நெகேமியாவின் புத்தகம் — வேதபாடம் 19* Expository Commentary on the Book of Nehemiah *சிதறிய முத்துக்கள் — 1*
*உங்கள் சிந்தனைக்கு.*
*
*நெகேமியாவின் புத்தகம் — வேதபாடம் 19*
Expository Commentary on the Book of Nehemiah
*சிதறிய முத்துக்கள் — 1*
*இந்தப் புத்தகத்தில் பரவலாகச் சிதறிக் கிடக்கும்* *சில சத்தியங்களை* இனி வரும் பதிவுகளில் பார்க்கலாம்.
அதிகாரம் 11:1-2 — இந்த இரண்டு வசனங்கள் சொல்லும் பாடம் என்ன?
"எருசலேமில் போய்த் தங்குவதற்கு முன்வந்தவர்களை எல்லா மக்களும் வாழ்த்தினார்கள்."
— நெகேமியா 11:2
ஏன் எருசலேமில் தங்குவதற்கு முன்வந்தவர்களை வாழ்த்த வேண்டும்?
எழுபது ஆண்டுகால சிறையிருப்பிலிருந்து தங்கள் தாய்நாட்டுக்குத் திரும்பிய யூதர்களில் அனேகர் எருசலேமில்ட தங்காமல், சுற்றியுள்ள கிராமங்களிலும் இடங்களிலும் குடியிருந்தார்கள்.
ஆலயம் கட்டப்பட்ட பிறகும், நகரின் மதில்கள் கட்டப்பட்ட பிறகும் அவர்கள் எருசலேமில் தங்க விரும்பவில்லை. காரணம் — எதிரிகளின் படையெடுப்பு எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்கிற பயம். தங்கள் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பாக அருகிலுள்ள
இடங்களில் குடி புகுந்தார்கள்.
தங்கள் யூத மக்களின் மையமாகவும் சிறப்பாகவும் காணப்படும் எருசலேம் ஆலயத்தையும் நகரையும் பாதுகாக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு அந்த ஜனங்களுக்கு இருந்தது. ஆனால் அதை உணராமல், தங்கள் பாதுகாப்பை முன்னிறுத்தி எருசலேமில் தங்க முன்வரவில்லை. தேவன் அவர்களை பாபிலோனிலிருந்து எருசலேமுக்குத் திரும்ப அனுமதித்த நோக்கத்தை புரிந்துகொள்ளாமல், சுயநலத்திற்காக தங்களுக்கு இஷ்டமான இடங்களில் தங்க ஆரம்பித்தார்கள். தலைவர்கள் மட்டுமே எருசலேமில் தங்கியிருந்தார்கள்.
எனவே மொத்த ஜனங்களில் பத்தில் ஒரு நபர் எருசலேமில் தங்க சீட்டு போட்டார்கள். அதே வேளையில் தாமாக முன்வந்து எருசலேமில் தங்கியவர்களை மக்கள் வாழ்த்தினார்கள்.
இதுதான் இந்த இரண்டு வசனங்களின் முக்கிய கருத்து.
இவை உணர்த்தும் பாடங்கள்:
1. நம்முடைய ஆண்டவருக்கு நம்முடைய உடலும் உழைப்பும் தேவை.
2. நம்மை தெரிந்துகொண்ட நோக்கத்தை புரிந்துகொண்டு அதற்கேற்றபடி நம்முடைய வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும். நம்முடைய அழைப்பிற்கும் ஊழியத்திற்கும் ஏற்றபடி வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ளாவிட்டால், தேவன் நம்மை அழைத்த நோக்கம் நம்மில் நிறைவேறாது.
3. நாம் எங்கே இருக்க வேண்டும், எங்கே தங்க வேண்டும், எங்கே குடியிருக்க வேண்டும் என்பதில் எல்லாம் தேவனுக்கு ஒரு நோக்கம் உண்டு. அதற்கேற்றபடி நம்முடைய வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ள வேண்டும் (அப்போஸ்தலர் 17:26).
