கீழ்படிய மறுத்த இஸ்ரேல் ஜனங்களுக்கு கானானை கடவுள் கொடுத்தது ஏன்?
உங்கள் சிந்தனைக்கு:
கீழ்படிய மறுத்த இஸ்ரேல் ஜனங்களுக்கு கானானை கடவுள் கொடுத்தது ஏன்?
தேவன் தம்முடைய பலத்த கரத்தினால் இஸ்ரவேல் ஜனங்களை எகிப்திலிருந்து மீட்டெடுத்தார்.
ஆனால் அந்த ஜனங்கள் தேவனுக்கு விரோதமாக கலகம் செய்தபடியினால் எகிப்தில் இருந்து புறப்பட்ட யுத்த புருஷர் அனைவரும் கானானுக்குள் நுழைய முடியவில்லை.
ஒரு புதிய தலைமுறை கானானுக்குள் செல்கின்ற அந்த வேளையில் தேவன் அந்த ஜனங்களை குறித்து உபாகம புத்தகம் 31 அதிகாரத்தில் கீழ்க்கண்டவாறு சொல்கிறார்.
அதாவது அவர்கள் கானானுக்கு சென்ற பிறகும் கீழ்ப்படிய மாட்டார்கள் என்ற கருத்தில் சொல்கிற காரியங்கள் இவைகள்.
, இந்த ஜனங்கள் எழும்பி, தாங்கள் போயிருக்கும் தேசத்திலுள்ள அந்நிய தேவர்களைச் சோரமார்க்கமாய்ப் பின்பற்றி, என்னைவிட்டு, தங்களுடனே நான் பண்ணின உடன்படிக்கையை மீறுவார்கள்.
உபாகமம் 31:16
,அவர்கள் புசித்துத் திர்ப்தியாகிக் கொழுத்துப்போயிருக்கும்போது, அவர்கள் வேறே தேவர்களிடத்தில் திரும்பி, அவர்களைச் சேவித்து, எனக்குக் கோபம்மூட்டி, என் உடன்படிக்கையை மீறுவார்கள்.
உபாகமம் 31:20
நான் உன் கலகக்குணத்தையும் உன் கடினக் கழுத்தையும் அறிந்திருக்கிறேன், இன்று நான் இன்னும் உங்களுடன் உயிரோடிருக்கையில், கர்த்தருக்கு விரோதமாகக் கலகம்பண்ணினீர்களே, என் மரணத்திற்குப்பின்பு எவ்ளவு அதிகமாய்க் கலகம்பண்ணுவீர்கள்.
உபாகமம் 31:27
உங்கள் கைக்கிரியைகளினாலே கர்த்தரைக் கோபப்படுத்தும்படிக்கு, அவர் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்வீர்கள் என்பதை அறிவேன் என்று சொல்லி,
உபாகமம் 31:29.
அவர்கள் கலகம் பண்ணுவார்கள் உடன்படிக்கையை மீறுவார்கள் என்று தெளிவாக சொல்லி இருக்கிறார்.
இப்படி அந்த ஜனங்கள் தனக்கு விரோதமாக பின்னால் கலகம் செய்வார்கள் என்று அறிந்தும் இந்த புதிய தலைமுறையை ஏன் கானானுக்கு அனுப்பினார் என்றால் அது தேவனுடைய உண்மையின் சிறப்பு.
அவர் ஆபிரகாமோடு ஏற்படுத்திய உடன்படிக்கை ஈசாக்கோடு ஏற்படுத்திய உடன்படிக்கை யாக்கோபோடு ஏற்படுத்திய உடன்படிக்கை இவைகளின் அடிப்படையில் தன்னுடைய வாக்குறுதியை நிலைநாட்ட அவர்களை கானானுக்குள் அனுமதித்தார்.
கடவுள் வாக்குறுதி தவற மாட்டார் .
நாம் உண்மை இல்லாத மக்களாக காணப்பட்டாலும் அவர் நமக்கு கொடுத்த வாக்குறுதியை நிச்சயமாக நிறைவேற்றுவார்.
இதில் கற்றுக்கொள்ளக்கூடிய காரியம் என்னவென்றால் நம்முடைய வாழ்க்கையில் சில வாக்குறுதிகளை தேவன் நிறைவேற்றும் பொழுது நாம் உண்மை உள்ளவர்கள் அல்லது நல்லவர்கள் என்பதனால் அல்ல.
அவர் உண்மை உள்ளவராய் இருக்கிறபடியால் அவருடைய வாக்குத்தங்களை அவர் நம் வாழ்க்கையில் நிறைவேற்றுகிறார்.
ஆம் இந்த உலகத்தில் நம்பத்தகுந்தவர் நம் தேவன் ஒருவர் மட்டுமே