பாராட்டுகளும் கஞ்சத்தனமும்.
ஒரு விசுவாசிக்கு உண்மையான பாராட்டு உற்சாகத்தைத் தரும்.
மனமகிழ்ச்சியை தரும்.
அவனை ஊக்குவிக்கும்.
அவனை வளர்க்கும்.
பாராட்டுகளே இல்லாத விசுவாசி, உற்சாகப்படுத்த படாத விசுவாசி அநேக நேரங்களில் சோர்வின் எல்லைக்கே சென்று விடுவான்.
ஒரு விசுவாசியின் வாழ்க்கையில் அவனை உற்சாகப்படுத்தி, நிலைநிறுத்துவது வளர்ந்த போதகர்களின் கடமை ஆகும்.
ஆனால் நடைமுறையில் பார்க்கும்போது உயர்ந்த, பெரிய கர்த்தரால் உயர்த்தப்பட்ட, ஆசீர்வதிக்கப்பட்ட பல தலைவர்கள் தங்கள் கீழ் வேலை பார்க்கும் ஊழியர்களை, தங்களை ஆதரிக்கும் விசுவாசிகளை பாராட்ட தயங்குவது ஏனென்று புரியவில்லை.
பாராட்டுக்கு தகுதியான விசுவாசிகளை பாராட்ட வேண்டிய இடத்தில், பாராட்ட வேண்டிய நேரத்தில் பாராட்ட வேண்டும்.
எந்த இடத்தில், எந்த நேரத்தில் அவர்களுக்கு அளிக்கும் பாராட்டு அவர்களுக்கு தேவைப்படுமோ, அவர்களை உயர்த்துமோ அந்த இடத்தில் தலைவர்கள் அவர்களை பாராட்ட வேண்டும்.
முகஸ்துதி என்பது வேறு பாராட்டு என்பது வேறு.
பிறரிடம் காரியம் சாதிப்பதற்காக முகஸ்துதி
செய்பவர்கள் நேர்மையாக உழைப்பவர்களை பாராட்ட மறுப்பது ஏன்.
பவுல் தன்னுடைய தன்னுடைய கடிதங்களில் பாராட்ட வேண்டியவர்களை பாராட்டியிருக்கிறார். துரோகிகளை துரோகிகள் என்று இனம் காட்டியிருக்கிறார்.
பவுல் ரோமாபுரியில் உள்ள சபைக்கு எழுதிய நிருபத்தில் கடைசி அதிகாரத்தை படிக்கும்போது அவர் எத்தனை நபர்களை பாராட்டி இருக்கிறார் என்று எண்ணும்போதும்,அவர் எந்த அளவுக்கு தகுதியானவர்களை பாராட்டினார் என்று எண்ணும்பொழுது நமக்கு மிகுந்த சந்தோசம் ஏற்படுகிறது.
சில தலைவர்கள் கீழுள்ள விசுவாசிகளை சம்பந்தமில்லாத இடத்தில் புகழ்வார்கள்.
அந்த புகழ்ச்சியால் அந்த விசுவாசிக்கு எந்த நன்மையும் கிடைக்காது.
பாராட்ட வேண்டிய நேரத்தில் பாராட்ட மாட்டார்கள். உற்சாகப்படுத்த வேண்டிய நேரத்தில் உற்சாகப்படுத்த மாட்டார்கள்.
அப்படியே உற்சாகப்படுத்தினால் அளந்து அளந்து பாராட்டுவார்கள் .பாராட்டுவதில் கஞ்சத்தனம் காட்டுவார்கள்
ஆனால் முகஸ்துதி செய்யும் போது மட்டும் அளவுக்கு அதிகமாக செய்வார்கள்.
எவ்வளவு முரண்பாடு பாருங்கள்.
இன்று உற்சாகத்திற்காக ஏங்கி நிற்கும் எத்தனையோ விசுவாசிகள் உண்டு .
அவர்களை அடையாளங்கண்டு அவர்களை உயர்த்தி வையுங்கள்.
*தங்கள் குடும்பத்தில் உள்ளவர்களை ஒரே நொடியில் உச்சத்திற்கு கொண்டுபோகும்* *தலைவர்கள் ஆண்டுகளாக தங்கள் காலடியில் தவமிருக்கும் உண்மை விசுவாசிகளை கண்டுகொள்வது* *எப்போது* ?
கேட்டால் கர்த்தர் உயர்த்தும் வரைக்கும் அவரது பலத்த கரத்திற்குள் அடங்கி இருங்கள் என்பார்கள். ஆனால் தங்களுக்கு வேண்டியவர்களை உயர்த்துவதற்கு மட்டும் கர்த்தர் உயர்த்தும் வரை காத்திருக்க மாட்டார்கள்.
ஒரு பர்னபா இல்லையென்றால் பவுல் இல்லை. ஒரு பவுல் இல்லை என்றால் தீத்து இல்லை.
பர்னபா பவுலை தேடி கண்டுபிடித்து அந்தியோகியா சபைக்கு கொண்டு வந்தார் என்பதை மறக்கக்கூடாது.
இயேசு கிறிஸ்து தன்னை யூதாஸ் காட்டிக் கொடுப்பான் முன்னரே அறிந்தும் அவனுக்கு பண பொறுப்பை வழங்கினார். அந்த அளவுக்கு தலைவர்கள் இறங்கி வராவிட்டாலும் ஓரளவுக்காவது தங்கள் கீழுள்ள தாலந்து உள்ள, கிருபை உள்ள விசுவாசிகளை பயன்படுத்துங்கள் உயர்த்துங்கள்.
*தயவுசெய்து தலைவர்களே தகுதியான விசுவாசிகளை பாராட்டுவதில் கஞ்சத்தனம் பண்ணாதீர்கள்.*
எசேக்கியல் சண்முகவேல்.