யோபுவின் புத்தகம் வேத பாடம் 25.
உங்கள் சிந்தனைக்கு.
யோபுவின் புத்தகம்
வேத பாடம் 25.
தியானிக்க வேண்டிய வேதப்பகுதி: யோபு 23:12
"அவருடைய உதடுகளின் கட்டளையை விட்டு நான் விலகினதில்லை; என் உணவைக் காட்டிலும் அவருடைய வாயின் வார்த்தைகளை நான் மதித்தேன்."
(யோபு 23:12)
மோசேயின் காலத்தில்தான் தேவனுடைய வார்த்தைகள் முதன்முறையாக எழுத்து வடிவில் பதிவு செய்யப்பட்டன. பல வேதாகம அறிஞர்களின் கருத்துப்படி, யோபு மோசேக்கு சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர். எனவே, *யோபு வாழ்ந்த காலத்தில் தேவனுடைய வார்த்தைகள் தோல் சுருள்களில் எழுதப்பட்டிருக்கவில்லை* . எழுதப்பட்ட வேதத்தை வாசிக்கும் வாய்ப்பு மோசேயின் காலத்திற்குப் பிறகே தேவனுடைய ஜனங்களுக்கு கிடைத்தது.
அப்படியானால், யோபு எவ்வாறு,
"என் உணவைக் காட்டிலும் அவருடைய வாயின் வார்த்தைகளை நான் மதித்தேன்"
"அவருடைய கட்டளைகளை விட்டு நான் விலகினதில்லை"
என்று கூற முடிந்தது?
இந்த வசனத்தை நாம் எவ்வாறு புரிந்துகொள்ள வேண்டும்?
1. காலகட்டப் பின்னணி
யோபு, மோசேயின் ஆகமங்களுக்கு (Torah) முந்தைய பிதாக்களின் காலத்தைச் (Patriarchal Period) சேர்ந்தவர் என்பது பல வேதாகம அறிஞர்களின் பொதுவான கருத்தாகும். ஆகவே, அவரிடம் எழுதப்பட்ட வேதாகமம் இருந்திருக்க வாய்ப்பில்லை.
2. " வார்த்தைகள்" என்பதன் பொருள்
*இங்கு "அவருடைய வாயின் வார்த்தைகள்", "உதடுகளின் கட்டளை" என்பவை* *எழுதப்பட்ட வேத நூலைக் குறிக்கவில்லை. அவை வாய்மொழியாகக்* *கொடுக்கப்பட்ட தெய்வீக வெளிப்பாட்டைக் (Oral Revelation) குறிக்கின்றன.*
ஆதாம், நோவா, ஏனோக்கு, ஆபிரகாம் போன்றோரின் காலத்தில் தேவனுடைய சித்தமும் கட்டளைகளும் தலைமுறை தலைமுறையாக வாய்மொழியாகக் கடத்தப்பட்டன என்பது பழைய ஏற்பாட்டு அறிஞர்களின் பொதுவான புரிதலாகும்.
யோபு புத்தகத்திலேயே இதற்கான சில சான்றுகளைக் காணலாம். உதாரணமாக, யோபு 1:5-ல் பலியிடுதல், யோபு 31-ஆம் அதிகாரத்தில் காணப்படும் உயர்ந்த ஒழுக்கநெறிகள் போன்றவை, அக்காலத்தில் தேவனுடைய சித்தம் மக்களுக்கு அறியப்பட்டிருந்ததை வெளிப்படுத்துகின்றன.
3. *நேரடியான தெய்வீக வெளிப்பாடு*
யோபுவுக்கு தேவன் தனிப்பட்ட முறையிலும் வெளிப்படுத்தியிருக்கலாம். யோபு 38–41 அதிகாரங்களில் கர்த்தர் புயலிலிருந்து யோபுவிடம் நேரடியாகப் பேசுகிறார்.
ஆபிரகாம், நோவா, ஈசாக்கு, யாக்கோபு போன்றோரிடம் தேவன் நேரடியாகப் பேசியது போல, யோபுவுக்கும் தேவனுடைய தனிப்பட்ட வெளிப்பாடு (Personal Revelation) கிடைத்திருக்கலாம்.
