யாக்கோபின் மகிழ்ச்சியான இறுதி காலங்கள்
உங்கள் சிந்தனைக்கு:
யாக்கோபின் மகிழ்ச்சியான இறுதி காலங்கள்
யாக்கோபைப் போல, தனது இறுதி நாட்களை மகிழ்ச்சியுடனும் சந்தோஷத்துடனும், தன் பிள்ளைகளோடு கழித்தவர்கள் வேதாகமத்தில் மிகச் சிலரே.
அவருடைய இறுதி காலம் மிகவும் ஆனந்தமாயிருந்தது.
தங்கள் இறுதி காலத்தை இவ்வாறு மகிழ்ச்சியாக செலவழிக்கும் விசுவாசிகள் நிச்சயமாக பாக்கியவான்கள்.
பொதுவாக வயதான விசுவாசிகள் இறுதி காலத்தை நினைத்தாலே பல கலக்கங்கள் ஏற்படுகின்றன. “பிள்ளைகள் நம்மை எப்படி கவனிப்பார்கள்?” என்ற எண்ணம் அவர்களை அடிக்கடி கவலைப்படுத்தும். ஆனால் யாக்கோபுக்கு அப்படியில்லை.
அவருக்கு 130 வயதாக இருந்தபோது மிகப் பெரிய சந்தோஷமான செய்தி கிடைத்தது. இருபது ஆண்டுகளுக்கு மேலாக தன் பிரியமான மகன் யோசேப்பு இறந்து விட்டான் என்று நினைத்து துக்கத்தில் வாழ்ந்தவர், “யோசேப்பு உயிரோடிருக்கிறான்; மேலும் பார்வோனுக்கு அடுத்த நிலைமையில் இருக்கிறான்; மீண்டும் குடும்பம் ஒன்றாக இணைகிறது; தனது இறுதி காலத்தை யோசேப்பு கவனிப்பான்” என்ற செய்தியை கேட்டபோது, அவர் மிகுந்த உணர்ச்சி வசப்பட்டார்.
பார்வோனை ஆசீர்வதிக்கும் நேரத்திலும், தன் வாழ்க்கை “சஞ்சலமும் கஷ்டமும் நிறைந்ததாக இருந்தது” என்று அவர் ஒப்புக்கொள்கிறார். ஆனால் அதற்குப் பிறகு நடந்தது மாற்றம்.
அடுத்த 17 ஆண்டுகள் அவர் எகிப்தில் வாழ்ந்தார். அந்த ஆண்டுகள், தன் குடும்பத்தாரோடு (சுமார் 70 பேர்) அமைதியுடனும் மகிழ்ச்சியுடனும் கழிந்தன.
எகிப்திற்கு செல்லும் போது தேவன் நேரடியாக அவரோடு பேசி, “பயப்படாதே” என்று உற்சாகப்படுத்தினார்.
இறுதி காலங்களிலும் தேவனுடைய சந்நிதியும் வாக்குறுதியும் அவரோடு இருந்தது என்பது மிகப் பெரிய சிலாக்கியம்.
தன் இருதயத்திற்கு ஏற்றவன் என்று அழைக்கப்பட்ட தாவீதின் இறுதி நாட்களை ஒப்பிடும்போது கூட, யாக்கோபின் இறுதி நாட்கள் அமைதியும் நிறைவுமிக்கதாக இருந்தது.
அப்படிப்பட்ட மகிழ்ச்சியான இறுதி நாட்களை தேவன் நமக்கும் அருள்வாராக.