1 *நாளாகமம் அல்லது* *குறிப்பேடுகள்* *புத்தகம்* *வேதபாடம் 10.*
*உங்கள் சிந்தனைக்கு.*
1 *நாளாகமம் அல்லது* *குறிப்பேடுகள்* *புத்தகம்*
*வேதபாடம் 10.*
தியானிக்க வேண்டிய வேத பகுதி 15:25,26,28,29
இந்த நான்கு வசனங்களில் கர்த்தருடைய உடன்படிக்கை பெட்டி என்று நான்கு தடவை வருகிறது.
("The ark of the covenant of the Lord ")
இந்த உடன்படிக்கை பெட்டி ஆலயத்தில் மகா பரிசுத்த இடத்தில் காணப்படும்.
இந்த உடன்படிக்கை பெட்டி தேவனுடைய சமூகத்திற்கு அடையாளமாக இருக்கிறது.
இந்தப் பெட்டியில் மூன்று பொருட்கள் காணப்படும்.
1. ஆரோனின் துளிர்ந்த கோல்
2. பொற்கலசத்தில் காணப்படும் மன்னா (Golden pot of manna)
3. சீனாய் மலையில் தேவன் மோசேக்கு கொடுத்த பிரமாணங்கள் அடங்கிய இரண்டு கற்பலகைகள்.
இந்த மூன்றும் அடங்கிய பெட்டிக்கு பெயர் தேவனுடைய உடன்படிக்கை பெட்டி.
இந்த இடத்தில் நான் வலியுறுத்தி சொல்லக்கூடிய காரியம், தேவனுடைய உடன்படிக்கை பெட்டியை பற்றியது.
இதில் முக்கிய அம்சம் என்னவென்றால் கடவுள் இஸ்ரவேல் ஜனங்களோடு ஏற்படுத்திய உடன்படிக்கைக்கு அடையாளமாக அந்த பத்து கற்பனைகளை கொடுத்தார். அதற்கு, சாட்சி பிரமாணம் என்று பெயர். யாத் 25:16 ஆங்கிலத்தில் அதற்கு "Tablets of Covenant Law"என்று அழைப்பார்கள்.
அதனால்தான் இந்த சாட்சி பிரமாணம் அடங்கிய பெட்டி கடவுளுடைய உடன்படிக்கைப்
பெட்டி என்று அழைக்கப்பட்டது.
கடவுள் தமது வாக்குறுதியின் சின்னமாகவும், தம் ஜனத்தோடு வாழும் சின்னமாகவும் அந்தப் பெட்டியைத் தந்தார்.
ஆனால் இந்த தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டி கடந்து வந்த பாதைகளை பார்க்கும்பொழுது அது உருவாக்கப்பட்ட நாளிலிருந்து மொத்தமாக 600 ஆண்டுகள்தான் ஆசரிப்பு கூடாரத்திலும் தேவனுடைய ஆலயத்திலும் காணப்பட்டது.
இறுதியாக நேபுகாத்நேச்சார் காலத்தில் சாலமோன் கட்டின தேவாலயம் தகர்க்கப்பட்டபோது அந்த உடன்படிக்கைப் பெட்டி காணாமல் போய்விட்டது.
கிமு 586 - ல் மறுபடியுமாக புதுப்பிக்கப்பட்ட தேவாலயத்தில் அந்த உடன்படிக்கை பெட்டி வைக்கப்படவில்லை..
இறுதியாக ஏறக்குறைய 656 ஆண்டு காலமாக எருசலேம் தேவாலயத்தில் உடன்படிக்கைப் பெட்டி காணப்படவில்லை.
கடைசியாக கிபி 70-ல் அந்த ஆலயம் முற்றிலுமாக தகர்க்கப்பட்டது.
இங்கே நான் வலியுறுத்தி சொல்லுகிற காரியம் என்னவென்றால் இஸ்ரவேல் ஜனங்கள் தேவன் தங்களுக்கு கொடுத்த உடன்படிக்கைப் பெட்டியை இழந்திருக்கலாம். ஆனால் அந்த ஜனங்களோடு உடன்படிக்கைப் பண்ணின தேவன் அவர்களோடு கூட இருந்தார் அவர்களை கைவிடவில்லை என்பதுதான்.
அடையாளங்கள் மாறி இருக்கலாம். ஆனால் அடையாளத்தை கொடுத்தவர் மாறவில்லை. அவர்களோடு கூட இருந்தார்.
இன்றைக்கும் இஸ்ரவேல் என்கிற தேசத்தை உலக வரைபடத்திலிருந்து யாரும் அழிக்க முடியவில்லை.
அதுபோல திருமுழுக்கில் நாம் தேவனோடு உடன்படிக்கை செய்து கொள்கிறோம். புதிய உடன்படிக்கையின் பிள்ளைகளாக மாறி விடுகிறோம். (எபி 9:15)
திருமுழுக்கு என்பது ஒரு வெளிப்படையான அடையாளம். ஆனால் அந்த அடையாளத்தோடு நம்மோடு உடன்படிக்கை பண்ணினவர் வானத்தையும் பூமியையும் படைத்த நம்முடைய தேவன்,அவர்
நம்முடைய கடவுள் என்கிற புரிதல் மிகவும் அவசியம்.
நம்முடைய கடவுள் உடன்படிக்கையின் கடவுள். உடன்படிக்கை என்கிற வார்த்தை மிகவும் ஆழமானது. மனிதன் கடவுளோடு பண்ணின காரியம் அல்ல. இயேசு கிறிஸ்து நம்மை விண்ணகத்திற்கு அழைத்துச் செல்வார். அந்த வாக்குறுதி தான் அவரது உடன்படிக்கை.
கடவுள் நம்மோடு உடன்படிக்கை செய்திருக்கிறார். நாமும் இஸ்ரவேல் ஜனங்களை போல உடன்படிக்கையின் ஜனங்கள். இது எவ்வளவு பெரிய சந்தோஷம் மகிழ்ச்சி.
ஒவ்வொரு நாளும் நான் உடன்படிக்கையின் மகன் என்று சொல்லிக் கொண்டே இருப்போமென்றால் அதில் கிடைக்கும் மகிழ்ச்சி அளவில்லாதது. அந்த மகிழ்ச்சியை கொடுத்த நம்முடைய இறைவனுக்கு என்றென்றும் உண்மையாக வாழ கடமைப்பட்டிருக்கிறோம்.
திருமுழுக்கு என்பது வெளிப்படையான அடையாளம். ஆனால் அதில் மறைந்து இருப்பது தேவனுடைய உடன்படிக்கை, வாக்குத்தத்தம்.
கடவுள் நம்மோடு உடன்படிக்கை பண்ணி இருக்கும்பொழுது அந்த உடன்படிக்கையை ரத்து செய்ய உலகத்தில் எந்த சக்தியாலும் முடியாது.
பவுல் சொல்வது போல எந்த நிகழ்வும் நம்மை அவரை விட்டுப் பிரிக்க முடியாது. கடவுள் தானே இந்த உடன்படிக்கையை பற்றி ஒரு புதிய வெளிச்சத்தை நமக்கு தருவாராக.