமியா எதிர்த்தது இனவெறி காரணமாக அல்ல; ஆன்மீகப் பரிசுத்தம் கெடாதிருக்க வேண்டும் என்பதற்காக. ஏனெனில் புறஜாதிப் பெண்கள் தங்கள் விக்கிரக ஆராதனையைக் கொண்டு வந்தார்கள். இது சாலொமோனுக்கும் வீழ்ச்சியை ஏற்படுத்தியது என்று நெகேமியா 13:26 கூறுகிறது.
"எங்கள் *இறைவனுக்கு உண்மையற்றவர்களாகி* இந்தப் பயங்கரமான கொடுமையைச் செய்வதைப்போல் இப்பொழுது நாங்களும் செய்யவேண்டுமோ?"
— நெகேமியா 13:27 (மாற்று மொழிபெயர்ப்பு)
*தேவனை அறிந்த ஜனங்கள் திருமண உறவில் அவிசுவாசிகளோடு கலப்பது என்பது தேவனுக்குச் செய்யும் கொடுமையான துரோகமான செயல். இதை விசுவாசிகள் புரிந்துகொள்ள வேண்டும்.*
இரட்சிக்கப்படும்பொழுது நாம் இருளின் ஆதிக்கத்திலிருந்து விடுதலை அடைந்து வெளிச்சத்தின் அரசாங்கத்தின் பிள்ளைகளாக மாறுகிறோம் (கொலோசெயர் 1:13). இரட்சிப்பின் ரகசியத்தை புரிந்தவர்கள் இந்தப் பாவத்தை ஒருபோதும் செய்ய மாட்டார்கள்.
திருமண உறவும் சமூக பழக்கமும் — வேறுபாடு
திருமண உறவு என்பது வேறு; புறயின மக்களோடு பழகுவது என்பது வேறு. இந்த வித்தியாசத்தை விசுவாசிகள் புரிந்துகொள்ள வேண்டும். திருமண உறவில் அவிசுவாசிகளோடு நாம் கலக்கும்போது அது ஆன்மீகப் பரிசுத்தக் குறைவாக மாறிவிடுகிறது.
சாதி பார்த்து, இனம் பார்த்து, மாவட்டம் பார்த்து — இந்த அடிப்படையில் விசுவாசிகள் அவிசுவாசிகளோடு திருமண உறவு செய்துகொள்வது வேதத்தின்படி ஏற்றுக்கொள்ளக்கூடிய சத்தியமல்ல. இதற்குப் பழைய ஏற்பாட்டில் சிறந்த எச்சரிக்கை உதாரணம் சாலொமோனின் வாழ்க்கை.
குறிப்பு: ரூத்தின் உதாரணம் இதை மேலும் தெளிவுபடுத்துகிறது — ரூத் புறஜாதி பெண்ணாக இருந்தாலும், விசுவாசத்தால் ஏற்கப்பட்டாள். ஆக, தடை இனத்தின் அடிப்படையில் அல்ல; விசுவாசத்தின் அடிப்படையில்தான்.
அப்போஸ்தலர் பவுலின் எச்சரிக்கை
புதிய ஏற்பாட்டிலும் இந்தக் கருத்தை அப்போஸ்தலனாகிய பவுல் கடுமையாக எச்சரித்திருக்கிறார் (2 கொரிந்தியர் 6:14-18).
"அப்பொழுது, நான் உங்களை ஏற்றுக்கொண்டு, உங்களுக்குப் பிதாவாயிருப்பேன், நீங்கள் எனக்குக் குமாரரும் குமாரத்திகளுமாயிருப்பீர்களென்று சர்வவல்லமையுள்ள கர்த்தர் சொல்லுகிறார்."
— 2 கொரிந்தியர் 6:18.
ஆண்டவர் அறியாத மக்களோடு திருமண உறவு செய்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கை.
பணம், அழகு, அந்தஸ்து, படிப்பு, சமுதாயம் — இவைகளுக்காக தேவன் உலகங்கள் உருவாவதற்கு முன்பாகவே நமக்கென்று முன்குறித்த அந்தப் பரிசுத்த வாழ்க்கையை சமரசம் செய்துகொள்வது, தேவனுக்கு நாம் செய்யும் மிகப்பெரிய துரோகம்.
நாம் பிரித்தெடுக்கப்பட்ட வாழ்க்கையை நம்முடைய வாழ்க்கையில் செயல்படுத்தும்
போதுதான் நாம் அவருடைய பிள்ளைகளாக இருப்போம்; அவர் நமது தகப்பனாகம இருப்பார்.
இந்த சத்தியம் மாறாதது