Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

*வேதப் பாடம் 9 எஸ்றாவின் புத்தகம்
உங்கள் சிந்தனைக்கு .

? *வேதப் பாடம் 9

எஸ்றாவின் புத்தகம்

எருசலேமில் தேவனுடைய ஆலயப் பணியை யார் நிறுத்தினர்?

மேலோட்டமாகப் பார்க்கும்போது, எருசலேமில் தேவனுடைய ஆலயப் பணிகள் பகைவர்களின் சதியால் நிறுத்தப்பட்டதாக தோன்றுகிறது.

எஸ்றா 4:1,5
இந்த வசனங்களில், பென்யமீன் மக்களின் பகைவர்கள் யூதர்களுக்கு எதிராகச் செயல்பட்டு, ஆலோசகர்களை கூலிக்கு அமர்த்தி, பெர்சிய அரசன்
கோரேஸின் ஆட்சிக்காலம்
முழுவதும், பின்னர் தரியு ஆட்சிக்காலம் வரையிலும் எதிர்ப்பு செய்ததாக நாம் வாசிக்கிறோம்.

இதனால் ஆலயப் பணிகள் நிறுத்தப்பட்டதாக நமக்கு தோன்றுகிறது.

உண்மையில், தேவன் பகைவர்களின் சதியை ஒரு கருவியாக பயன்படுத்தியிருக்கலாம்.

ஆனால் அதற்கு மேலாக ஒரு ஆழமான காரணம் வேதாகமத்தில் வெளிப்படுகிறது.

உள்ளார்ந்த காரணம் என்ன?

பாபிலோனில் 70 ஆண்டுகள் சிறையிருப்புக்குப் பின்பு, கி.மு. 538-இல், பெர்சிய அரசன் கோரேஸ் யூதர்களை தங்கள் தாய் நாட்டிற்கு திரும்ப அனுப்பினார்.

அவர்களை அனுப்பிய முக்கிய நோக்கம் —

தேவனுடைய ஆலயத்தை மீண்டும் கட்டுவது.

அந்தக் காலத்தில் வாழ்ந்த தீர்க்கதரிசிகள்:
ஆகாய்
சகரியா
மல்கியா

இதில் குறிப்பாக ஆகாய் தீர்க்கதரிசியின் புத்தகம், ஆலயப் பணிகள் ஏன் நிறுத்தப்பட்டன என்பதற்கான காரணத்தை தெளிவுபடுத்துகிறது.

ஆகாய் புத்தகம் வெளிப்படுத்தும் உண்மை.
ஆகாய் 1:1–10 வசனங்களைப் படித்தால், மக்கள் தேவனுடைய ஆலயத்தை கட்டுவதற்கு பதிலாக தங்களுடைய வீடுகளை அலங்கரித்து கட்டுவதில் ஈடுபட்டிருந்ததை காண்கிறோம்.

“என் ஆலயம் இடிபாடாய்க் கிடக்கையில் நீங்கள் மட்டும் உங்கள் அலங்காரமான வீடுகளில் வாழும் காலமா இது?”
(ஆகாய் 1:4)

“ மலைகளில் ஏறிப்போய் மரங்களை வெட்டிவந்து ஆலயத்தை கட்டுங்கள்;அதில் நான் மகிழ்ந்து, நான் கனம் பண்ணப்படுவேன்" .(ஆகாய் 1:8)

“என் ஆலயம் பாழடைந்து கிடக்கையில் நீங்கள் உங்கள் வீடுகளைப் பற்றியே அதிக கருத்தாய் இருக்கிறீர்கள்" (ஆகாய் 1:9)

இவ்வசனங்களில் தேவனுடைய பரிதாபமும் வேதனையும் வெளிப்படுகிறது.

அதனால், ஆலயப் பணியை பகைவர்கள் மட்டுமே நிறுத்தவில்லை;

மக்கள் தங்கள் சுயநலத்தினால் தேவனுடைய நோக்கத்தை புறக்கணித்ததால், தேவன் அவர்களை எதிரிகளின் கைகளில் ஒப்படைத்து அந்தப் பணியை நிறுத்த அனுமதித்தார்.

இன்றைக்கு தேவன் நமக்கு சொல்லும் பாடம்

தேவன் நம்மைத் தேர்ந்தெடுத்து ஒரு பெரிய நோக்கத்திற்காக வைத்திருக்கிறார்.

அந்த நோக்கம் —
சுயநலமில்லாமல் தேவனுடைய பணியில் ஈடுபட்டு, அவருடைய ராஜ்யத்தை விரிவாக்குவது.

ஆனால் இன்றைய சூழலில், பல விசுவாசிகளும் ஊழியர்களும் அர்ப்பணிப்பும் தியாகமும் இல்லாமல், தேவனுடைய ஆலயத்தை கட்டும் பணியில் ஈடுபடாமல், தங்கள் சொந்த வாழ்க்கை வளர்ச்சியிலேயே அதிக கவனம் செலுத்துகின்றனர்.

இதன் விளைவாக, தேவைகள் நிறைந்த இந்த தேசத்தில் தேவனுடைய பணிகள் சுணங்கிக் கிடக்கின்றன.

நமக்கான அழைப்பு
தேவனுடைய பணிகளில் சுயநலமில்லாமல் ஈடுபடுதல்
தேசத்திற்காக ஜெபித்தல்
தியாகமான வாழ்க்கை வாழ்தல்.

செல்வச் செழிப்பை மட்டும் தேவனுடைய ஆசீர்வாதமாகக் கருதாதிருத்தல்.

உலகத்தில் போர் மேகங்கள் சூழ்ந்து நிற்கும் இந்த காலகட்டத்தில், தேவனுடைய ராஜ்யப் பணிக்கு அர்ப்பணிப்போடு வாழ்வது நமக்குத் திணிக்கப்பட்ட பொறுப்பு.

சபையை கட்டும் பணியாக இருந்தாலும், அதில் ஈடுபடுகிறவர்கள் சுயநலமாக இருந்தால், தேவன் அவர்களைத் தனது கருவியாகப் பயன்படுத்த மாட்டார்.

முடிவுரை
ஆகாய் தீர்க்கதரிசன புத்தகத்தை இந்த கண்ணோட்டத்தோடு ஆராய்ந்து வாசித்தால், பல ஆழமான ஆவிக்குரிய உண்மைகள் நமக்கு வெளிப்படும்.

தேவன் தாமே தமது சபையை கட்டுகிற பணியின் அர்த்தத்தையும், அதில் நம்முடைய பங்கையும் நமக்கு தெளிவுபடுத்துவாராக.