Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

1 *நாளாகமம்* *அல்லது* *குறிப்பேடுகள்* *புத்தகம்* .
உங்கள் சிந்தனைக்கு*
1 *நாளாகமம்* *அல்லது* *குறிப்பேடுகள்* *புத்தகம்* .

*வேதபாடம் 8.*

*தியானிக்க வேண்டிய பகுதி* *14:16*

தாவீது மிகப்பெரிய தைரியசாலி. இளம் வயதிலேயே கோலியாத் என்கிற ராட்சதனை கொன்று புகழின் உச்சிக்கு சென்றவன்.
அப்பொழுது தாவீதுக்கு வயது 15 முதல் 20 வயது இருக்கும் என்று சொல்கிறார்கள்.
மிகச்சிறந்த போர் தளபதி. மிகச்சிறந்த பராக்கிரமசாலிகளை தன் பக்கத்தில் வைத்திருந்தவன்.
ஆனாலும் அவன் அடைந்த வெற்றிகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது அவன் எப்பொழுதுமே தேவ ஆலோசனையை கேட்டு, போருக்கு செல்லலாமா வேண்டாமா என்று ஆலோசனை பெற்று போர்க் களத்துக்கு சென்று வெற்றியை பெற்றவன்.

பெலிஸ்தியரை எதிர்த்து போரிடும் முன் கடவுளிடம் விசாரித்தான். *2சாமுவேல்.5:19, 23 )*

கர்த்தர் வழி காட்டினார்; பெரிய வெற்றி பெற்றான்.
அமலேக்கியரைத் தொடர்ந்து செல்வதற்கு முன் கடவுளிடம் அதைப் பற்றி விசாரித்தான். *(1சாமுவேல் 30:8)*

எல்லாவற்றையும் மீட்டான். அது தவிர, பல நேரங்களில் தேவனுடைய அனுமதியைப் பெற்று போர்க்களத்தில் வெற்றியை பெற்றான்.

ஆனால் இளவேனில் காலத்தில் அரசர்கள் போருக்கு செல்வது வழக்கம். அந்த நேரத்தில் தாவீது யோவாபைத் தன் பணியாளரோடும் இஸ்ரயேலர் அனைவரையும் அம்மோனியரோடு போராட அனுப்பிவிட்டு தாவீது எருசலேமிலேயே தங்கிவிட்டான்.

*2 சாமுவேல் 11:1*

இந்த இடத்தில் எப்பொழுதுமே கடவுளிடம் ஆலோசனை கேட்கும் தாவீது, தான் ஓய்வெடுக்கலாமா அல்லது போர்க்களத்துக்கு செல்லலாமா என்று ஆலோசனை கேட்டிருந்தால் அவன் போர்க்களத்துக்கு சென்றிருப்பான். மிகப்பெரிய பாவத்தை செய்யாமல் இருந்திருப்பான்.

அதுபோல கர்த்தருடைய ஆலோசனை கேளாமல் ஜனங்களை கணக்கீடு செய்தது மிகப்பெரிய மனித இழப்புகளை தன் ஜனங்களுக்கு ஏற்படுத்தி விட்டான்.

தாவீது கர்த்தருடைய கற்பனைகளை, வசனங்களை மிகவும் அதிகமாக நேசித்தவன். கர்த்தரை புகழ்ந்து பல கவிதைகளை எழுதியவன்.
மிகப்பெரிய ஆராதனை வீரன்.

ஆனாலும் கர்த்தருடைய சித்தத்தை அறியாமல், ஆலோசனைகளை கேட்காமல் செய்த தவறுகள் அவனுடைய வாழ்க்கையின் இன்னொரு பக்கம்.

இன்றைக்கு நம்முடைய ஆவிக்
குரிய வாழ்க்கையில் நமக்கு தேவைப்பட்டால் கடவுளிடம் ஆலோசனை கேட்போம்‌, மற்ற நேரங்களில் நம்முடைய விருப்பங்களையும் செயல்படுத்தி விடுவோம்.

நம்முடைய விருப்பங்கள் தேவனுக்கு பிரியமாக இருக்கிறதா என்பதை உறுதி செய்யாமல் செய்கிற காரியங்கள் சில நேரங்களில் மிகப்பெரிய இழப்புகளை நம்முடைய வாழ்க்கையில் ஏற்படுத்தி விடும்.

நம்முடைய இறையியல் கல்வியோ ஆராதனை வாழ்க்கையோ, அர்ப்பணிப்புள்ள ஊழியங்களோ எப்பொழுதும் நமக்கு பாதுகாப்பை அளிக்காது.

இந்த உலகத்தில் நமக்கு இருக்கிற ஒரே பாதுகாப்பு நாம் கடவுளின் சித்தத்தின் மத்தியில் இருந்து அவருடைய சித்தத்தை நிறைவேற்றுவது தான். இதற்கு எந்த மாற்று வழியும் கிடையாது.

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே இதை தெளிவாக சொல்லி இருக்கிறார். பிதாவின் சித்தத்தை நிறைவேற்றுவதற்காகவே அவர் இந்த உலகத்திற்கு வந்தார்.

நாமும் பிதாவின் சித்தத்தை நிறை வேற்றுவதற்காகவே அவருடைய பிள்ளைகளாக மாறி இருக்கிறோம்.

எனவே எல்லா நேரங்களிலும் அவருடைய ஆலோசனை கேட்டு அவருடைய சித்தத்தை செய்கிற மனிதன் வெற்றியுள்ள மனிதன்.

தேவன் நம்மோடு இருப்பது உண்மைதான். ஆனால் அந்தப் பெருமையோடு கடவுளின் ஆலோசனை கேட்காமல் எதையும் செய்யக்கூடாது.

பாவமே அறியாத தேவ பிரசன்னத்தில் வாழ்ந்த ஏவாள் கர்த்தர் தடை பண்ணின பழத்தை புசிக்க வேண்டும் என்று சாத்தான் ஆலோசனை சொல்லிய போது அந்த ஆலோசனை சரியா என்று கடவுளிடம் ஒரு வார்த்தை கேட்டிருந்தால் ஒரு மிகப்பெரிய அழிவை இந்த உலகத்திற்கு ஏவாள் ஏற்படுத்தியி ருக்க மாட்டாள்.

கடவுளின் சித்தத்தை, ஆலோசனைகளை நிறைவேற்றுவது போல் நமக்கு இந்த உலகத்தில் பாதுகாப்பான காரியம் வேறு ஒன்றும் இல்லை.