4. கிறிஸ்தவ வாழ்க்கை என்பது ஒரு போர்க்களம். அந்தப் போர்க்களத்தில் நாம் எப்போதும் முன்னணியில் நின்று போரிடுகிற வீரர்களாக காணப்பட வேண்டும். ஆவிக்குரிய போராட்டத்தில் பின்னால் நின்று வேடிக்கை பார்க்கக் கூடாது.
*சிதறிய முத்துக்கள் — 2*
நெகேமியா 12:47 — இந்த வசனத்தின் அர்த்தம் என்ன?
சாலமோன் கட்டின மிகப் பிரமாண்டமான தேவாலயம் இடிக்கப்பட்டு, எழுபது ஆண்டுகள் பாபிலோனில் அடிமைப்பட்டிருந்த யூதர்களில் ஒரு குழுவினர் எருசலேமுக்கு வந்தனர். செருபாவேல் தலைமையில் மிகுந்த போராட்டத்திற்கு இடையிலும் தேவாலயம் அதே இடத்தில் கட்டப்பட்டது.
தேவாலயம் கட்டப்பட்டதால் மோசேயின் பிரமாணத்தின்படி ஆசாரியர்கள், லேவியர்கள், பாடகர்கள் நியமிக்கப்பட்டார்கள். ஆனால் அவர்களுடைய தேவைகளை சந்திக்க, பழைய ஏற்பாட்டின் சட்டதிட்டங்களின்படி தசமபாகமும் காணிக்கைகளும் யூதர்களால் செலுத்தப்பட வேண்டும்.
இந்தக் காரியத்தை நெகேமியா ஒழுங்குபடுத்தி, லேவியர்கள், ஆசாரியர்கள், பாடகர்கள் ஆகியோரின் தேவைகளை சந்திக்கும்படி ஏற்பாடு செய்தார்.
ஆலயம் கட்டப்பட்டாலும், ஆலயத்தில் பணிபுரிகிற பணியாளர்களின் தேவைகளை, ஆலயத்தினால் பலன் பெறுகிறவர்கள் சந்திக்க வேண்டியது அவர்கள் மேல் விழுந்த கடமை. அந்தக் கடமையை நெகேமியா நிறைவேற்றினார்.
அதுபோலவே இன்றைக்கும், எந்த ஊழியங்களினால் ஆன்மீக நன்மைகளை பெறுகிறோமோ, அந்த நன்மைகளுக்குக் காரணமானவர்களுக்கு நன்மை பெற்றவர்கள் உலக நன்மைகளால் திருப்பிச் செலுத்துவது அவர்கள் மேல் விழுந்த கடமை.
ஒரு சிறு துளி ஆன்மீக நன்மையை யாரிடம் பெற்றுக்கொண்டோமோ அவர்களுக்கு நம்மால் ஆன உலக நன்மைகளை அளிப்பது வேதத்தின்படி சரியான சத்தியம்.
ஆன்மீக நன்மைகளை செழிப்பாகப் பெற்றுக்கொண்டு அனுபவித்து, அதை நமக்கு அளித்தவர்களுக்கு எந்த நன்மையும் செய்யாமல் இருப்பது — அந்த நன்மையை நமக்கு வழங்கியவர்களுக்கு நாம் செய்யும் மிகப்பெரிய அநீதி.
எனவே ஊழியங்களை தாங்குவதும் ஊழியர்களை ஆதரிப்பதும் ஊழியத்தால் பலன் பெற்றவர்கள் மேல் விழுந்த கடமை என்கிற இந்த சத்தியத்தை இந்த வசனத்திலிருந்து நாம் அறிந்துகொள்ளலாம்.
இதுபோன்று இந்தப் புத்தகத்தில் காணப்படும் ஆவிக்குரிய முத்துக்களின் சிதறலை அடுத்த பதிவில் பார்க்கலாம்.