4. *வெளிப்பாடு முதலில், எழுத்து பின்னர்*
"வேதாகமம் முழுவதும் தேவ ஆவியினால் அருளப்பட்டது" (2 தீமோத்தேயு 3:16) என்பது, எழுதப்பட்ட வேதாகமத்தின் அதிகாரத்தைப் பற்றிய உண்மையாகும்.
ஆனால், தேவனுடைய வெளிப்பாடு ஆரம்பத்திலிருந்தே எழுத்து வடிவில் இருந்திருக்க வேண்டும் என்று அது சொல்லவில்லை. தேவன் முதலில் வாய்மொழியாகவும், நேரடியாகவும் தம்மை வெளிப்படுத்தினார். பின்னர், அந்த வெளிப்பாடு பரிசுத்த ஆவியானவரால் பாதுகாக்கப்பட்டு எழுதப்பட்ட வேதாகமமாக நமக்கு வழங்கப்பட்டது.
*எனவே, யோபு "தேவனுடைய வார்த்தைகளை உணவைவிட மேலானதாக மதித்தேன்" என்று கூறியது,* *அவனுக்குக்* *கிடைத்த வாய்மொழி மற்றும் நேரடியான தெய்வீக வெளிப்பாட்டையே குறிக்கிறது* .
நமக்கான எச்சரிக்கை
இன்று வேதாகமம் நம் கைகளில் உள்ளது. அச்சுப் புத்தகமாகவும், கைபேசிகளிலும், கணினிகளிலும் எளிதாகக் கிடைக்கிறது. எந்த நேரத்திலும் அதை வாசிக்கவும், தியானிக்கவும் நமக்கு வாய்ப்பு உள்ளது.
ஆனால், இந்த அரிய வாய்ப்பை நாம் எந்த அளவுக்கு பயன்படுத்துகிறோம்?
*யோபு எழுதப்பட்ட வேதாகமம் இல்லாத காலத்தில், தேவன் வெளிப்படுத்திய* *சத்தியங்களை மதித்து, அவற்றைத் தன் ஆவிக்குரிய உணவாக ஏற்றுக்கொண்டார்* .
*அப்படியானால், முழு வேதாகமத்தையும் கையில் வைத்திருக்கும் நாம், அதை எவ்வளவு ஆர்வத்தோடும்* *அன்போடும் வாசித்து, தியானித்து, கீழ்ப்படிகிறோம் என்பதை* *சிந்தித்துப் பார்க்க வேண்டும்.*
மற்றவர்களின் தியானங்கள் எவ்வளவு சிறந்ததாக இருந்தாலும், அவை நம்முடைய சொந்த வேத வாசிப்பிற்கு மாற்றாக இருக்க முடியாது. நாம் ஒவ்வொருவரும் தினமும் வேதாகமத்தைத் தனிப்பட்ட முறையில் வாசித்து, ஆராய்ந்து, அதன் வழியாக தேவனைச் சந்திக்க வேண்டும்.
வேதாகமத்தை ஆவிக்குரிய உணவாக உண்டு, அதன்படி வாழ்பவனே உண்மையான வேதமார்க்கத்தான்.
இன்று பல கிறிஸ்தவக் குடும்பங்களில் வேத வாசிப்பு அந்நியமான ஒன்றாக மாறிவிட்டது. இந்த நிலை மாற வேண்டும். தினமும் வேதாகமத்தை வாசித்து, தியானித்து, அதற்குக் கீழ்ப்படியும் வாழ்க்கையை நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.
" *Read the Bible carefully, and then meditate and meditate and* meditate."
— C. H. Spurgeon
தமிழாக்கம்:
*"வேதாகமத்தை கவனமாக வாசியுங்கள்; பின்னர் தியானியுங்கள், தியானியுங்கள்* , தியானியுங்கள்."
— சி. எச். ஸ்பர்ஜன்
*சிந்திக்க வேண்டிய உண்மை*
*யோபுவிடம் முழு வேதாகமம் இல்லை; இருந்த வெளிச்சத்திற்கு* *அவர் உண்மையாக இருந்தார். இன்று முழு வேதாகமமும்* *நம் கைகளில் இருக்கும்போது, அதற்கு நாம் எவ்வளவு முக்கியத்துவம்* *கொடுக்கிறோம்* ?